இனி முற்றத்திலும் முகம் பார்க்கலாம்!

கவிஞர் மு.முருகேஷ்

சென்னையில் பல இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து செயலாற்றிவந்தாலும், ஹைக்கூ கவிதைகள் பற்றிப் பகிர்ந்துகொள்வதற்குத் தளமேதுமில்லையே என்கிற என் நெடுநாள் கனவினை நனவாக்கும் வகையில் அன்புக் கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கத்தின் முன்னெடுப்பில் ‘ஹைக்கூ முற்றம்’ எனும் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

’ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் தொடக்கவிழா மற்றும் கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் எழுதிய ஹைக்கூ நூல் வெளியீட்டு விழாவும் கடந்த ஜூன் 7 அன்று அண்ணா நகரிலுள்ள நான் ஓர் ஐஏஎஸ் அகாதெமி அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஓவியக் கவிஞர் அமுதபாரதி தலைமையேற்க, ’ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் இலட்சினையை அறிமுகம் செய்தும், ‘கருவானிலொரு சிறு கீறல்’ ஹைக்கூ நூலினை வெளியிட்டும் காவல் கண்காணிப்பாளரும் கவிஞருமான மணி சண்முகம், ஐபிஎஸ் உரையாற்றினார்.

ஹைக்கூ நூலினைப் பெற்றுக்கொண்ட கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன் வாழ்த்துரைக்க, கவிஞர் தமிழ் இயலன், ஹைக்கூ நூல் குறித்துப் பேசினார்.

பின்னர் நடைபெற்ற ஹைக்கூ வாசிப்பரங்கில் தொடக்கக் கவிதையை கவிஞர் கருமலைப்பழம் நீ வாசித்தார்.

முனைவர் ரா.பாஸ்கரன், ஸ்ரீநிவாஸ் பிரபு, ப்ரியா ஜெயகாந்த், சாந்தி சரவணன், ஜி.சோமசுந்தரி, வசந்தா சுவாமிநாதன், சீ.பாஸ்கர், அகலவன், ழகரம், இரா.நாகராஜன், ஆ.தீபக் கண்ணா, நன்மாறன், தென்னவன், கு.அசோகன், கெளரிசங்கர், மகிழை.சிவகார்த்தி,

ஞால.ரவிச்சந்திரன், ஹாரிங்டன் ஹரிஹரன், க.இராசன் பிரசாத், கு.கஜபதி, வ.ரகுநாத், முத்துக்குமாரசாமி உலகநாதன் ஆகியோர் ஹைக்கூ வாசிப்பைத் தொடர, நிறைவுக் கவிதையை கவிஞர் குமரி அமுதன் வாசித்தார்.

சிறப்பான கவிதைகளை வாசித்த 5 கவிஞர்களுக்குப் புத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், திரைப்படப் பாடலாசிரியர் சங்கத்தின் தலைவர் கவிஞர் தமிழமுதன், டாக்டர் எழிலரசி, எழுத்தாளர் சந்துரு மாணிக்கவாசகம், கவிஞர்கள் பாலமுரளி வர்மன், ரமணிதேவி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இனி மாதந்தோறும் முதல் அல்லது இரண்டாவது சனிக்கிழமை மாலையில் ‘ஹைக்கூ முற்றம்’ நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்துவது என்றும், அதில் ஹைக்கூ கவிதை வாசிப்பு, ஹைக்கூ நூல் அறிமுகம், ஹைக்கூ பகிர்வு, ஹைக்கூ பயிற்சி ஆகிய நிகழ்வுகளை முன்னெடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

நிறைவாக, ‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பாளர் கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் நன்றி நவின்றார்.

தனிப்பட்ட அழைப்பில்லாமலேயே ஹைக்கூ கவிஞர்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்வில் கலந்துகொண்டது வரவேற்கத்தக்கது.

You might also like