அப்படியென்ன அதிசயத்தைக் கண்டுபிடித்தார் எட்டியன்?

அண்மையில் பிரான்ஸ் விஞ்ஞானி எட்டியன் எமிலி பவுலியா இறந்துபோனார். இவரை முன்பின் அறியாத கரிகாலன், இவரை ஏன் நினைவுகூற வேண்டியிருக்கிறது?

ஆகாய விமானத்தை, அணு ஆயுதத்தை இவர் கண்டுபிடித்திருந்தால், அதெல்லாம் ஓர் அதிசயமாகத் தோன்றப்போவதில்லை.

அப்படியென்ன அதிசயத்தை எட்டியன் கண்டுபிடித்தார்?

எடியன் கண்டுபிடித்தது கருத்தடை மாத்திரை. பெண்களின் தேவையற்ற திட்டமிடாத கர்ப்பத்தின் சுமையை அகற்றிய மாத்திரை இது.

கணிசமான பெண்கள் தம் கர்ப்பத்தைத் தொடர விரும்புவதில்லை. தாயாக இருப்பதற்குத் தயாராக இல்லாத காலத்தில் சில வேளை கர்ப்பம் உருவாகிவிடுகிறது.

பாலியல் வன்கொடுமை, தகாத உறவு, ஆதரவின்மை, குழந்தையை விரும்பாதது, கல்வி, தொழில் போன்ற இலக்குகளுக்கு தடையாக இருப்பது, இப்படி பல காரணங்களால் பெண்கள் கருக்கலைப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மதம் கோலோச்சும் 68 நாடுகளில் கருக்கலைப்பு சட்டவிரோதமாக உள்ளது. பெரும்பாலான நாடுகளில் மத அடிப்படைவாதம் கருக்கலைப்பை தடை செய்யக் காரணமாக உள்ளது.

போலந்தில் கம்யூனிச ஆட்சியின் போது கருக்கலைப்பு அனுமதிக்கப்பட்டிருந்தது.

1990 களுக்குப் பிறகு, பொது வாக்கெடுப்பின் மூலம் இது சட்ட விரோதமாக்கப்பட்டது.

நாகரிகமடைந்த நாடாகக் கருதப்படும் அமெரிக்காவிலேயே கருத்தடை குறித்த மனத்தடையை மதம் உருவாக்கி இருக்கிறது.

அதேவேளை, கருக்கலைப்புக்கு அரசியலமைப்பில் உரிமை வழங்கிய முதல் நாடு பிரான்ஸ். பொது மக்களின் கருக்கலைப்பு உரிமையை பாதுகாக்க 2008 ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது பிரான்ஸ்.

இதே பிரான்ஸில்தான், 1982 ஆம் ஆண்டு, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த RU 486 எனும் கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்தார் எட்டியன் எமிலி பவுலியா .

இந்தியா போன்ற நாடுகளில் ஆண், பெண் விகிதத்தில் பாலியல் சமத்துவம் இல்லை. இங்கு பாலுறவுக்கு தகுதியான ஆண்கள் 100 பேர் இருந்தால், பாலுறவுக்கு தகுதியான வயதில் 80 பெண்கள் தான் இருக்கிறார்கள்.

இதன் காரணமாக, premarital sexual contact உருவாவது தவிர்க்க இயலாதது. விளைவு premarital conception.

இந்நிலையில் இக்கண்டுபிடிப்பு பெண்களுக்கு உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதுகாப்பை வழங்கியது.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தனது X தளத்தில் எமிலிக்கு ஓர் அஞ்சலிக் குறிப்பை பதிவிட்டுள்ளார்.

“எட்டியன் எமிலி தைரியத்தின் கலங்கரை விளக்கம். பெண்கள் தங்கள் சுதந்திரத்தை வெல்ல உதவிய முற்போக்கான மனம் படைத்தவர்” என அப்பதிவில் இம்மானுவேல் குறிப்பிட்டிருக்கிறார்.

எட்டியன் எமிலி பவுலியாவின் கண்டுபிடிப்பு பண்பாடு ரீதியான மாற்றம் நோக்கி உலகத்தை சிந்திக்கவும் விவாதிக்கவும் வைத்தது.

பிறக்காத குழந்தைகளைக் கொல்வதை பாவம் என்பவர்கள், போரில் குழந்தைகள் கொல்லப்படுவதை வீரமாகப் பார்க்கிறார்கள்.

எட்டியன் RU 486 மாத்திரை மூலம் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்? என் உடல். என் உரிமை என்பதைதான்!

நன்றி: கரிகாலன் முகநூல் பதிவு

You might also like