அடுத்து உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி!

 – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறியுள்ளது.

இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது.

நாகை, திருப்பூண்டி ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக 31 செ.மீ அளவு மழை பதிவாகி உள்ளது.

தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, அடுத்த சில மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வடதமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் 13-ம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவான பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடைந்து, மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் அதன் பிறகே, இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறுமா? அல்லது புயலாக மாறுமா என்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

You might also like