டிடெக்டிவ் உஜ்வாலன் – கிராமத்தில் நடக்கும் புலனாய்வு!

’மின்னல் முரளி படத்தில் வரும் காலகட்டம் மற்றும் நிலப்பரப்பு, கதை மாந்தர்களோடு தொடர்புடைய வகையில் உருவாக்கப்பட்டது’ என்ற அடையாளத்தோடு வந்திருக்கிறது மலையாளத் திரைப்படமான ‘டிடெக்டிவ் உஜ்வாலன்’. முந்தைய படத்தைத் தயாரித்த வீக்எண்ட் ப்ளாக்பஸ்டர்ஸ் நிறுவனம், ‘வீக்எண்ட் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ என்ற பெயரில் இரு கதைகளையும் ஒரே கோட்டில் நிறுத்தியிருக்கிறது. இரண்டுமே தொண்ணூறுகளில் நிகழ்கிற கதைகள்; கேரளாவின் சாதாரண கிராமமொன்றில் நடக்கிற அசாதாரண நிகழ்வுகளைப் பற்றியது. முந்தையது ‘சூப்பர்நேச்சுரல் பேண்டஸி த்ரில்லர்’ என்றால், டிடெக்டிவ் உஜ்வாலனோ ஒரு ‘க்ரைம் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ படமாக வந்திருக்கிறது.

தியான் சீனிவாசன், சிஜி வில்சன், கோட்டயம் நசீர், சீமா நாயர், அமீன், நிஹால் நிஜாம், ரோனி டேவிட் ராஜ் உட்படப் பலர் நடித்திருக்கும் இப்படத்தை இந்திரனீல் கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஜி இருவரும் எழுதி இயக்கியிருக்கின்றனர்.

எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது ‘டிடெக்டிவ் உஜ்வாலன்’?

‘டி.உ.’ கதை!

பிளாச்சிக்காவு எனும் கிராமத்தில் இக்கதை நிகழ்வதாகக் காட்டப்படுகிறது.

அந்த கிராமத்தில் வசிக்கும் ஆடு, மாடு, கோழி மற்றும் ஏதேனும் பொருட்கள் காணாமல் போனால், அவற்றைக் கண்டுபிடிக்கிற சாதுர்யம் உள்ளவராகத் திகழ்கிறார் உஜ்வாலன் (தியான் சீனிவாசன்). எந்த வேலைக்கும் செல்லாமல், ஊரில் இருக்கிற கடையையும் கவனிக்காமல் இருக்கிற உஜ்வாலனை எந்நேரமும் கடிந்து கொள்கிறார் தாயார். தந்தையோ (கோட்டயம் நசீர்) அவர் என்ன செய்தாலும் ‘சூப்பர்’ என்கிறார்.

திடீரென்று ஒருநாள், அந்த கிராமத்தில் இருக்கிற ஒரு நபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அதுவரை எந்த வேலையும் இல்லாமல் இருந்த காவல்நிலையம், இந்தக் கொலையால் தலைகீழாக மாறுகிறது. எஸ்ஐ சச்சின் (ரோனி டேவிட் ராஜ்) முதல் அனைவரும் ’காவல் துறையில் பணியாற்றுவது இவ்வளவு கடினமா’ எனும் அளவுக்குப் பணியாற்றுகிற நிலை உருவாகிறது.

இரண்டாவதாக ஒரு கொலை நிகழ, அவர்களது பாடு திண்டாட்டமாகிறது. வழக்கம்போல, இரண்டு கொலைகளையும் ஆராய்கிறார் உஜ்வாலன்.

சாட்சிகள் எதுவும் இல்லாமல் இருப்பது, கொலையானவர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பதைக் காண்கிறார். இதன் பின்னணியில் ஒரு சைக்கோ கொலையாளி இருப்பதாகச் சொல்கிறார்.

மேற்சொன்ன இரு கொலைகள் குறித்தும் விசாரிக்கப் புதிதாக ஒரு போலீஸ் அதிகாரி நியமிக்கப்படுகிறார். அவரது பெயர் சாம்பு (சிஜு வில்சன்). அவருடன் இரு உதவியாளர்களும் இருக்கின்றனர்.

