தமிழகத்தில் பழங்குடி மக்கள்!

நூல் அறிமுகம்:

1991-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி தமிழகத்தில் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 5,74,194 ஆகும். அப்போதையத் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் (55.86 மில்லியன்) 19.18 விழுக் காட்டினர் (10.71 மில்லியன்), ஆதிதிராவிடர்கள் 1.03 விழுக்காட்டினர் (0.57 மில்லியன்) பழங்குடி மக்களாவார்கள்.

1981ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குடன் ஒப்பிட்டால் ஆதிதிராவிடர்கள் 0.83 விழுக்காடு அதிகரித்துள்ளனர். (18.35 (1981) 19.1 (1991) பழங்குடி மக்கள் 0.04 விழுக்காடு குறைந்துள்ளனர்.

(1.07 (1981) 1.03 (1991) ஆதிதிராவிடர்களும் பழங்குடி மக்களும் (19.18+1.03=20.21%) தமிழகத்தின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் 1. அதியன், 2. அரநாடன், 3. இரவல்லான் 4. இருளர், 5.காடர்,6. கம்மாரா, 7. காணிக்காரன், 8. கணியன் 9. காட்டுநாயக்கன், 10. கொச்சுவேலன், 11. கொண்டகாபஸ், 12. கொண்டாரெட்டி 13. கோரகா 14. கோரா 15. குடியா 16. குறிச்சன், 17. குறும்பர் 18. குறுமன் 19. மகாமலசர் 20. மலை அரையன், 21. மலைப்பண்டாரம். 22. மலைவேடன், 23. மலைக்குறுவன் 24. மலயக்கண்டி, 25. மலசர் 26. மலையாளி 27. மன்னன் 28. முதுகர் அல்லது முதுவன் 29. முத்துவன் 30. பள்ளேயன் 31. பள்ளியன் 32. பள்ளியர் 33. பணியன் 34. சோலகா 35. தோடா 36. ஊராளி என்று அழைக்கப்படுகின்றனர்.

பழங்குடி மக்கள் :

பழங்குடி மக்கள் என்பதற்குப் பழமையான குடிகள் என்று பொருள் கொள்கின்றனர். தமிழ் லெக்சிகனில் (தொகுதி 2, ப.968) குடி என்பதற்குக் குடியானவன், குடியிருப்போர், குடும்பம். கோத்திரம், குலம், வீடு, ஊர், வாழ்விடம் என்று ஒன்பது பொருள்கள் தரப்பட்டுள்ளன.

நாடோடியாக இல்லாமல் வாழ்வை ஓரிடத்தில் அமைத்துக் கொண்டவர்கள் எனும் கருத்து குடி என்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது பொருள்களுக்குள்ளும் பொதிந்துள்ளதை உணரலாம்.

அவ்வாறாயின் நிலைத்த குடியிருப்பை ஓரிடத்தில் அமைத்துக் கொண்ட பழமையான மக்கள் பழங்குடி மக்கள் என்று பொருள் கொண்டால்.

சமுதாயத்தின் வளர்ச்சிக் கட்டங்களுள் நிலைத்தக் குடியிருப்பை மேற்கொள்வதற்கு முன்னர் நாடோடிகளாகக் குறிஞ்சியிலும் முல்லையிலும் நெய்தலிலும் வாழ்ந்த மக்களைப் பழங்குடி மக்கள் என்றழைக்க இயலாது.

எனவே, நிலைத்த குடியிருப்பை மேற்கொண்ட மக்கள் நாகரிக வாழ்வின் வட்டத்திற்கு வந்துவிடக் கூடியவர்களாகிறார்கள்.

அவ்வாறாயின் பழங்குடி மக்கள் என்பதற்குப் பழமையான குடிமக்கள் என்பதை விடவும் குடிமக்களாவதற்கும் முற்பட்ட பழையகாலத்தின் வாழ்க்கையை உடையவர்கள் என்று பொருள் கொள்வதே பொருத்தமாகும்.

