சிறையிலிருந்த சின்ன அண்ணாமலையை மீட்ட மக்கள்!

பத்திரிகையாளர் ப்ரியன்

சுதந்திரப் போராட்ட வீரர், பதிப்பாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட தயாரிப்பாளர், அரசியல்வாதி, நகைச்சுவை பேச்சாளர், என்று பன்முகச் சிறப்புகளுடன் வாழ்ந்து மறைந்தவர் சின்ன அண்ணாமலை. 2020 அவருடைய நூற்றாண்டு (18-06-1920).

ஒரு கைதியை, சிறையை உடைத்து மக்களே மீட்டெடுத்துக் கொண்டு போன நிகழ்வை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் தான் சின்ன அண்ணாமலை. 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் சிறை பிடிக்கப்பட்ட அண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒரு நாள் நள்ளிரவில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், சிறையை உடைத்து அண்ணாமலையை மீட்டனர். அப்போது நடந்த கலவரத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலர் இறந்தனர்.

அண்ணாமலைக்கு கையில் காயம். அந்த காயத்தோடு திருச்சி வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு சென்னை வழியாக காசிக்குச் சென்று தலைமறைவானர் அவர்.

அந்த வழக்கில் அண்ணாமலைக்கு நான்காண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ராஜாஜி அவர்கள் அண்ணாமலைக்காக வாதாடி தண்டனையை ஆறு மாதங்களாகக் குறைத்தார்.

அண்ணாமலை எப்படி சின்ன அண்ணாமலை ஆனார்? இதற்கும் ராஜாஜி தான் காரணம்.

1940 களில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு நிதியுதவி வழங்க தமிழன்பர்கள் முடிவு செய்தனர். அதற்காக முழுமூச்சுடன் பாடுபட்டு பெருமளவு பண வசூல் செய்தவர் அண்ணாமலை.

நிதி வழங்கும் விழாவில் அண்ணாமலையை ‘ஒஹோ’வென்று பாராட்டிப் பேசினார் ராஜாஜி. அன்று அந்த மேடையில் ராஜா அண்ணாமலை செட்டியார் மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த நா.அண்ணாமலை ஆகியோரும் இருந்தனர்.

எனவே அவர்களிடமிருந்து அண்ணாமலையை வித்தியாசப்படுத்தி காட்ட அவரை ‘சின்ன’ அண்ணாமலை என்றழைத்தார் ராஜாஜி. அந்த பெயரே கடைசி வரை அவருக்கு நிலைத்து விட்டது.

நாமக்கல் கவிஞருக்கு, முதல்வர் ஓமந்தூராரிடம் அழுத்தம் கொடுத்து, ‘அரசவைக் கவிஞர்’ பட்டம் வாங்கி கொடுத்தவரும் சின்ன அண்ணாமலை தான்.

சென்னையில் ‘தமிழ் பண்ணை’ என்ற பதிப்பகத்தைத் துவக்கினார். ராஜாஜி ,கல்கி, வ.ரா., டி.எஸ்.சொக்கலிங்கம், தி.ஜ.ர. என்று பிரபலமானவர்களின் படைப்புகளை நேர்த்தியாக வெளியிட்டார்.

புதிய புத்தகம் வெளியிடும்போது, ஒரு விளம்பர யுக்தியாக, அந்த புத்தகத்தின் ஹைலைட்டான பகுதிகளை கரும்பலகையில் எழுதி வெளியே வைத்து விடுவார்.

‘வெள்ளிமணி’ என்ற பத்திரிகையை ஆரம்பித்து அதற்கு சாவியை ஆசிரியராக நியமித்தார். இவர்களிருவரும் இணைந்து நாடெங்கிலும் தாராசிங் – கிங்காங் மல்யுத்தப் போட்டிகளை நடத்தினார்கள். பரபரப்பாக நடந்த அந்த போட்டிகள் பணமழையை கொட்டிற்று.

ராஜாஜியின் பரிந்துரையின் பேரில் காந்தி அவர்கள் தான் நடத்தி வந்த ‘ஹரிஜன்’ பத்திரிகையைத் தமிழில் நடத்த சின்ன அண்ணாமலைக்கு அனுமதி வழங்கினார்.

