கருப்பு வெள்ளைப் படத்தை நெடுநாள் கழித்துப் பார்க்கும் அனுபவம்!

நூல் அறிமுகம்:
“நான் தலையங்கம் படிப்பதற்காகவே வாங்குகிறேன்.”
“நான் தில்லானா மோகானாம்பாள் தொடர்கதைக்காக.”
“நாங்க வாங்கறது அதுல வர்ற பயணக் கட்டுரை, ஆன்மிக தகவலுக்காக.”
“நாங்களா.. பளிச்னு சொல்லணும்னா கோபுலுவுக்காக!”
கடைசி பதிலுக்குச் சொந்தமானவரின் வாழ்க்கை அனுபவ நூல் இது.
விகடனில் எல்லாமுமாக நிறைந்து விளங்கியவர் கோபுலு. சொல்லப்போனால் தமிழ் வாசகர்கள் பலர், ஹாஸ்யத்தை உணர்ந்துகொண்டதே கோபுலுவின் கார்ட்டூன்களில் இருந்துதான் என்று சொல்லலாம்.
ஓவியத்தில் ஆர்வமுள்ள குறும்பான சிறுவன், கும்பகோணம் ஓவியக் கல்லூரியின் மாணவன், மாலியின் சீடர், ஜோக் காட்டூனிஸ்ட், பக்தி ரசம் சொட்டும் ஓவியர், அரசியல் கார்ட்டூனிஸ்ட், வாசனின் மனம் கவர்ந்தவர், அட்வர்டைசிங் ஆர்ட் டைரக்டர், அட்வேவ் நிறுவனர், மென்மையான மனிதர் கோபுலுவின் வாழ்க்கையை இப்படி தசாவதாரமாகப் பிரிக்கலாம்.
ஒவ்வொரு அவதாரத்திலும் அவரது அனுபவங்கள் அனைத்தும் மறக்க முடியாத இனிமையான பதிவுகள். வரலாறு என்றுகூடச் சொல்லலாம்.
ஓவியர் கோபுலுவின் வாழ்க்கையை அவரது எழுத்திலேயே படிப்பதென்பது, ஓர் அருமையான கருப்பு வெள்ளை திரைப்படத்தை நீண்ட நாள் கழித்துப் பார்க்கும் ஏகானுபவம்!
********
நூல்: கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை!
ஆசிரியர்: S. சந்திரமௌலி
கிழக்குப் பதிப்பகம்
விலை: ரூ.60/-
You might also like