அந்த குழுவினர் கொலை நடந்த இடத்தில் மீதமிருக்கிற தடயங்களைச் சேகரிக்கின்றனர். இந்த நிலையில், மூன்றாவதாக ஒரு நபர் கொலையாகிறார். அவரது உடல் ஒரு போர்வையில் கட்டி மரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது.

சாம்புவும் இதர போலீசாரும் இதற்கு யார் காரணம் என்று புரியாமல் குழம்புகின்றனர். ஆனால், அனைத்துக்கும் சாம்புவே காரணம் என்று எண்ணுகிறார் உஜ்வாலன். காரணம், சாம்புவின் அசாத்திய உடல் வலிமையே.

ஊர் மக்கள் முன்னிலையில் அதனை உஜ்வாலன் சாம்புவிடம் சொல்ல, பதிலுக்கு ‘உங்கப்பாவும் தான் கட்டுமஸ்தாக இருக்கிறார்’ என்று அதனை அவர் அப்படியே எதிர்பக்கம் திருப்பி விடுகிறார்.

அதனைத் தொடர்ந்து, இரு தரப்பும் ஒருவரையொருவர் சந்தேகப்படுகிறது. அதற்குள் அடுத்த கொலையும் நிகழ்ந்துவிடுகிறது.

ஒருகட்டத்திற்கு மேல் ‘நாம் தவறான திசையில் செல்கிறோமோ’ என்று எண்ணத் தொடங்குகிறார் உஜ்வாலன். கொலையாளி ஒரு துப்பு கூட கிடைக்கவிடாமல் திறமையாகச் செயல்படுவதை எண்ணி விரக்தியடைகிறார்.

அதன் முடிவில், கொலையாளியாக நம்மைத் தேடி வருவது மட்டுமே நம் முன் இருக்கும் ஒரே சாத்தியம் என்றெண்ணுகிறார். அதற்காக சாம்புவிடம் உதவி கேட்கிறார்.

உஜ்வாலனுக்குச் சாம்பு உதவி செய்தாரா? அந்த கிராமத்தில் அடுத்தடுத்து கொலைகள் செய்யும் நபர் அடையாளம் காணப்பட்டாரா என்று ஒரு புலனாய்வு கதையாக நீள்கிறது ‘டிடெக்டிவ் உஜ்வாலன்’ படத்தின் மீதி.

நல்ல கதைதான்..!

உண்மையைச் சொன்னால், ‘டிடெக்டிவ் உஜ்வாலன்’ கதை ஓரளவுக்குச் சுவாரஸ்யம் தரக்கூடியது தான். அதற்கேற்ப, தொண்ணூறுகளில் நிகழ்வதாக நல்லதொரு பின்னணியையும் பிடித்திருக்கின்றனர் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கும் இந்திரனீல் கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஜி கூட்டணி.

ஆனால், சுவாரஸ்யம் தருகிற கதாபாத்திரங்களை வடிவமைத்த இக்கூட்டணியால் அதற்கேற்பச் சுவையான, புதுமையான காட்சிகளை அமைக்க முடியவில்லை.

அதனால், ‘இது ஒரு சைக்கோ கொலையாளியின் வேலை’ என்று நாயகன் உஜ்வாலன் பாத்திரம் சொன்னபிறகும் கதை நகராமல் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கெதிராக, திரைக்கதையில் சாம்பு பாத்திரம் களம் இறக்கப்பட்டிருக்கிறது.

இக்கதையில் வில்லன் யார் என்று விளக்குவதற்காக, இரண்டாம் பாதியில் ஒரு பிளாஷ்பேக் சொல்லப்படுகிறது. முழுக்கச் செயற்கைத்தனம் நிறைந்திருந்தாலும், அந்த பகுதி ‘ஓகே’ எனும்படியாக உள்ளது. ஆனால், அதனை அடிக்கோடிடும்விதமாக மையக்கதையில் காட்சிகள் பெரிதாக இல்லை.

நாயகனின் சிறு வயது பிளாஷ்பேக்கில், அவருடன் விளையாடுகிற ஒரு சிறுவன் காணாமல் போவதாகக் காட்டப்படுகிறது. அந்த சிறுவன் என்ன ஆனார்? அவர்தான் சாம்புவா? இது போன்ற கேள்விகளுக்குத் திரைக்கதையில் பதில் இல்லை.

