நவம்பர்-22ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 19ல் கூடியது. புதிய வேளாண் சட்டம், ‘பெகாசஸ்’ போன் ஒட்டு கேட்பு விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.

இதனால் கூட்டத் தொடரை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மழைக்கால கூட்டத் தொடர் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே ஆகஸ்ட்11ல் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரை வரும் நவம்பர் 22-ல் துவக்கி, டிசம்பர்-23 வரை ஒரு மாதம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாகவே நவம்பர் 15ல் கூட்டம் துவங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு நெறிமுறைகள் முன்பு போல தீவிரமாக இல்லாத காரணத்தால் உறுப்பினர்கள் பரிசோதனை சான்றிதழ் இன்றி சபைக்கு வர அனுமதிக்கப்படுவர் எனத் தெரிகிறது.

மழைக்கால கூட்டத் தொடரின் போது அமளியால் சபை நடவடிக்கையை முடக்கியதை போல, குளிர்கால கூட்டத் தொடரையும் முடக்க திரிணமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You might also like