ஒடித்துப்போடப்பட்ட மனிதர்களை எழுதுவதே புதுக்கவிதை!

கவிக்கோ அப்துல் ரகுமான்

தமிழ் மண்ணிலே ஆயிரம் கவிஞர்கள் வந்து போகலாம்; ஆனாலும் ஆலமரமாய்த் தனித்து நிற்பவர்கள் ஒருசிலரே. அதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.

‘மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையின் மலர் பார்த்தவர்’ என்று பாராட்டப் பெறும் சிறப்புக்குரியவர் கவிக்கோ, ‘வானம்பாடி’ இயக்கத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக மலர்ந்தார்.

கீட்ஸ், ஷெல்லி உள்ளிட்ட கவிஞர்களின் கவிதைகளால் மனம் கவரப்பட்ட அப்துல் ரகுமான், மவுலானா ஜலாலுத்தீன் ரூமி, இக்பால், தாகூர், கலீல் ஜிப்ரான் ஆகியோரது கவிதைகளையும் விரும்பிப் படித்தார்.

எந்தத் துறையில் இறங்கினாலும் அதன் வேர்வரை சென்று ஆழக் கற்பதைத் தன்னுடைய இயல்பாகக் கொண்டிருந்த கவிக்கோ, தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்; சமஸ்கிருதமும் கற்றறிந்தார்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பான ’பால்வீதி’ கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியிட்டு புதுமை செய்தார்.

மேலும், ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கிய வகைகளை தமிழில் பரவச் செய்தார். ‘மின்மினிகளால் ஒரு கடிதம்’ என்ற பெயரில் கஜல் கவிதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

’நேயர் விருப்பம்’, ’ஆலாபனை’, ’இறந்ததால் பிறந்தவன்’, ’கண்ணீர்த்துளிகளுக்கு முகவரி இல்லை’, ’பித்தன்’, ’தேவகானம்’, ’பறவையின் பாதை’, ’பாலைநிலா’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், ‘பூப்படைந்த சப்தம்’,

‘தொலைபேசி கண்ணீர்’, ‘காற்று என் மனைவி’, ‘உறங்கும் அழகி’, ‘நெருப்பை அணைக்கும் நெருப்பு’ உள்ளிட்ட பல கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.

இவருடைய ‘ஆலாபனை’ என்ற கவிதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கவிதை, கட்டுரைகளில் இயங்கிய அளவுக்கு கவிக்கோ நாவல், சிறுகதைகளில் இயங்கவில்லை.

இதுகுறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், “கவிதையே கரை காணமுடியாத கடல். அதில் மூழ்கி எடுக்க வேண்டிய முத்துக்களோ ஏராளம். எனவே நான் கவிதைகளில் முழுக்கவனம் செலுத்த விரும்புகிறேன்.

சிறுகதைகளையும் நாவல்களையும் நான் வெறுக்கவில்லை. ஆனால் மூன்றையும் எழுதுவது மூன்று மனைவிகளைக் கட்டிக் கொள்கிறவனின் நிலைமை ஆகிவிடும். அதனால்தான் சிறுகதையையும் நாவலையும் எழுதுவதைத் தவிர்க்கிறேன்” எனப் பதிலளித்தார்.

அவருடைய கவிதைகள் இன்றும் புதுக்கவிதையில் தடம் பதிப்போருக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துபவையாக விளங்குகின்றன.

கவிதைகளாலும் கட்டுரைகளாலும் எத்தனையோ இதயங்களைக் கவர்ந்த அவர், தன்னுடைய மேடைப்பேச்சுகளாலும் இன்னும் பலரை வசீகரித்தவர், கவிக்கோ.

துன்பம் குறித்து அவர் ஒருமுறை, “எதுவும் தேடினால்தான் கிடைக்கும் என்பது இறைவிதி. சிலரை எப்போதும் துன்பம் தொடர்கிறது. இந்த துன்பம் தொடர்ந்துவர காரணம், சரியான கதவு எது என்பதை அறியாமல் இருப்பதுதான்” என அழகாய் உணர்த்தியிருப்பார்.

’பொதுவாக, கவிதைகள் என்பது சமகால பிரச்னைகளைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்; சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தாத கருத்துகள் இல்லாவிட்டால் கவிதை எழுத வேண்டிய அவசியமே இல்லை’ என வலியுறுத்தும் கவிக்கோ,

”கவிதைகளில் நவீனத்துவம் எப்போதோ வந்துவிட்டது. சிலர் அறியாமையின் காரணமாக, ‘வசனத்தை ஒடித்துப் போட்டால் புதுக்கவிதை’ என்கிறார்கள். அது தவறு. ’ஒடித்துப் போடப்பட்ட மனிதர்களைப் பற்றி எழுதுவதுதான் புதுக்கவிதை’.

பொதுவாக கவிதைகளில் தற்போதைய பிரச்னைகளைப் பற்றி சொல்வது அவசியம். சமகாலப் பிரச்னைகளை பிரதிபலிக்கும் கவிதைகள்தான் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்” என வலியுறுத்தியதுடன்,

“கவிஞர்கள் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதட்டும். அவற்றில் ஒரு கவிதையாவது சமூகத்துக்குப் பயன்பட்டாலே போதுமானது.

அன்றாடம் நிகழும் வீட்டுப் பிரச்னைகள், சமூக அவலங்கள் குறித்து ஒருவர் எழுதினால் அவரையும் அவர் கவிதையையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதுதான் நாம் எழுத்துக்கு கொடுக்கும் மிகப்பெரிய கௌரவம்” எனக் குரல் கொடுத்தவர் கவிக்கோ மட்டும்தான்.

உண்மையில், கவிக்கோவிற்கு மரணம் வராமல் இருந்திருந்தால், இன்று மடைதெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் பலருக்கும் அவர் எழுதும் மணியான கவிதைகள் வழிகாட்டியிருக்கும் என்பது நிதர்சனம். 

  • பிரகாஷ்

நன்றி: புதிய தலைமுறை

You might also like