தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் (சிவப்பு எச்சரிக்கை) மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், ஓரிரு இடங்களில் அதிக கன மழை பெய்யக் கூடும்.

தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இதேபோல் நாளைகன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் (சிவப்பு எச்சரிக்கை) மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,

புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினர், கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்று (30) முதல் நவம்பர் 1-ம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தென்கிழக்கு அரபிக் கடலை ஒட்டிய தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்று (30) முதல் நவம்பர் 3-ம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like