பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்தாண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பள்ளிகள் திறந்ததும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய கல்வி அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிகளை வெளியிட்டுள்ளது.

அதில், “வைரஸ் பரவல் காரணமாக, படிப்பை பாதியில் நிறுத்தியோர், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களை அடையாளம் காண்பதற்கு, வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

படிப்பை நிறுத்தியுள்ளோரை பள்ளிகளில் மீண்டும் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறந்தவுடன், இழந்த காலத்தை கணக்கில் எடுத்து, பாட திட்டங்களைக் குறைத்து கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்ய வேண்டும்.

‘ஆன்லைன்’ வகுப்புகள் நடத்த முடியாத கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில், டிவி, ரேடியோ போன்றவை மூலம் பாடங்கள் கற்றுத்தர வேண்டும்.

வாய்ப்புள்ள பகுதிகளில், நடமாடும் பள்ளிகளை நடத்தலாம். மாணவர்களை சிறு குழுக்களாக பிரித்து பாடம் கற்பிக்கலாம்.

பள்ளி மூடப்பட்டுள்ள காலம் மற்றும் மீண்டும் திறக்கும்போது, மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்க முடியாத பாடங்கள் தொடர்பான அறிவை பெறுவதற்கு, வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

11.01.2021 – 12.14  P.M

You might also like