நாயகன் பயன்படுத்துகிற சில பொருட்கள் எப்படி கொலை நிகழ்ந்த வட்டாரத்தில் கிடைக்கின்றன என்பதற்கும் பதில் இல்லை.

இது போன்ற நிறைய விஷயங்கள், ‘டிடெக்டிவ் உஜ்வாலன்’ உருவாக்க வேண்டிய தடத்தைக் கலைத்துப் போடுகின்றன.

ஆனால், அதையும் மீறிச் சுவாரஸ்யம் தருகிறது ‘ஒரு கிராமத்தில் நிகழ்கிற கொலை புலனாய்வு’ எனும் கதையம்சமே.

ஒளிப்பதிவாளர் பிரேம் அக்கட்டு, ஸ்ரையந்தி, படத்தொகுப்பாளர் சமன் சாக்கோ, கலை இயக்குனர் க்கோயாஸ், இசையமைப்பாளர் ஆர்ஸீ, ஸ்டண்ட் இயக்குனர் தவசிராஜ் என்று பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த வேறுபட்ட முயற்சிக்குத் தோள் கொடுத்திருக்கின்றனர்.

ஆனாலும், சில இடங்களில் திரைக்கதை சொதப்பியிருப்பதால் அவர்களது உழைப்பு வீணாகியிருக்கிறது.

இந்த படத்தில் நாயகனாக தியான் சீனிவாசன் வருகிறார். பல விஷயங்களைத் தேடித் தேடித் தெரிந்துகொள்கிறவராக, தெரியாத விஷயங்களையும் தெரிந்தது போலச் சமாளிப்பவராக, தன் கிராமத்தில் நிகழ்கிற குற்றங்களைத் தடுத்து நிறுத்தும் கொள்கையுடையவராக, அவர் திரையில் காட்டப்பட்டிருக்கிறார். அப்பாத்திரத்தோடு பொருந்தி நின்றாலும், அவரது உடல்வாகும் அதிக எடையும் அப்பாத்திரத்தின் உயிர்ப்புத்தன்மைக்கு நேரெதிராகத் தெரிகின்றன.

இதில் நாயகி என்று எவரும் கிடையாது.

இன்னொரு முக்கியப் பாத்திரத்தில் சிஜு வில்சன் நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக விறைப்பு காட்டியிருக்கிறார். இது போக கோட்டயம் நசீர், ரோனி டேவிட் ராஜ், சீமா, அமீன், நிஹால் நிஜாம், ஷௌபாஸ், நிர்மல் பலாழி என்று சுமார் இரண்டு டஜன் பேர் நடித்திருக்கின்றனர்.

ஆர்ஸீயின் பின்னணி இசைக் காட்சிகளை வேகமாக நகர்த்த உதவியிருக்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ‘டிடெக்டிவ் உஜ்வாலன்’ திரைப்படம் சுமார் என்பதற்கான அளவுகோலில் பின்தங்கியிருக்கிறது.

’இந்த கதையையும் பின்னணியையும் வச்சுகிட்டு புகுந்து விளையாடலாமே’ என்று சொல்கிற அளவுக்கு இதன் உள்ளடக்கம் உள்ளது.

தொண்ணூறுகளில் உள்ளூர் கேபிள் சேனல் இயங்குவதாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அது போன்ற விஷயங்களைக் காட்டிவிட்டு, ‘மின்னல் முரளி’ போன்று தொண்ணூறுகளில் நிகழ்கிற கதை என்று அடம்பிடிப்பதை ஏற்றுக்கொள்வது கடினம்.

அதேநேரத்தில், இது போன்ற லாஜிக் மீறல்களைச் சரிப்படுத்தியிருந்தால், முன்பாதியில் பல காட்சிகளில் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால், ஜீத்து ஜோசப் – ஆசிஃப் அலியின் ‘கூமன்’ போன்று அமைந்திருக்கும் இப்படம். அந்த வாய்ப்பினைத் தவறவிட்டு, ‘இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கலாம்’ என்ற கமெண்ட்களை பெறுகிறது இந்த ‘டிடெக்டிவ் உஜ்வாலன்’.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like