குறவர் இனக்குழுக்கள் குறித்த சிறுகதைகள்!

நூல் அறிமுகம்:

கதைகள் ஏன் எழுதப்படுகின்றன? அவை எழுத்தாளர்களின் சித்தரிப்புக் கலையை உணர்ந்து கொள்ளவா? அல்லது கதைகள் நமக்குத் தெரியும் என்பதற்காகப் பிறரிடம் சொல்லவா? என்ற கருத்து எப்போதும் எனக்குத் தோன்றுவதுண்டு.

சொல்லப்பட்ட கதைகளைவிட சொல்லப்படாத அச்சிலேறாத கதைகள் இவ்வுலகில் நிரம்ப உண்டு. அவற்றில் மானுட நடத்தையும் துயரமும், மகிழ்ச்சியும் வரலாறும் வாழ்க்கைப் பதிவுகளாக பதியப்படாமல் போனதுண்டு.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மையமாகக் கொண்டு ஒரு சமூகத்தின் அவலங்களையும் துயரங்களையும் அச்சமூகம் எதிர்கொண்ட சமூக முரணையும் காட்சியாகப் பொதுவெளியில் உரையாடும் நோக்கில் ‘காடன் கண்டது’ எனும் தலைப்பில் மையநீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ள குறவர் சமூக மக்களின் வரலாற்றை, வாழ்வியலை, பண்பாட்டை இலக்கியப் பதிவுகளின் வழி ஆவணப்படுத்தும் நோக்கில் பேராசிரியர் ந. இரத்தினக்குமார் 25 சிறுகதைகளைக் கொத்தாக காலவரிசை, வெவ்வேறு சமூக நடத்தை அடிப்படையில் தொகுத்துள்ளார்.

குறவர் சமூக மக்களைப் பண்பட்ட மக்கள் என அறியப்பட்ட வெகுமக்களிடம் அந்த சமூகம் எதிர்கொண்டுள்ள அக, புற வாழ்வியல் நெருக்கடிகளைக் கண்முன் கலைத்துப் போட்டுள்ளது.

1933-ல் வ.ரா வில் தொடங்கி 2024-ல் பாண்டியக் கண்ணன் வரையிலான வெவ்வேறு காலச்சூழலில் குருவிக்காரர்கள், மலைக்குறவர்கள் எனும் சமூகங்கள் பற்றிய பதிவுகளை சிறுகதைகள் ஆவணப்படுத்தியுள்ளன என்றே கோரலாம்.

வ.ரா, ந.பிச்சமூர்த்தி, சரோஜா ராம்மூர்த்தி ஆகியோரின் கதைகள் முதலில். குறவர் சமூக மக்கள் பற்றி தனித்தொதுங்கி உரையாடல் பொருளாக மாற்றியது என்றாலும் தமிழ் ஒளியின் குற்றப்பரம்பரை, மன ஓசை எழுத்தாளர்களான அமரன், அன்பாதவன், வீர. வேலுச்சாமி ஆகியோரின் கதைகளும் ஆயிஷா இரா.நடராசனின் கதையும் உதயசங்கரின் கதையும் அந்தச் சமூகம் எதிர்கொண்டுள்ள சாதிய, சமூக சிக்கலை மனந்திறந்து பார்வையாளர்களைப் பேச வைக்கிறது.

இடதுசாரி எழுத்தாளர்களான கந்தர்வன், அறிவுமதி, சு.சமுத்திரம், இலட்சுமணப் பெருமாள் ஆகியோரின் கதைகள் அச்சமூகம் உள்ளூர் எதிர்கொண்டுள்ள அக முரண்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறது .

ஜீ.முருகன், கௌதம சித்தார்த்தன், பிரேம் – இரமேஷ், பிரமிள் ஆகியோர் மாயவாதத்தைக் கதைக்களமாகக் கொண்டுள்ளனர்.

இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளைப் படிப்பதற்கு முன் தொகுப்பாசிரியர் ந.இரத்தினக்குமாரின் குறவர்கள்: இலக்கியமும் இனவரையியலும் எனும் அறிமுகத்தைப் படிப்பது குறவர் சமூக வரலாற்றோடு இலக்கியப் பதிவுகளை இணைத்துக் காண ஏதுவாக இருக்கும்.

சாதிய சமூக வெளியில் வெளித்தள்ளப்பட்ட விளிம்புநிலைச் சமூக மக்களான குறவர் சமூக மக்கள் பொது நீரோட்டத்திற்கு வரவும் அவர்கள் பற்றிய தப்பெண்ணங்களை மாற்றி மானுடப் பெருவெளியில் சமமான மனிதர்களாக வலம்வர இந்தக் கதைகள் ஒரு உந்துவிசையை உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கதைகளைக் காலம், பொருண்மை என்ற அடிப்படையில் பொறுமையாகத் தொகுத்தும் அக்கதைகளை எழுதியவர்கள் பற்றிய சிறுகுறிப்பும் இனவரையியல் இலக்கியம் எனும் படைப்பாக்க முயற்சியில் புதியது.

இரண்டாயிரம் ஆண்டு பழமையான, பண்பட்ட சமூகம் என்ற தமிழ்ப் பெருமையெல்லாம் தன்னை ஒத்த மாந்தர்களை சமமாக பாவிப்பதில் இருந்து தொடங்க வேண்டும் என்பதை இந்தக் கதைகள் நமக்கு மீள உணர்த்துகின்றன.

******

நூல்: காடன் கண்டது (குறவர் இனக்குழுக்கள் குறித்த சிறுகதைகள் 1933 – 2024)
சிரியர்: பேராசிரியர் ந. இரத்தினக்குமார்
யாவரும் பதிப்பகம்
விலை: ரூ.379/-

#காடன்கண்டதுநூல் #NRathinakumar #நஇரத்தினக்குமார் #YaavarumPublishers #யாவரும்பதிப்பகம் #குருவிக்காரர்கள் #மலைக்குறவர்கள் #குறவர் #kaadankandathubook

You might also like