முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ இந்தப் பாடலை பாடியவர்கள் – தீ & சின்மயி.
எழுத்து – கவிஞர் சிவ ஆனந்த்
இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
இந்தப் பாடலை தீ பாடிய வெர்ஷன் ஒன்றும், சின்மயி பாடிய வெர்ஷன் ஒன்றுமாக இரண்டு விதங்களில் கேட்கக் கிடைத்துள்ளது.
இதில் சமூக வலைதளங்களில் தீ யா? சின்மயியா? என்று பட்டிமன்றம் நடந்து வருகிறது.
அதில் எனது தீர்ப்பு என்ன என்றும் நண்பர்கள் கேட்டு வருகிறார்கள். அதை இறுதியில் கூறுகிறேன்.
முதலில் இந்தத் தரமான பாடலை வர்ணனை செய்வோம்.
ஒரு தரமான பாடலில் அடித்தளமான நல்ல ட்யூன், பாடலுக்கேற்ற செறிவான நல்ல தமிழ் எழுத்து.
நல்ல ஆர்கஸ்ட்ரேசன் (பிண்ணனி இசை, குறிப்பாக நாண் (கம்பி) இசைக் கருவிகளான வயலின் ஆர்கஸ்ட்ராவை / சாரங்கியைப் பயன்படுத்தியிருக்கும் விதம் முனுமுனுக்க வைக்கும் கோரஸ் பகுதிகள்.),
“ட்ரான்சிசன்” (TRANSITION) எனப்படும் திடீர் மாற்றங்கள். இது ஏ.ஆர்.ரஹ்மானின் சிக்னேச்சர்,
இசைக் கருவிகளை ஆளுமை செய்யும் திறன் (GENIUS IN HANDLING MUSICAL INSTRUMENTS),
பாடியவர்களின் தனித்திறமை (SINGER’S IMPROVISATION & CAPABILITY),
“லேயரிங்” (LAYERING) எனப்படும் மேற்கூறிய அனைத்தையும் அதற்குரிய இடத்தைக் கொடுத்து சரியாக ஒலிக்கச் (SOUNDING) செய்யும் நேர்த்தியான ஒலிப்பதிவு (RECORDING) செய்தல்,
என இவையனைத்தும் சிறப்பாக ஒரு பாடலில் அமையும்போது அதன் கேட்டல் அனுபவம் என்பது தனித்துவமானதாக அமைந்துவிடும்.
அப்படிப்பட்ட கேட்டல் அனுபவத்தைத் தந்து கொண்டிருக்கும் பாடல் தான்,
“முத்தமழை இங்கு கொட்டித்தீராதோ?”
என்று கூறினால் அது மிகையாகாது.
மெல்லிய வீணையின் ஓசை அதனுடன் இணைந்து ஒலிக்கும் சாரங்கியின் வருடலுடன் ஆரம்பிக்கிறது பாடல்…
சாரங்கி – பழமையான நாண் இசைக்கருவி – சோகத்தை வெளிக்கொணரும் கூடவே மனிதர்களின் குரலை ஒத்தும் அதன் ஒலி இருக்கும்.
இந்தக் கருவியின் மற்றொரு வடிவம் – தில்ருபா.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது பல பாடல்களில் சாரங்கி மற்றும் தில்ருபாவை சோகம் தவிர்த்த மகிழ்ச்சியான தருணங்களுக்கும் உபயோகித்திருக்கிறார்.
வீணை – இன்பம்
சாரங்கி – துன்பம்
வீணையும் சாரங்கியும் இணைந்து ஒலிக்கும்போது கடத்தப்படப் போவது இன்பமும் சோகமும் கலந்த உணர்வு என்று செவிகளுக்கும் மனங்களுக்கும் புரிகிறது.
தீ கரையத் துவங்குகிறார்
“முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ
முல்லை இரவுகள் பத்தி எரியாதோ…”
பின்னணியில் ம்ம் ம்ம் ம்ம்ம் என்று கோரஸ் பேக் அப் இசையுடன் வருவது 20-ம் நூற்றாண்டின் தமிழ் இசையை நினைவுப்படுத்துகிறது.
கூடவே வயலின் ஆர்கஸ்ட்ரா தீ யின் குரலைத் துரத்தி வருகிறது.
