ஒரே பாட்டுக்கு 25 டேக்; நேருவையே அழ வைத்த லதா மங்கேஷ்கர்!

இந்திய சினிமாவின் முன்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், 1977-ம் ஆண்டு வெளியான கினாரா திரைப்படத்தில் குல்சாரின் “நாம் கூம் ஜாயேகா” மற்றும் “மேரி ஆவாஸ் ஹி பெஹ்சான் ஹை” என்ற பாடல், அவரின் குரலின் சாரத்தை சரியாக காட்டியிருக்கும்.

எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு புகழ்பெற்ற வாழ்க்கையில், 36-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர்.

1949 ஆம் ஆண்டு வெளியான மஹால் திரைப்படத்தில் தொடங்கி ரங் தே பசந்தி (2006)-ல் ஐகானிக் டிராக் வரை, அவரது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. இதில் பல பாடல்கள் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.

இப்படி வெவ்வேறு காலக்கட்டத்தில், குறைந்த தொழில்நுட்ப வசதியுடன் பல பாடல்களைப் பாடுவதற்கு என்ன தேவை என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு லதா மங்கேஷ்கர் ஒரு நேர்காணலில் பதில் அளித்துள்ளார்.

கமல் அம்ரோஹியின் மஹால் படத்திலிருந்து தனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்றாக  “ஆயேகா ஆனேவாலா”  பாடலைக் கூறிய லதா மங்கேஷ்கர், அந்தப் பாடல் பதிவு செய்தபோது தனக்கு 20 வயது என்றும், பாடல் பதிவு செய்ய மிகவும் கடினமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

“நான் எப்படி அந்த பாடலை பாடினேன் என்பதை சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். முதல் சரணம் வரும்போது, ‘தொலைவில் இருந்து குரல் வருவது போல் இருக்க வேண்டும்’ என்று என்னிடம் சொன்னார்கள்.

அதன் காரணமாக மைக்கில் இருந்து தூரத்தில் நிற்க வைத்துப் பாடலைத் தொடங்கினேன். அதன்பிறகு பாடிக்கொண்டே நடந்து மைக் இருக்கும் இடத்திற்கு சரியான நேரத்தில் வரவேண்டும்.

இதற்காக நான் சுமார் 25 டேக்கள் வாங்கினேன். ஒவ்வொரு முறையும் அவர்கள் ஏதாவது தவறு நடந்து அவர்கள் என்னை மீண்டும் பாடும்படி கேட்டுக்கொள்வார்கள்.

இதனால் இந்தப் பாடலைப் பாட எனக்கு மிகவும் பயமாக இருந்தது. இது மிகவும் கடினமாக இருந்தது. என்னால் அதை செய்ய முடியவில்லை.

ஆனால், எப்படியோ சமாளித்துவிட்டேன். அதனால்தான் இந்த பாடல் இன்றுவரை நினைவில் இருக்கிறது என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.

முகல்-இ-ஆசாமின் ‘பியார் கியா தோ’ பாடலுக்காக வேறு அறையில் நிற்க வைத்து பாட சொன்னது உண்மையா?

முகல்-இ-ஆஜாமின் “பியார் கியா தோ தர்னா க்யா” என்ற ஐகானிக் பாடலை ஒரு குளியலறையில் எதிரொலிக்கும் வகையில் பதிவு செய்ததாக வதந்திகள் உள்ளன. எனினும், இது உண்மையல்ல. நான் அந்த பாடலை குளியலறையில் இருந்து பாடவில்லை.

நாங்கள் பாடலைப் பதிவு செய்தபோது, கடைசி வரி எதிரொலிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஆனால் அப்போது தொழில்நுட்பம் அதிக முன்னேறவில்லை. எனவே நாங்கள் அதை கைமுறையாக செய்ய வேண்டியிருந்தது.

அதன் காரணமாக இசையமைப்பாளர் நௌஷாத் என்னை வேறு அறையில் நிற்க வைத்தார்.

நான் அங்கிருந்து பாடினேன். பிறகு மைக்கிற்கு சற்று அருகில் வந்து மீண்டும் பாடினேன். இந்த வழியில், நான் வெவ்வேறு இடங்களில் இருந்து பாடினேன்.

அடிப்படையில், அந்தப் பாடல் சரியாக ஒலிக்க நான் மீண்டும் பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், குளியல் அறையில் இருந்து பாடினேன் என்பது உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

லதா மங்கேஷ்கரின் பாடல்கள் பார்வையாளர்களிடம் எதிரொலித்தது மட்டுமல்லாமல் ஆழமான உணர்ச்சிகளையும் ஏற்படுத்தியது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு “ஏ மேரே வதன் கே லோகோ” பாடலைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இந்த நிகழ்ச்சி 1963 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று நடைபெற்றது. அப்போது இந்திய-சீனா போருக்கு சில மாதங்களுக்குப் பிறகு, பல இந்திய வீரர்களின் உயிரைக் கொன்றது.

இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த லதா மங்கேஷ்கர், “நாங்கள் அனைவரும் வருத்தப்பட்ட நேரம் அது. நாங்கள் டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடத்த சென்றிருந்தோம். அப்போதைய நமது பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது மகள் இந்திரா காந்தி மற்றும் பிற அமைச்சர்களும் அங்கு வந்திருந்தனர்.