அது மட்டுமல்லாமல் திருவாடனை ஜெயில் உடைப்புச் சம்வத்தைக் கேள்விப்பட்டு ‘அப்படியா’ என்று ஆச்சரியப்பட்டுப் போனார் காந்தி. காந்தியை வைத்தே ‘தமிழ் ஹரிஜன்’ பத்திரிகையை வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்தார் அவரது முரட்டு பக்தரான சின்ன அண்ணாமலை.

காங்கிரஸில் ‘தீ’ போன்று பணியாற்றியவர். நடிகர் சிவாஜி கணேசன் அப்போது காங்கிரஸில் இருந்தார். கட்சி வளர்ச்சிக்காக அவரது ரசிகர்களை ஒருங்கிணைத்து ‘சிவாஜி ரசிகர் மன்ற’த்தை துவக்கியதும் சின்ன அண்ணாமலை தான்.

மேடையில் தி.மு.கவை இவர் நகைச்சுவை இழையோட கடுமையாகத் தாக்கினாலும் அண்ணாவுக்கு இவர் மேல் பாசமுண்டு. அண்ணாமலையின் பேச்சை அண்ணா ரசிப்பார்.

அண்ணா முதல்வராக இருந்தபோது திருச்சியிலிருந்து சென்னைக்கு அவருடன் ரயிலில் பயணம் செய்தார் சின்ன அண்ணாமலை. நீண்ட நேரம் அவர்களிருவரும் பேசிக்கொண்டே வந்தார்கள்.

அண்ணா: “67 தேர்தலில் காங்கிரஸ் தோற்றதற்கு காரணம் என்ன?”

சின்ன அண்ணாமலை: “உங்களை 62 தேர்தலில் காஞ்சிபுரத்தில் தோற்கடித்தது தான் காரணம்”

அண்ணா: எப்படி?

சி.அ: “நீங்கள் தோல்வி அடைந்ததால் தான் ஒரு வெறியோடு பணியாற்றி பரம எதிரியான ராஜாஜியுடன் இணைந்து காங்கிரஸை தோற்கடித்தீர்கள். வெற்றி பெற்றிருந்தால் எதிர்க்கட்சியாகவே தொடர்ந்து இருந்திருப்பீர்கள் என்பது என் கருத்து”

அண்ணா: “நீங்கள் சொல்வது மனித இயல்பை ஒட்டிய சங்கதி தான்”

“காலையில் அண்ணாவிடம் விடைபெற்று வந்தபோது அவரைப் பற்றி எனக்குள் இருந்த துவேஷ எண்ணம் ஸ்டேஷனை விட்டு ரயில் போனதைப்போல இதயத்தை விட்டு பறந்து விட்டது” என பதிவு செய்திருக்கிறார் சின்ன அண்ணாமலை.

‘தங்கமலை ரகசியம்’, ‘திருடாதே’ மற்றும் பல படங்களைத் தயாரித்தவர். சரோஜா தேவியை தனது படத்தில் அறிமுகப்படுத்தியவர்.

ராஜாஜி-கல்கி இருவரையும் இரு கண்களாக பாவித்தவர் சின்ன அண்ணாமலை. கல்கியின் பொதுப் பணிகளில் – எட்டயபுரம் பாரதி மண்டபம் கட்டியது உட்பட அவருக்கு உதவியாக இருந்தார்.

சின்ன அண்ணாமலை மனைவி ராஜாஜியின் மீது தெய்வீக பக்தி கொண்டிருந்தார். உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவர் ராஜாஜி இறந்த அன்று தான் மரணமடைந்தார்.

ஆனால் சின்ன அண்ணாமலையின் மரணம் மறக்க முடியாதது.

அவரது மணிவிழா நிகழ்ச்சியில் வாழ்த்த குழுமியிருந்த நண்பர்கள், உறவினர்கள் சாட்சியாக, தலையில் அபிஷேக நீர் ஊற்றப்படும்போது உயிர் பிரிந்தது.

அன்று சின்ன அண்ணாமலை அனைவருக்கும் கொடுத்தது பெரிய அதிர்ச்சி.

You might also like