தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி. தங்களது படங்களில் மக்களுக்கு தேவையாக சிறந்த கருத்துக்களை வலியுறுத்துவதில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல என்பதை இன்றும் அவர்களது படங்கள் நமக்கு உணர்த்திக்கொண்டுதான் இருக்கின்றன.
தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் தங்கள் தனித்தனியாக நூற்றுக்கு அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தது ஒரே படம் தான் என்பது ஒரு சிலர் மட்டுமே அறிந்த ஒன்று.
1954-ம் ஆண்டு வெளிவந்த ‘கூண்டுக்கிளி’ படம்தான் எம்.ஜி.ஆர்., சிவாஜி இணைந்து நடத்த ஒரே படம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
டி.ஆர்.ராமண்ணா இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜி கிட்டத்தட்ட வில்லன் ரோலில் நடித்தார் என்றே சொல்லலாம்.
தங்கராஜ் ஜீவா என்ற இரு நண்பர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படம். இதில் தங்கராஜ் கேரக்டரில் எம்.ஜி.ஆர், ஜீவா கேரக்டரில் சிவாஜியும் நடித்திருந்தனர்.
1936-ல் ‘சதிலீலாவதி’ படத்தின் மூலம் திரையில் அறிமுகமான எம்.ஜி.ஆர். அதன்பிறகு படிப்படியாக முன்னேறி நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
அதே சமயம் பராசக்தி என்ற படத்தின் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுக்களைப் பெற்றவர் சிவாஜி. இவர்கள் இருவரையும் இணைத்து படம் இயக்க முடிவு செய்கிறார் டி.ஆர்.ராமண்ணா.
அப்போதைய தமிழ் சினிமாவின் கவர்ச்சிக் கன்னி டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரரான டி.ஆர்.ராமண்ணா எடுத்த ‘வாழப்பிறந்தவள்’ என்ற படம் தோல்வியில் முடிந்ததால், அடுத்து வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ‘கூண்டுக்கிளி’ என்ற கதையை படமாக்க முடிவு செய்கிறார். எழுத்தாளர் விந்தன் எழுதிய கதைதான் கூண்டுக்கிளி.
இந்தக் கதைக்கு எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் சரியாக இருப்பார்கள் என்று முடிவுசெய்த டி.ஆர்.ராமண்ணா முதலில் இது தொடர்பாக எம்.ஜி.ஆரை தனது அலுவலர்கள் மூலம் அணுகுகிறார்.
எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான கே.வி.மகாதேவன் மூலம் பேசிய டி.ஆர்.ராமண்ணாவுக்கு யோசிக்க கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்பதே எம்.ஜி.ஆரின் பதிலாக இருந்துள்ளது.
இதனால் நம்பிக்கை இழந்த ராமண்ணனா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசிக்கிறார்.
ஆனால், அடுத்த சில தினங்களில் எம்.ஜி.ஆர். ராமண்ணா அலுவலகத்திற்கு வந்து நான் உங்களது படத்தில் நடிக்கிறேன் என்று சொல்ல, உடனடியாக அவருக்கு அட்வான்ஸாக ரூ.1000 கொடுக்கிறார். ஆனால் அதை வாங்க மறுக்கும் எம்.ஜி.ஆர் ஒரு ரூபாய் மட்டும் அட்வான்ஸாக பெற்றுக்கொண்டு தேதியைக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.
இதனால் நம்பிக்கையுடன் இருந்த டி.ஆர்.ராமண்ணா அடுத்து சிவாஜியை அணுக ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது யாரும் எதிபார்க்காத வகையில் சிவாஜியும் ராமண்ணா அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அப்போது படத்தைப் பற்றி ராமண்ணா கூற விழைய எல்லாம் கேள்விப்பட்டுத்தான் வந்திருக்கிறேன் தேதிகள் எப்போது வேண்டும் என்று கேட்டிருக்கிறார்
அப்போது சம்பளம் குறித்துப் பேச, அதை அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு உங்களிடம் கைநிறைய வெள்ளிக்காசு மட்டுமே வாங்கிக்கொள்ள அம்மா சொல்லியிருக்கிறார், அதை மட்டும் கொடுங்கள் என்று கேட்டு பெற்றுக்கொண்டு சென்றுள்ளார்.
இதில் டி.ஆர்.ராமண்ணாவின் ஆசைக்கு அஸ்திவாரம் இட்டவர் அவரின் சகோதரி டி.ஆர்.ராஜகுமாரி தானாம்.
தனது சகோதரர் எம்.ஜி.ஆர். நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என்று சிவாஜியிடம் டி.ஆர்.ராஜகுமாரி கூறியது பின்னர்தான் தெரியவந்துள்ளது.
ஆனால் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் சரியாக போகவில்லை என்றாலும் தற்போது தமிழ் சினிமா வரலாற்றில் இடம்பெற்று சாதித்துள்ளது.
- நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்