நல்லது நடக்கும்போது பிரபஞ்சம் இழுத்துக்கொண்டு வரும்!

இலக்கிய விழாவில் சமுத்திரக்கனி பேச்சு

சென்னையில் இருந்து 99 கி. மீட்டரில் புக் புக்!

போரூர் டோல்கேட்டில் காலை 6 மணிக்கு காத்திருந்தேன். ஒரு பேருந்துகூட அச்சிறுபாக்கம் நிற்கும் என்று சொல்லவில்லை. நேரத்தை வீணடிக்காமல் கிளாம்பாக்கம் வந்தேன். வாசலில் வந்துகொண்டிருந்த மேல்மலையனூர் பேருந்தில் ஏறினேன்.

காலைநேரப் பயணம் ரசனை. அச்சிறுபாக்கம் வந்ததே தெரியவில்லை. அங்கிருந்து 99 கி.மீ. காபி ஷாப் போகவேண்டும். பேருந்துகள் நிற்காது என்றார்கள். ஆட்டோ, ஷேர் ஆட்டோ என அலைந்து அதிலேயே ஒரு மணி நேரம் கடந்துவிட்டது.

கடைசியாக ஆட்டோ கைகொடுத்தது. அடுத்த 10 நிமிடத்தில் 99 கி.மீ காபி ஷாப். டிஸ்கவரி புக் பேலஸின் புக் புக் புத்தக சிற்றங்காடி திறப்பு விழா. அங்கு சென்ற நேரத்தில் விழாவுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார் வேடியப்பன்.

பசி வேறு. சூடான பொங்கலும், காபியும் சாப்பிட்டேன். அந்த நேரத்தில் சமுத்திரக்கனி, பவா செல்லதுரை, ஆவடி உதயகுமார், நக்கீரன் கோபால், திருப்புகழ் ஐஏஎஸ் ஆகியோர் வந்து சேர்ந்தனர். அவர்களுடன் பேசிக்கொண்டே மீண்டும் ஒரு காபி.

கண்டெய்னரில் டிசைன் செய்யப்பட்ட புக் புக் புத்தக சிற்றங்காடியை மதிப்பிற்குரிய திருப்புகழ் ஐஏஎஸ், நக்கீரன் கோபால், சமுத்திரக்கனி, பவா செல்லதுரை ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டித் திறந்துவைத்தார்கள்.

நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு இதுவொரு அறிவுப்பசி தீர்க்கும் உணவகம்.

சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சில நிமிடங்கள் பேசினார்கள்.

“100 புத்தகக் கடைகள் திறக்கவேண்டும் என்பது இலக்கு. 20 திறந்தாலும் வெற்றிதான்” என்றார் வரவேற்புரையில் வேடியப்பன்.

இன்னொரு முறை வரவேற்ற 99 கி. மீ. காபி ஷாப் அதிபர் மனோ சாலமன், “என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்” என்று நெகிழ்ந்தார்.

“படைப்பாளிகளுக்கு மத்தியில் படிப்பாளியாக வந்திருக்கிறேன்” என்று பேசத் தொடங்கினார் திருப்புகழ்.

“இப்போதுதான் புத்தகங்கள் அதிகமாக எழுதப்படுகின்றன, அச்சேறுகின்றன, விற்கப்படுகின்றன.

ஆனால் வாசிப்புதான் குறைந்துகொண்டே வருகிறது.

மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு புத்தகங்களை எடுத்துச் செல்லவேண்டிய நிலைக்கு நாம் வந்திருக்கிறோம்” என்றார்.

தென்னாப்பிரிக்காவில் மண்டேலா புக் ஷாப் என்ற பெயரில் தொடங்கி வெற்றி கண்டதையும், நியூயார்க் சிறு புக் ஷாப்கள் பற்றியும் குறிப்பிட்ட அவர், சிறிய அளவில் புத்தகக் கடைகள் வைப்பவர்கள் கவனிக்கவேண்டிய 5 விஷயங்களை சுட்டிக்காட்டினார்.

நா.முத்துக்குமாரின் ஒரு கவிதையுடன் ரசனையாக பேசிய எஸ்கேபி கருணா, “புத்தகத்தின்பேரால் நடக்கும் குறுகிய அரசியலை ஏற்கமுடியாது. பன்முகத்தன்மைதான் நம்முடைய மண்ணின் அரசியல்” என்று அரசியல் பக்கம் போனவர்,

“இரு புதுமையான ஐடியாக்கள் சேர்ந்து இங்கே புக் ஷாப் தொடங்கியுள்ளார்கள். நாம் ஆதரிக்கவேண்டும்” என்றார்.

