ஜனவரி 3-வது வாரத்தில் பள்ளிகளைத் திறக்க திட்டம்!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.

ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகளவில் இருந்ததால் பள்ளிகளைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி வழியாக பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

கடந்த நவம்பர் மாதம் பள்ளிகளைத் திறக்க அரசு திட்டமிட்ட நிலையில், பெற்றோர்களிடம் கருத்து கேட்டதில் பெரும்பாலான பெற்றோர்கள் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும், கல்வியை விட மாணவர்களின் நலன்தான் முக்கியம் என்றும் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அப்போது பள்ளி திறப்பது தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தனியார் பள்ளி சங்கத்தினர் சார்பில் பள்ளிகளை திறக்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

மாணவர்கள் நலன் மட்டுமின்றி லட்சக்கணக்கான ஆசிரியர்கள் குடும்பமும் பாதிக்கப்படுவதால் பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள், கடற்கரை மற்றும் பொழுது போக்கும் இடங்கள், சுற்றுலா மையங்கள், அரசியல், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்துவதில் அரசு தளர்வு செய்ததையடுத்து, பள்ளிகளையும் திறக்கலாமா என ஆலோசித்து வருகிறது.

இதனிடையே 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் திறப்பதா? வேண்டாமா? என்று முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலே‌ஷன், சி.பி.எஸ்.சி. என அனைத்து பள்ளிகளும் 8-ம் தேதிக்குள் பெற்றோர்களிடம் விருப்பத்தை கேட்டறிந்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அறிவித்தார்.

இதன்காரணமாக தமிழகம் முழுவதும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்து இருந்தனர்.

ஒரு சிலர் மட்டும்தான் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பிறகு திறக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் கடைசி 3 மாதங்களாவது பள்ளியில் கல்வி கற்க வேண்டும். உரிய சமூக இடைவெளியைப் பின்பற்றி பாதுகாப்புடன் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பெற்றோர் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.

இன்றும் நாளையும் கருத்துக்கள் கேட்கப்பட்டு மாவட்டம் வாரியாக பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பப்படும். அதன்பின்னர் அரசுக்கு அவை சமர்ப்பிக்கப்படும். அதனை தொடர்ந்து பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முடிவு எடுத்து அறிவிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நாளை மாலை வரை பெற்றோர்கள் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

இதுவரையில் வந்த தகவலின் அடிப்படையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கலாம் என பெரும்பாலான பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த கருத்துக்களையும் சேகரித்து அதன் சாராம்சத்தை அரசுக்கு நாளை அல்லது நாளை மறுநாள் தெரிவிப்போம். முதலமைச்சர் உயர்மட்ட குழுவினருடனும், மருத்துவ குழுவினருடனும் கலந்து பேசி பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பை வெளியிடுவார். இந்த மாதம் 3-வது வாரத்தில் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது” எனக் கூறினார்.

07.01.2021 05 : 05 P.M

You might also like