எல்லை நிலப்பரப்பைப் பாதுகாக்க புதிய சட்டம்!

நம் அண்டை நாடான சீனா 14 நாடுகளுடன் 22 ஆயிரம் கி.மீ., நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதில், 12 நாடுகளுடன் எல்லை தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பூட்டானுடனான பிரச்சனைகள் மட்டும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகின்றன.

கிழக்கு லடாக்கில், கடந்தாண்டு மே மாதத்தில் சீன ராணுவத்தின் அத்துமீறி நுழையும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. அதையடுத்து, எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பல்வேறு கட்டுமான பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

அதே போல், 400 கி.மீ., நீள எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பூட்டான் உடனான எல்லையிலும் பல கட்டுமானப் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், சீனா புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. சீனாவின் பார்லிமென்டான தேசிய மக்கள் காங்கிரசில் இந்தப் புதிய சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 2022 ஜனவரி, 1 முதல் இது அமலுக்கு வருகிறது.

‘நாட்டின் இறையாண்மை மற்றும் நிலப்பரப்பு என்பது புனிதமானது மற்றும் மீற முடியாதது’ என, தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தில், “நாட்டின் எல்லை மற்றும் நிலப்பரப்பை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.

எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, எல்லைப் பகுதிகளில் புதிய கிராமங்கள் உருவாக்குவது உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளலாம்.

அங்கு மக்கள் வசிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் மேற்கொள்ளலாம்.

அண்டை நாடுகளுடன் உள்ள எல்லைப் பிரச்சனைகளுக்கு பேச்சின் மூலம் விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் எல்லைப் பிரச்சனை உள்ள நிலையில், இந்தப் புதிய சட்டத்தை சீனா நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கிழக்கு லடாக் எல்லையில், சீன படைகளுக்கு எதிராக நடந்த மோதலின்போது, சிறப்பாக செயல்பட்ட ஐ.டி.பி.பி. எனப்படும் இந்தோ – திபெத் எல்லை போலீஸ் படையைச் சேர்ந்த 20 வீரர்களுக்கு வீரதீர விருது வழங்கப்பட்டது.

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி இந்த விருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லியில் நேற்று நடந்த எல்லைப் படையின் 60-வது நிறுவன நாள் விழாவில், இந்த விருதுகளை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் அவர்களுக்கு வழங்கி கவுரவித்தார்.

அப்போது அவர், “இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் கூடுதல் பட்டாலியன் விரைவில் இணைக்கப்படும்” என்றார்.

You might also like