விராட் கோலி அழுதது ஏன்?

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களின் 18 ஆண்டு காத்திருப்பு நேற்று முடிவுக்கு வந்திருக்கிறது. பஞ்சாப் அணியை வென்று முதல் முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு.

பெங்களூரு அணி கோப்பையை வெல்வது உறுதியான தருணத்தில், மைதானத்தில் இருந்த அத்தனை கேமராக்களும் விராட் கோலியை நோக்கித்தான் திரும்பின.

கண்களில் தளும்பும் கண்ணீரை அடக்க முடியாமல், கைகளால் கண்களைத் துடைத்தபடி விராட் கோலி பீல்டிங் செய்ததைப் பார்க்க முடிந்தது.

ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விராட் கோலிக்கும் இந்த ஐபிஎல் கோப்பை எத்தனை முக்கியமானது என்பதை அந்த கண்ணீர் உணர்த்தியது.

விராட் கோலி கோப்பையை வெல்வது இது ஒன்றும் முதல் முறையல்ல. ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் முக்கிய வீரராக இடம் பிடித்தவர்தான் விராட் கோலி.

ஆனால், அப்போதெல்லாம் ஆனந்தக் கண்ணீர் வடிக்காத விராட் கோலியின் கண்கள், நேற்று ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றபோது கட்டுக்கடங்காமல் ஆனந்தக் கண்ணீரை வடித்தன.

ஐபிஎல் கோப்பையை வெல்வது அவருக்கு எத்தனை முக்கியமானதாக இருந்திருக்கிறது என்பதற்கு அந்த கண்ணீரே சாட்சி.

ஒவ்வொரு முறையும் ஐபிஎல் தொடர் தொடங்கும்போது, ‘ஈ சாலா கப் நமதே’ என்று உற்சாகக் குரலை எழுப்புவார்கள் ஆர்சிபி ரசிகர்கள். விராட் கோலியும் அவர்களின் ஆசையை நிறைவேற்ற கடுமையாகப் போராடுவார்.

பலமுறை அவர் ஐபிஎல் தொடர்களில் 700 ரன்களை கடந்ததுண்டு. ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிகமாக ரன்களைக் குவித்த வீரர் யாரென்றால் அது விராட் கோலிதான்.

ஆனால், அவர் எத்தனை சிறப்பாக ஆடினாலும், முக்கிய ஏதாவது ஒரு சூழலில் ஆர்சிபியின் கரங்களில் இருந்து கோப்பை நழுவிச் செல்லும்.

‘ஈ சாலா கப்பு… லாலி பாப்பை சப்பு’ என்று மற்ற அணிகளின் ரசிகர்கள் ஆர்சிபி ரசிகர்களை கலாட்டா செய்வார்கள். அவர்களும் கண்ணீரோடு சேர்த்து அவமானத்தையும் விழுங்குவார்கள்.

ரசிகர்களுக்கே இந்த நிலையென்றால் விராட் கோலியைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவரது குருநாதரான மகேந்திர சிங் தோனி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறார். சக போட்டியாளராக கருதப்படும் ரோஹித் சர்மாவும் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறார்.

அவ்வளவு ஏன் நேற்று வந்த வீரர்களான சுப்மான் கில், ஹர்த்திக் பாண்டியா, ஸ்ரேயஸ் ஐயர்கூட ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறார்கள்.

ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாகத் திகழும் கோலிக்கு ஒரு ஐபிஎல் கோப்பைகூட கிடைக்காமல் இருந்தது.

கிரிக்கெட் விளையாட்டில் இறுதிக் கட்டத்தில் இருக்கும் விராட் கோலி, தான் ஐபிஎல் கோப்பையை வெல்லாமலேயே ஓய்வெடுக்க வேண்டி வருமோ… தன் ஆர்சிபி ரசிகர்களைக் கண்ணீரிலேயே வைத்திருக்க வேண்டி வருமோ என்று நினைத்து எத்தனை நாள் தூக்கத்தை தொலைத்திருப்பார்?

அந்த ஏக்கம்தான் நேற்று தீர்ந்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட விளைவால்தான் அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீரை வடித்தன.

தான் கண்ணீர் சிந்தியதைப் பற்றி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, “இந்தக் கோப்பையை வெல்வதற்கு என்னவெல்லாம் தேவையோ அனைத்தையும் நான் கொடுத்திருக்கிறேன்.

இந்த நாள் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. கடைசி ஓவரில் 2 பந்துகள் முடிந்த பிறகு, எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. 18 ஆண்டுகள் நான் இந்த அணிக்கு விசுவாசமாக இருந்துள்ளேன்” என்று சொல்லி இருக்கிறார்.

எல்லாம் சரி… வலிமையான ஆண்மகனாக ரசிகர்களால் கொண்டாடப்படும் விராட் கோலி, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பார்க்க மைதானத்தில் வைத்து அழலாமா என்ற கேள்வியும் பலருக்கு எழும். ஒரு வீரமிக்க ஆண்மகன் அழலாமா என்று அவர்கள் கேட்பார்கள்.

இதற்கான பதிலை கடந்த 2019-ம் ஆண்டு தன் பிறந்தநாளில் எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற நாளில் தான் அழுததாக குறிப்பிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், “கண்ணீர் சிந்தி பிறர் முன் அழுவது அவமானத்துக்குரிய ஒன்றல்ல.

உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஏன் ஒளித்துவைக்க வேண்டும்? ஏன் கசிந்தொழுகும் கண்ணீரை மறைக்க முயல்கிறீர்கள். உங்களின் வலியை, நீங்கள் காயப்பட்டிருப்பதை வெளிக்காட்ட அதீத தைரியம் வேண்டும்.

அன்றைய காலையைப் போல நீங்களும் தீரமிக்கவராக, மேம்பட்டவராக வெளிப்படுவீர்கள்.

ஆண்கள் இவற்றைச் செய்யலாம், செய்யக்கூடாது என விதிக்கப்பட்டிருப்பவற்றை, நம்புபவற்றைக் கடந்து வாருங்கள் என உங்களை அழைக்கிறேன்.

நீங்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் இத்தகைய அச்சமின்மை உங்களுக்கு வாய்க்கட்டும் என வாழ்த்துகிறேன்” என்கிறார்.

சச்சினே சொல்லிவிட்டார் அழுவது தப்பில்லை என்று. பிறகென்ன… 18 ஆண்டுகள் காத்திருந்த ஐபிஎல் கோப்பை கைகளுக்குள் வந்திருக்கிறது. அதை இறுக்க அணைத்து முத்தமிட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்து உற்சாகமாக சொல்லுங்கள் கோலி, ‘ஈ சாலா கப் நமதே…’ என்று.

– பி.எம். சுதிர்

You might also like