ஏ மேரே வதன் கே லோகோ என்ற பாடலை நான் பாடியபோது, அவர் அதை மிகவும் விரும்புவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னால் முடிந்ததைத் தான் கொடுத்தேன். ஆனால், பாடலைக் கேட்டு அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

நான் பாடி முடித்து உள்ளே சென்றுவிட்டேன். அப்போது நம்ம டைரக்டர், மெகபூப் கான் என்னைத் தேடி வந்து, பிரதமர் உங்களை அழைக்கிறார்’ என்று சொன்னதும் நான் திகைத்துப் போனேன்.

நம்மை ஏன் அழைக்கிறார் என்று நான் யோசித்தேன். என்னைப் பார்த்ததும், ‘பேட்டா, இன்னைக்கு என்னை அழ வைத்துவிட்டாய்’ என்று சொன்னார் நேரு.

“அடுத்த நாள், என் சகோதரிக்கு திருமணம் நடக்கவிருந்ததால் நான் பம்பாய்க்குத் திரும்ப வேண்டியிருந்தது. நான் பம்பாய்க்கு வருவதற்குள், செய்தி வைரலாகிவிட்டது.

‘பிரதமரை அழ வைத்த பாடகி’ என்று தலைப்புச் செய்திகள் எழுதப்பட்டன.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, ஒவ்வொரு முறையும் நான் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, சில அரசியல்வாதிகள் முன் வரிசையில் அமர்ந்து அழுதார்கள்.

10 மணி நேரம் நின்று பாடிய ‘லுக்கா சுப்பி’ பாடல்

2022-ல் தனது 92 வயதில் காலமான லதா மங்கேஷ்கர், 2006-ம் ஆண்டு இயக்குனர் ராக்யேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா, இயக்கத்தில் வெளியான ரங் தே பசந்தி (2006) திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ,ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றினார்.

இந்த படத்தில் வரும் “லுக்கா சுப்பி” பாடலைப் பதிவு செய்த காலத்தின் மறக்கமுடியாத கதையைப் பகிர்ந்து கொண்டார். இது குறித்து ஓ2இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

பாடலுக்கான இசை மற்றும் சர்கம் தயாரிக்கப்பட்ட பிறகு, லதா மங்கேஷ்கர் என்னை அழைத்து, நான் பாடலை பதிவு செய்ய சென்னைக்கு போக வேண்டுமா என்று கேட்க, உங்களுக்கு அந்த தொந்தரவு வேண்டாம்.

“ஏஆர் ரஹ்மான் மும்பை வருவதாக என்னிடம் கூறினார் என்று சொன்னேன். ஆனால் “பாடல் பதிவு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை சென்றார். விமான நிலையத்தை அடைந்தவுடன் நேராக ஸ்டுடியோவிற்கு செல்ல வேண்டும் என்று சொன்னார்.

நான் அவளிடம், ‘தயவுசெய்து ஹோட்டலுக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவிற்கு போக சொன்னார்.

அங்கு சென்றவுடன், பின்னணி இசையை கேட்டுவிட்டு ஒத்திகை பார்க்கலாமா என்று கேட்டார். உடனே, இசையை ஒரு கேசட்டில் பதிவு செய்து வாக்மேனில் கேட்டு, மூன்று நாட்கள் ஒத்திகை பார்த்தார். அதன்பிறகு பாடல் பதிவு செய்யப்பட்டது.

தனது 70 வயதிலும், இந்த பாடலைப் பதிவு செய்ய சுமார் எட்டு முதல் பத்து மணி நேரம் நின்று கொண்டிருந்தார். “நான்காவது நாள், அவர் பாடலைப் பதிவு செய்ய வந்தபோது, ’ஏன் மைக்கை இவ்வளவு தாழ்வாக வைத்திருக்கிறார்கள்?

அதை அதிகமா அட்ஜஸ்ட் செய்யணும் என்று சொன்னார்.

‘நீங்க உட்கார்ந்து பாடலாம் அதற்காகதான் இப்படி என்று சொன்னபோது, ‘இல்லை, என்னால உட்கார்ந்து பாட முடியாது’ என்று சொல்லிவிட்டு பாட தொடங்கினார். இது அடுத்த 8 முதல் 10 மணி நேரம் தொடர்ந்தது.

பொதுவாக ஒரு பாடலில், ஒரு குறிப்பிட்ட வார்த்தையை ஒரு தவறாக பாடினால் மீண்டும் பாடும்போது அந்த வார்த்தையை மட்டும் தான் பாடுவார்கள். ஆனால், லதா மங்கேஷ்கர், அந்த பாரா முழுவதையும் நான்கு வரிகள் அல்லது ஆறு வரிகளைப் பாடுவார்.

இதை பார்த்து நான் டிஸ்னி வேர்ல்டில் இருபுறமும் மகத்துவத்தைக் கண்டது போல் உணர்ந்தேன். அவரது பாடல்கள் பலரை ஊக்குவிப்பதால், மில்லியன் கணக்கானவர்களின் நினைவுகளில் தொடர்ந்து வாழ்ந்து வரும் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர்.

  • நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
You might also like