ரிதம் பேடின் லேசான தட்டல். சரி காதலனைப் பிரிந்த காதலியின் சோகப் பாடலுக்கு செட் ஆகும்போது, அடுத்த வரிகளிலேயே ட்ரான்சிசன்.
“ஜானு தம் மாரோ தம் தம்…
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்…”
இது என்ன திடீரென்று ஒரு இன்பம்..
அடுத்து மீண்டும் சோகம்…
“பொல்லா இரவோ? சொல்லா உறவோ?
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ… ஓஓஓ…
கண்ணாளா… என்னாளா… பெண்ணாளா…”
இப்போது பின்னணியில் “டோலக்” தோலிசைக் கருவி சேர்ந்து கொள்கிறது.
“இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை”
நிச ச ச ச ச நிசநிச சசச
நிச ச ச ச ச நிசநிச சசச
தீம் தன தோம் தன தீம் தன தோம்
தீம் தன தோம் தன தீம் தன தோம்
தீம் தன தோம் தன தீம் தன தோம்
ஆஹா… ஆண்களும் பெண்களும் சேர்ந்து அருமையான “ஜதி” கோரஸ்…
இது என்ன வகையான ட்ரான்சிசன்..?
“காலைக் கனவினில் காதல் கொண்டேன்
கண் விழித்தேன் அவன் காணவில்லை…”
இந்த வரிகள் வரை பின்னணியில் லேசான கிட்டார் சீண்டல் இடைவெளி விட்டு விரும்..
இதற்கடுத்த வரிகளான,
“என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை
என்ன செய்தும் வலி தீரவில்லை”
என வரும்போது வயலின் ஆர்கெஸ்ட்ராவால் பேக் அப் செய்திருப்பார்.
வயலின் ஆர்கஸ்ட்ரேசன் பின்னணியில் வரும்போது பாடல் தரும் அழுத்தம், வலி, அதன் ஆழம் சற்று அதிகமாகும்.
கண்ணான கண்ணே என் கண்ணாளா..
என் உள் மன காதலை கண்டாயா (கோரஸ்)
கரு மை கொண்ட கண்ணோக்கி
பொய் சொல்லி நின்றாயா?
போதும் போதும் என சென்றாயா (கோரஸ்)
காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ (கோரஸ்)”
இவ்வாறு பாடகரும் கோரஸும் மாறி மாறி கதை சொல்வது “கவாலி” இசை வடிவமாகும்.
சரியாக 2.08 அடுத்த டேக் ஆஃப்
ஆண் கோரஸ் ஜதி இசைக்க,
நிச ச ச ச ச நிசநிச சசச
நிச ச ச ச ச நிசநிச சசச
கூடவே பெண் கோரஸ்,
2:13 முதல் 2:15 இல்
கரி கரி கம (ஹெட் போன் இடது பக்கம் கேட்கும்)
கரி கரி கம பனி (ஹெட் போன் வலது பக்கம் கேட்கும்)
2:20 முதல் 2:24 வரை
நான்கு நொடிகள் மட்டுமே வந்தாலும் அந்த சாரங்கியின் ஒலி ஒரு அழகு.
அடுத்து ஆண் கோரஸ்
“ஓ….. பாலை நிலத்தினில்
சோலை நிழலென
காதல் சொல்வேன் நான்
காதல் சொல்வேன்”
மோகப் பனி போர்வையில்
கரம் கோர்கையில்
காதல் சொல்வேன் காதில்
காதல் சொல்வேன்…”
இந்த ஆண் கோரஸுக்கு சாரங்கி மூலம் பேக் அப் கொடுத்திருக்கிறார்.
அடுத்து மீண்டும் தீ வருகிறார். உடனே வயலின் ஆர்கெஸ்ட்ரா பேக் அப் வந்து விடுகிறது.
“நான் காதலி
காதலன் நீ..
வேறு எல்லாம்
வெறும் வேஷம் என்பேன்”
உடனே கோரஸ்,
“வேஷம் என்பேன்
வெறும் வேஷம் என்பேன்”
தீ –
“காலம் யாவும் நீதானே
இந்தக் காலன் வந்தால் வெல்வேனே”
அடுத்து ஆண் கோரஸ்,
“வரும் ஒரு சூரியன்
பல தாரகை
மண்ணில் மின்னல் வீழாதே
மண்ணில் மின்னல் வீழாதே”
பெண் கோரஸ் –
காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ..?
