உலகப் பாகுபாடு ஒழிப்பு தினம் சொல்வது என்ன?

மார்ச் – 1:  உலக பாகுபாடு ஒழிப்பு தினம் 

உலக அளவில் உள்ள பாகுபாடுகளை ஒழித்து உலக மக்களின் மரியாதையான வாழ்க்கையை உறுதிப்படுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

அதே போல், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடுகளையும் ஒழிக்க இந்த தினத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டு அறைகூவல் விடுக்கப்படுகிறது.

நீங்கள் குறிப்பிட்ட நிறம், மதம், இனம், மொழி என்பதை சேர்ந்தவர் என்பதற்காகவே உங்களை யாரோ வாழ விடாமல் செய்கிறார்கள் என்றால், உங்களுக்கான உரிமைகளை மறுக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு அநியாயம்.

ஆனால், நிலவில் தண்ணீர் தேடும் டிஜிட்டல் யுகத்திலும் சாதி, மதம், மொழி என சொல்லி மனிதர்களின் மீது காட்டப்படும் பாகுபாடுகள் மட்டும் குறையவே இல்லை.

தண்ணீர்த் தொட்டியில் மலம், தனிசுடுகாடு, சிறுபான்மை எதிர்ப்பு, மாற்று பாலினத்தவர்கள் வெறுப்பு, HIV பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்குதல் என நாளுக்கு நாள் மாறும் டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்றவாறே பாகுபாடும் நவீன முறையில் மாறி கொண்டே இருக்கிறது.

இதுபோன்ற விதவிதமான பாகுபாடுகளை எதிர்க்கவே உலக பாகுபாடுகள் ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

உலக பாகுபாடு ஒழிப்பு தின வரலாறு!

முதன்முதலில் 2014-ம் ஆண்டு ஐ.நா. சபையின் அங்கமான UNAIDS என்ற அமைப்பு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மீது காட்டப்படும் பாகுபாட்டை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும்,

அவர்களும் அனைவரை போலவும் மரியாதையான வாழ்க்கையை நடத்துவதற்கான பாதுகாப்பை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் எனவும் கடைப்பிடிக்கப்பட்டது.

இதே தற்போது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு விதமான பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்றும் அனைத்து மக்களுக்கும் மரியாதையான வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் வித விதமான தலைப்பில் இந்த தினத்தை கடைபிடித்து வருகிறது.

உலக பாகுபாடு ஒழிப்பு தினம் 

உலக அளவில் பல்வேறு நாடுகளில் உள்ள குற்றவியல் சட்டங்கள் மனித மாண்புகளை சிதைப்பதாகவும், மனிதர்கள் சுயமரியாதையோடு வாழ்வதைத் தடுப்பதாகவும் UNAIDS கூறுகிறது.

எனவே, இந்தச் சட்டங்களை ஒழிப்பதன் மூலமே மக்கள் பாகுபாடு இல்லாமல் வாழ முடியும்.

பல்வேறு நாடுகளின் பாகுபாடுகள்

உலக பாகுபாடு ஒழிப்பு தினம் குறித்து கடந்த 2023-ல் UNAIDS வெளியிட்டுள்ள அறிக்கையில்,  HIV பரவுதலை இன்றும் 134 நாடுகள் குற்றமாக கருதுவதாகக் கூறப்பட்டுள்ளது.

20 நாடுகள் திருநங்கைகளுக்கு எதிரான குற்றவியல் நடைமுறைகளையும், 153 நாடுகள் பாலியல் தொழிலுக்கு எதிரான குற்றவியல் நடைமுறைகளையும்,

67 நாடுகள் தன்பாலின உறவுக்கு எதிரான குற்றவியல் நடைமுறைகளை கொண்டுள்ளதாகவும் UNAIDS கூறியுள்ளது.

அதேபோல், 48 நாடுகள் எய்ட்ஸ் உள்ள மக்களை தன்னுடைய எல்லைக்குள்ளேயே அனுமதிக்காமல் இருப்பதாகவும்,

53 நாடுகள் குறிப்பிட்ட வேலை அல்லது திருமணத்திற்கு HIV டெஸ்ட் எடுப்பதை கட்டாயமாக வைத்திருப்பதாகவும்,

106 நாடுகளில் பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் வயது வந்தவர்கள் கூட HIV டெஸ்ட் எடுக்க முடியாத நிலை நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பாகுபாட்டை ஒழிப்போம்!

மேற்குறிப்பிட்ட பல்வேறு காரணங்களால் உலக மக்கள் சுயமரியாதையான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, இந்த குற்றவியல் சட்டங்களை ஒழிப்பதன் மூலம் மக்களுக்கான சிறந்த வாழ்க்கையை நம்மால் உறுதி செய்ய முடியும்.

அதே சமயம் எய்ட்ஸ் நோயுக்கும் ஒரு முடிவு கட்ட முடியும் என UNAIDS அறைகூவல் விட்டுள்ளது.

– சுபாஷ் சந்திர போஸ்

நன்றி : சமயம்

You might also like