இப்பத்தான் பாடலாசிரியர்கள் சுதந்திரமா இயங்குறாங்க!

கவிஞர் யுகபாரதி

சினிமாவில் பாட்டெழுத ஆரம்பிச்சாச்சு. எங்க போனாலும் மன்மதராசா பாட்டு சூப்பர்னு சொவ்லாங்க. கூடவே இப்ப கணையாழியில இருக்கீங்களான்னு ஒரு கேள்வி. அப்பதான் இரண்டுக்குமான முகங்கள் வேறன்னு தெரிஞ்சது.

கணையாழியில இருந்து வெளியேறதா முடிவு பண்ணேன். அந்தப் பாடலை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன். அந்தப் பாடலை 100 சதவீதம் விரும்பித் தான் எழுதினேன்.

கணையாழியில் இருந்து வெளியேறினதும் கணையாழி வாசகர் விஜயராகவன்னு நாம ஒரு பத்திரிகை ஆரம்பிச்சா என்னன்னு கேட்டார். எட்டு இதழ்கள் வெளிவந்தது. நாங்க இரண்டு பேரும் மட்டும்தான் வேலை செய்தோம். நிறைய நேரம் வேலை செய்ய வேண்டி இருந்ததால தொடர முடியாமப் போச்சு. மீண்டும் அதை செய்யணும்னு தோணுது.

சினிமா ஒரு பெரிய துறை. அதில் ஒவ்வொருத்தரும் தனக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டும் பண்ணிட்டும் போறாங்க. அவ்வளவு தான்.

இதில அவங்களோட உறவு எப்படி இருந்தால் என்ன? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருக்காங்க. அது அவங்களோட மன இயல்பை பொறுத்தது அவ்வளவுதான்.

வைரமுத்துவை நான் ஒரே ஒரு தடவைதான் நேரில் சந்திச்சேன். கணையாழியில் வேலை பார்த்தபோது நடந்தது அது. அப்ப என்னோட கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருந்தது.

ஒரு பத்திரிகைக்காக இரண்டு பேரும் சந்திச்சோம். இலக்கியம் தொடர்பா கடுமையான விவாதங்கள் நடந்தது. அவர் சொல்ற எல்லாத்தையும் நான் கடுமையா மறுத்தேன்.

விவாதத்தை முடிஞ்சு, பத்திரிகைக்காரங்க போன பின்னாடி, வைரமுத்து எங்கிட்ட சொன்னார். ‘நிறையப் படிக்கறீங்கன்னு தெரியுது, உங்களோட எழுத்தும் நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க’ அப்படின்னு சொன்னார்.

நல்ல விஷயம் தான். அந்தச் சின்னப் பாராட்டைக்கூட மத்தவங்க முன்னாடி சொல்லாம தனியாச் சொன்னார். அதுதான் வைரமுத்து.

சரியாச் சொல்லணும்னா இப்பத்தான் பாடலாசிரியர்கள் சுதந்திரமா இயங்குறாங்க. பட்டுக்கோட்டை, கண்ணதாசன் அவங்கல்லாம் ஒரு கட்சியில் இருந்தவங்க. இப்ப நிலைமை அப்படி இல்லை. என்னை மாதிரி கட்சி சாராத ஆட்களும் சினிமாவில் இயங்க முடியுது.

ஆனாலும் ஒரு சிலர் அவங்களோட தனிப்பட்ட லாபத்துக்காக கட்சி அரசியலை பயன்படுத்திட்டு இருக்காங்க. எனக்கு அந்த மாதிரி எந்த அவசியமும் இதுவரை ஏற்படலை.

நன்றி: கீற்று.காம்

You might also like