“வேரைத் தேடிச் செல்கிறார் வேடியப்பன்” என்ற எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, “இது மனசுக்கு சந்தோசமான நிகழ்வு. இதைத் தமிழ்ச் சமூகத்தின் வெற்றியாகப் பார்க்கிறேன். வேடியப்பனின் தைரியம் எனக்கு ஆச்சரியம் தருகிறது” என்றார்.

நக்கீரன் கோபால் கலகலப்பாகப் பேசினார்.

“அரசுக்கு முன்மாதிரியாக புக் புக் ஷாப்பை திறந்திருக்கிறார்கள். பொதுவாக உலகில் உறுதியுள்ளவர்கள் குறைவு. அதில் ஒருவர் வேடியப்பன்.

புத்தகத்தை வாங்கு என்று சொல்வது மாதிரி புக் ஷாப்பை டிசைன் செய்துள்ளார்கள்” என்று பாராட்டினார்.

சமுத்திரக்கனி பத்தாயத்துக்கு வந்த சுவையான அனுபவத்தைப் பேசிய பவா செல்லதுரை, “நெடுஞ்சாலைகளில் 500 பிரியாணிக் கடைகள், கும்பகோணம் காபி கடைகள் உள்ளன. இவற்றுக்கு நிகராக புத்தகக் கடைகள் இல்லை. போலியான உலகில் வாசிப்புதான் ஒரு வாசகனுக்கு புதிய உலகத்தை திறந்துவைக்கிறது” என்றார்.

சேலம் செல்லும் வழியில், திடீர் மழைபோல விழாவுக்கு வருகைதந்தார் இறையன்பு ஐஏஎஸ்.

“இதுபோன்ற புத்தகக் கடைகள் வழிநெடுக வாய்த்தல் நலம். பயண வழியில் படிப்பை ஊக்கப்படுத்தும் முயற்சி பாராட்டுக்குரியது. இது பயணிகளுக்கு வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும்” என்றார்.

நிறைவாகப் பேசிய சமுத்திரக்கனி, “இந்த விழாவில் மிகச் சிறப்பானவர்கள் வந்திருக்கிறார்கள். நல்லது நடக்கும்போது பிரபஞ்சம் இழுத்துக்கொண்டு வரும். என்னால் புத்தகம் இல்லாமல் இருக்கமுடியாது. சசிகுமாருடன் நடிக்கும்போது ஏதாவது புக் ஸ்டால் இருக்கிறதா என்று கேட்டேன்.

எங்க புக் ஸ்டாலே இருக்கு என்றார். சிவலிங்கம் புக்ஸ். அங்கே தேடித் தேடி மரிக்கொழுந்து மங்கை என்ற புத்தகத்தை எடுத்துப் படித்தேன்.

இயக்குநர் அமீர் படிக்கமாட்டார். நான் எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பதைப் பார்த்ததும் அவரும் ஒரு கட்டத்தில் படிக்கத் தொடங்கிவிட்டார். இதுதான் புத்தகம் செய்யும் மாயம்.

எப்போதும் பயணத்தின்போது ஒரு புத்தகத்தைப் படித்துவிடுவேன். இப்போதுகூட காரில் ஒரு புத்தகம் இருக்கிறது.

வேடியப்பனின் இந்த புக் ஷாப் முயற்சி மிகப்பெரிய வெற்றிபெறும்” என்று வாழ்த்தினார்.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, பொன்ஸி, இளம்பரிதி, புதுவை இளவேனில், ஜீவகரிகாலன் உள்ளிட்ட பல நண்பர்கள் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தார்கள்.

மதியம் வெயில் பொளந்துகட்டியது. எதிரே பார்த்தால் காட்டுச்செடிகள் மண்டிக்கிடந்த பசுமையான மலை.

சென்னை திரும்பும்வழியில் மேல்மருவத்தூர் அருகே ‘உப்புகண்டம்’ மெஸ்ஸில் மிகச் சுவையான அசைவ விருந்து. அன்பான உபசரிப்பில் அசத்திவிட்டார் மனோ சாலமன்.

வீட்டுக்கு வந்த சொந்தக்காரர்களைப் போல ஒவ்வொருவரையும் ஓடிவந்து கவனித்தார் அவரது அன்பு மகள். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

விருந்துண்ட திருப்தியுடன் நண்பர் ஆவடி உதயகுமாரின் எலெக்ட்ரிக் காரில் போரூர் டோல்கேட் வந்தபோது மழை தரும் மேகங்கள் வானில் அணிவகுப்பு நடத்திக்கொண்டிருந்தன.

எனக்கும் ஒரு மறக்கமுடியாத நாள்.

– சுந்தரபுத்தன் 

#BookBook #புக்புக் #GSTRoadBookshop #99kmcoffee #நெடுஞ்சாலைபுத்தக்கடை #ContainerBookShop Discovery Publications Discovery book Palace

You might also like