நிலவியல் அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் அவ்வக் காலத்தில் நிலவும் முக்கிய உணவு உற்பத்தியில் பங்கு வகிக்காதவர்கள் நாளடைவில் தனித்த வாழ்க்கையுடையவர்களாக, சமுதாய மாற்றத்திற்கு ஆட்படாதவர்களாக மாறி விடுகிறார்கள்.

அதனால் உணவுப் பொருளைச் சேகரிப்பது, வேட்டையாடுவது என்ற நிலையோடு தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டவர்கள், உணவுப் பொருளை உற்பத்தி செய்யும் வாழ்க்கைமுறை உடையவர் களுடன் ஒன்றுபடமுடியாமல் விலகிப் போயிருக்கின்றனர்.

பாறையிலும் பிற பொருள்களிலும் எழுதிவந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத் தொடங்கியது தொழிற்நுட்பம் மிக்க ஒரு கலையின் காலம். அவ்வாறு எழுதப்பட்டவை எழுத்தோலைகள் அல்லது சுவடிகள் என அழைக்கப்படுகின்றன.

ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய இராணுவ அதிகாரி காலின் மெக்கன்சி, தொல்பொருள் சேகரிப்பிலும் கீழ்த்திசை ஆய்விலும் ஆர்வம் மிக்கவர். அவருடைய திரட்டுகள் இந்திய வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ள இன்றியமையாத சான்றுகளாகத் திகழ்கின்றன.

மெக்கன்சியின் முயற்சியால் தொகுக்கப்பட்ட சுவடிகளில் 1534 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இவற்றில் இலக்கியம், வரலாறு, பண்பாடு, வாழ்க்கைமுறை எனப் பல்வேறு செய்திகள் இடம்பெறுகின்றன.

இந்த நூலில் ம.ராசேந்திரன் மெக்கன்சியின் வாழ்க்கை வரலாற்றில் தொடங்கி அவர் சேகரித்த ஆவணங்களின் வகைதொகையுடன் பழங்குடி மக்கள் பற்றிய ஆய்வை, தமிழகப் பழங்குடி மக்கள் வரலாற்றுடன் விவரிக்கிறார்.

அத்துடன் மெக்கன்சி தொகுத்தவற்றுள் 16 சுவடிகளைத் தேர்ந்தெடுத்து, அதில் குறும்பர், வேடர், இருளர், ஏனாதியர், குறவர், வில்லியர், கரையர், பட்டணவர், லம்பாடியர், மலையரசர், குண்ணுவர் போன்ற தமிழகப் பழங்குடி மக்கள் குறித்த செய்திகளையும், இவற்றைக் கொண்டு கள ஆய்வு மூலம் சேகரித்த விவரங்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

குறிப்பாக, குறும்பர்களின் வரலாற்றுப் பின்னணி, தொழில், திருமண முறை, சடங்குகள், வழிபாடுகள், மொழி என அவர்களின் இன்றைய நிலை, வரலாற்றுச் சின்னங்கள் பற்றிய செய்திகளை விவரித்துச் செல்வது ஆர்வமூட்டுவதாய் இருக்கின்றன. நூலின் இறுதியில் சுவடிகளின் சுருக்கமும் இடம்பெறுகிறது.

இதன்மூலம் இந்த நூல் சுவடிகளில் பழங்குடி மக்கள் குறித்த பதிவுகளைக் கவனப்படுத்தும் முதலாவது நூல் மட்டுமல்ல, அவர்களை ஆராய்வதற்கான பல்வேறு ஆய்வுக களத்தையும் அறிவதற்கு உதவுகிறது.

அத்துடன் திராவிடர் குறித்த கருத்தாக்கத்தை வரலாற்று ரீதியாக அணுகுவதற்கும் வழிவகைச் செய்கிறது.

மானிடவியல், பழங்குடிமக்கள், திராவிடம் குறித்து ஆர்வமுள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.

************

நூல் : மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடிகள் மக்கள்
ஆசிரியர்: ம. இராசேந்திரன்
அடையாளம் பதிப்பகம்
Page: 232

விலை: ரூ.180/-

Buy Link: https://heritager.in/product/mackenzie-suvadigalil-thamizhaga-pazhangudi-makkal/

இந்நூலினை எப்படி வாங்குவது?

1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager.in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.

You might also like