மைதானத்தில் மலர்ந்த காதல்!

விளையாட்டுப் போட்டிகளின்போது ரசிகர்கள் தங்கள் காதலைச் சொல்வது, கடந்த சில நாட்களாக ஃபேஷனாகி வருகிறது.

டென்னிஸ், கால்பந்து மற்றும் கிரிக்கெட் தொடர்களின்போது பார்வையாளர் வரிசையில் உள்ள ரசிகர்கள், தங்களின் மனதுக்கு பிடித்தவர்களிடம் காதலைச் சொல்வதும், போட்டியை விட்டு அந்த காதல் தருணங்களை கேமராக்கள் படம்பிடிப்பதும் அடிக்கடி நிகழும் சம்பவங்களாக மாறி வருகின்றன.

அந்த வரிசையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போதும் ஒரு காதல் சொல்லப்பட்டிருக்கிறது.

இம்முறை காதலைச் சொன்னவர் விளையாட்டைப் பார்க்க வந்த ரசிகர் அல்ல. மாறாக போட்டியில் ஆடிய வீரரே தனது காதலைச் சொல்லியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பந்துவீச்சாளரான தீபக் சாஹர்தான் அந்த காதலர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும்  – பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி, தீபக் சாஹருக்கு அப்படி ஒன்றும் பெரிய மகிழ்ச்சியை அளிக்கவில்லை.

இப்போட்டியில் சென்னையை துவட்டி எடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணி, வெற்றி இலக்கான 135 ரன்களை 13 ஓவர்களிலேயே பெற்றது. தீபக் சாஹர் 4 ஓவர்களை வீசி 48 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.

இப்படி நேற்றைய தினம் தனக்கு கிரிக்கெட் மகிழ்ச்சி அளிக்காவிட்டாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தேட திட்டமிட்டுள்ளார் தீபக் சாஹர்.

போட்டி முடிந்ததும், பார்வையாளர்கள் அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்ற தீபக் சாஹர், அங்கு அமர்ந்திருந்த ஜெயா பரத்வாஜ் முன் ரோமியோ ஸ்டைலில் அழகாக மண்டியிட்டு காதல் மோதிரத்தை கொடுத்துள்ளார்.

கன்னத்தில் குழிவிழ, வெட்கத்துடன் சிரித்தபடியே அந்த மோதிரத்தைப் பெற்று தீபக் சாஹரின் காதலை ஏற்றுள்ளார் ஜெயா.

இதைத் தொடர்ந்து யார் இந்த ஜெயா பரத்வாஜ் என்ற கேள்வி, கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

டெல்லியில் உள்ள கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் ஜெயா பரத்வாஜ்,   எம்டிவியின் பிரபல தொகுப்பாளரான சித்தார்த் பரத்வாஜின் சகோதரி.

இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில்கூட சித்தார்த் பரத்வாஜ் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபக் சாஹர் இப்போதுதான் ஜெயாவிடம் காதலைச் சொல்லியிருக்கிறார் என்றாலும், இருவரும் கடந்த சில காலமாகவே நண்பர்களாக இருந்துள்ளனர். இந்த நட்பின் நெருக்கத்தாலேயே ஐபிஎல் தொடரைக் காண ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஜெயா சென்றுள்ளார்.

தீபக் சாஹரும் தனது கிரிக்கெட் நண்பர்களிடம் ஜெயாவை ஏற்கெனவே அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

இந்த சூழலில்தான் தற்போது மைதானத்தில் காதல் காட்சி அரங்கேறியுள்ளது.

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் ரிசர்வ் வீரராக தீபக் சாஹர் இடம்பெற்றுள்ளார்.

அதனால் ஐபிஎல் போட்டி முடிந்த பிறகும் அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்க வேண்டியுள்ளது.

இந்தச் சூழலில் உலகக் கோப்பை முடிந்து தீபக் சாஹர் இந்தியா திரும்பியதும் இருவருக்கும் இடையிலான திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

-பிரணதி

You might also like