என்று கேட்க,
தீ பாடுகிறார்,
“இன்னும் ஒரு முறை
எந்தன் கதை சொல்லவா?” என்று அவர் கேட்கவும்,
பெண்களின் கோரஸ்
“சொல் சொல் சொல் சொல் சொல் சொல்”
என்று பாடுவது அழகு
“காதில் விழும் வரும் வரை
காஆஆதல் (அழகான இம்ப்ரோவைசேசன்) பாடவா
பெண்கள் கோரஸ் – “பாடவா…ஆ…..ஆ….”
ஜானு தம் மாரோ தம் தம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
எல்லா ஒருவனை வேண்டி ஏங்கும்
உசுரோ
கண்ணாளா
என்னாளா
பெண்ணாளா
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
என்று முடிக்கிறார் தீ.
இந்தப் பாடலின் மற்றொரு வெர்ஷன் சின்மயி அவர்களால் பாடல் வெளியீட்டு விழாவில் பாடப்பெற்றது.
பாடல் வெளியீட்டு விழாவில் தீ அவர்களால் கலந்துகொள்ள இயலாமல் போனதால் சின்மயிக்கு தமிழ் வெர்ஷன் மேடையில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
சின்மயி இதே பாடலின் தெலுங்கு, ஹிந்தி வெர்சன்களைப் பாடியுள்ளார். அந்தப் பாடல்களைக் கேட்டேன். மேடையில் அவர் பாடியிருக்கும் அதே நடையில் அமைந்துள்ளன.
சின்மயி அவரது தனித்திறமை மற்றும் இருபத்தைந்து வருட அனுபவம் கொண்டு பாடலை வேறொரு தளத்துக்குள் கொண்டு சென்றிருக்கிறார் என்றால் மிகையில்லை.
தீ வெர்ஷன் என்பது இன்பம் துன்பம் இரண்டும் கலந்த “உனக்காக எப்போதும் காத்திருப்பேன் என்னை பிரிந்து விடாதே” வெர்ஷன்.
சின்மயி வெர்ஷன் என்பது “இன்பம் துன்பம் ஆற்றாமை நம்பிக்கை எள்ளல் துள்ளல் நிறைந்த உன்னுடன் வாழ்ந்த போது மகிழ்ச்சியாக இருந்தேன் நீ இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஐ டோண்ட் கேர் வெர்ஷன்.
இத்தனை உணர்ச்சிகளைக் கலவையாக்கி குழைத்துப் பாடிய சின்மயின் திறமையை நாம் அனைவரும் நன்கறிவோம்.
எனினும் தீ வெளிப்படுத்தியிருக்கும் பாடலில் அந்தப் பாடலுக்குத் தேவையான உணர்வு – இன்பத்தை வலியுடன் வேதனையுடன் கடத்துவது – சிறப்பாகக் கடத்தப்பட்டது உண்மை.
என்னைப் பொருத்தவரை இரண்டு வெர்ஷன்களையும் ரசிக்கிறேன். இரண்டையுமே கேட்டு வருகிறேன். எனவே இரண்டுமே ஒரே கல்லின் இருபக்கம் செதுக்கப்பட்ட இரு கல்லோவியங்கள் இரண்டுமே இரண்டு விதங்களில் ஈர்ப்பவை.
இந்த இரண்டு கல்லோவியங்களையும் செதுக்கிய சிற்பியான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பூங்கொத்துகள்.
சிறப்பான பாடலுக்குத் தேவையான இசையுடன் இணைந்து ஒலிக்கக்கூடிய நயத்துடன் வரிகளை இயற்றிய சிவ ஆனந்த் அவர்களுக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள். ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் அலைகடல் ஆழம் பாடலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு ட்யூன் மற்றும் பாடலை வாங்குவது அதைப் படத்தில் பொருத்துவது என்பது இக்காலத்தில் மணிரத்னம் போன்றோரால் மட்டுமே சாத்தியம்.
இசை மழை இன்னும் கொட்டித் தீராதோ… என்று ஏங்க வைக்கும் இசை மழையை அனைவரும் சேர்ந்து படைத்துள்ளனர். கேட்டு இன்புறுவோம்.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர், சிவகங்கை.