சாகாவரம் பெற்ற நடிகன் நாகேஷ்!

நாகேஷ் பிறந்த தினத்தையொட்டிய பதிவு…

ஒரு நடிகனுக்கு, வசன உச்சரிப்பு அவசியம். முக பாவனைகள் மிக அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக பாடி லாங்வேஜ் எனப்படும் உடல்மொழி மிக மிக அவசியம்.

வசனம் பேசி, முகத்தில் உணர்ச்சியைக் காட்டி, உடல்மொழியிலும் அந்த உணர்வுகளை நமக்குக் கடத்துகிற நடிகர்கள் கலைஞர்கள்; மகா கலைஞர்கள். அப்படியான மகா கலைஞன் நாகேஷ்.

ஒல்லியான தேகம்தான். ஆனால் குண்டுராவ் என்பதுதான் இயற்பெயர். வேலை பார்த்துக் கொண்டே நாடகம், நாடகத்தில் நடித்தபடியே சினிமாவில் வாய்ப்பு தேடி அலைதல் என தொடர்ந்த முயற்சிகளும் முயற்சிகளின்போது பட்ட அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல.

ஆனாலும் அங்கே ஒன்று இங்கே ஒன்று என வாய்ப்புகள் வந்தன நாடகத்தில்.
கவிஞர் வாலியும் நாகேஷும் நண்பர்கள். ஓர் அறையில் இருவரும் தங்கியிருந்தார்கள்.

“டேய் ரங்கராஜா. உன் கைக்கு இந்த வாட்ச் நல்லா இல்லடா. கழட்டிரு” என்பார் நாகேஷ். அவரும் கழற்றித் தருவார்.

பிறகு அந்த வாட்ச் அடகுக் கடைக்குச் சென்று பணமாகி, ஹோட்டலுக்கும் சினிமாவுக்குமாகப் பயன்படுத்தப்படும்.

நாகேஷ் பாக்கெட்டில் காசு இருந்தால், அது வாலிக்கானது. இப்படித்தான் இருந்தார்கள்.

சினிமா தேவதை நாகேஷை இருகரம் கொண்டு வரவேற்றாள். படங்கள் வரத்தொடங்கின. நாகேஷின் நடிப்புத் திறனைக் கண்டு வியந்த கே.பாலசந்தர், தன் முதல் படத்தை இயக்கும்போது நாகேஷை நாயகனாக்கினார்.

‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷின் பண்பட்ட நடிப்பைக் கண்டு பாராட்டாதவர்களே இல்லை.

இதைத் தொடர்ந்து பாலசந்தர் தன் படங்களில், விதம்விதமான பாத்திரங்களைக் கொடுத்தார் நாகேஷுக்கு.

அது சின்ன கேரக்டரோ… பெரிய கேரக்டரோ… ஆனால் அங்கே அசத்தலான நடிப்பில் நம்மையெல்லாம் அசரடித்திருப்பார் நாகேஷ்.

எம்.ஜி.ஆருக்கு நண்பன், சிவாஜிக்கு நண்பன், ஜெமினிக்கு நண்பன், முத்துராமனுக்கு நண்பன், பிறகு ஜெய்சங்கருக்கு நண்பன் என்றெல்லாம் நடித்து வந்த நாகேஷ், ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிக்கு நண்பனாகவும் ‘பாமா ருக்மணி’ படத்தில் பாக்யராஜுக்கு நண்பனாகவும் கூட நடித்திருப்பார்.

அந்தக் காலத்தில், ஏவி.எம் படமாக இருந்தாலும் சரி, தேவர் பிலிம்ஸ் கம்பெனியாக இருந்தாலும் சரி, பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.பந்துலுவாக இருந்தாலும் சரி… ஏபி.நாகராஜனாக இருந்தாலும் சரி… முதலில் நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள்.

பிறகுதான் நடிகர்களுக்கு கதை சொல்லுவார்கள். “நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிட்டீங்களா. அப்ப படத்தோட வெற்றிக்கு நாப்பது சதவிகிதம் கியாரண்டி” என்று எம்.ஜி.ஆரே சொல்லிப் புகழ்ந்த சம்பவங்கள், வேறு எந்த நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத புகழாரம்.

‘எங்க வீட்டு பிள்ளை’ படம் முழுக்க, ஒவ்வொரு முறை பேசும் போதும், வார்த்தையை மாற்றி மாற்றிப் பேசி காமெடி பண்ணுவார்.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வைத்தி எனும் கேரக்டரும் ‘திருவிளையாடல்’ படத்தின் தருமி எனும் கதாபாத்திரமும் சாதாரணன் மிகப்பெரிய நடிகனாகிற ‘சர்வர் சுந்தரம்’ படமும் சினிமாப் படமெடுக்கிற ஓஹோ புரொடக்‌ஷன்ஸ் ‘காதலிக்க நேரமில்லை’ செல்லப்பாவும் கற்பனையில் இருந்து நிஜமாகவே உருவெடுத்து உலவவிட்டதில் நாகேஷின் நடிப்புக்கும் உடல்மொழிக்கும் பெரும்பங்கு இருக்கிறது.

மாடிப்படி மாது (எதிர்நீச்சல்)வை எவராலும் மறக்கவே முடியாது. ’பாமா விஜயம்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘நூற்றுக்கு நூறு’, ‘ஊட்டி வரை உறவு’ என நடித்த படங்களைப் பட்டியலிடுவது அசாதாரணம்.

ஒருகட்டத்துக்குப் பிறகு, மீண்டும் எண்ட்ரியானார் நாகேஷ். அதுவும் எப்படி. நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக நடித்தவர் வில்லனாக நடித்தார்.

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன் முத்திரையைப் பதித்துவிடுகிற, தனி முத்திரை பதித்துவிடுகிற மகா கலைஞன், நகைச்சுவை நாயகன் நாகேஷ் சாகாவரம் பெற்ற கலைஞன்.

பூமியும் வானமும் உள்ளவரை பூமிக்கும் வானுக்குமாக விஸ்வரூபமெடுத்து நின்றிருப்பார் நாகேஷ். மக்கள் மனங்களின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார்.

அடைமொழி கூடிய சினிமா உலகில் நாகேஷுக்கு எந்த அடைமொழியும் இல்லை என்பது ஆச்சரியம்தான். ஆனால் என்ன… நகைச்சுவையின் இன்னொரு பெயர் நாகேஷ் என்கிறது சினிமா டிக்‌ஷனரி.

துக்கங்களையும் கஷ்டங்களையும் மறக்கடித்து, நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைத்தவர் மகா நடிகன் நாகேஷ்.

– நன்றி முகநூல் பதிவு

You might also like