விலங்குகளைப் பாதுகாக்க உறுதியேற்போம்!

அக்டோபர் 4: உலக விலங்கு நாள்

உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4-ம் நாளில் வருவதால் இந்நாள் உலக விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக விலங்கு நாளின் நோக்கம், உலகெங்கிலும் உள்ள விலங்குகளின் நிலையை மேம்படுத்துவதற்காக, அவற்றிற்காக உலகெங்கிலும் இருக்கின்ற விலங்கு நலன் புரியும் அமைப்பின் தரங்களை உயர்த்துவதாகும்.

உலக விலங்கு நாள் கொண்டாட்டத்தை உருவாக்குவதன் மூலமாக, விலங்கு நல இயக்கத்தை ஒன்றிணைத்து, உலகளாவிய சக்தியாக அணிதிரட்டி உலகத்தை அனைத்து விலங்குகளுக்கும் ஏற்ற சிறந்த இடமாக மாற்றுவதே ஆகும்.

இது தேசியம், சமயம், நம்பிக்கை அல்லது அரசியல் சித்தாந்தத்தைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது.

தற்போது விலங்குகளின் மீது அதிகரித்துள்ள விழிப்புணர்வு மற்றும் கல்வியின் மூலம் விலங்குகளை எப்போதும் உணர்வுள்ள மனிதர்களாக அங்கீகரிக்கும் ஒரு உலகத்தை நாம் உருவாக்க முடியும், மேலும் அவைகளின் நலனுக்கு முழு மரியாதை எப்போதும் செலுத்தப்படுகிறது.

உலக விலங்கு நாளை சைனாலஜிஸ்ட் ஹென்ரிச் ஜிம்மர்மேன் என்பவர் உருவாக்கினார். அவர் முதல் உலக விலங்கு நாளை 1925 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று ஜெர்மனியின் பெர்லினில் உள்ள அரண்மனை விளையாட்டுத் திடலில் ஏற்பாடு செய்தார்.

இந்த முதல் நிகழ்வில் 5,000 க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழல் நிகழ்வின் புரவலர் புனித அசிசியின், புனித பிரான்சிஸின் பண்டிகை நாளோடு இணைவதற்காக இந்த நிகழ்வு முதலில் அக்டோபர் 4 ஆம் நாளன்று திட்டமிடப்பட்டது. இருப்பினும், அந்த இடம், அந்த நாளில் கிடைக்கவில்லை.

இந்த நிகழ்வு அக்டோபர் 4 ஆம் நாள் முதல் முறையாக 1929 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. தொடக்கத்தில் அவர் ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவில் மட்டுமேப் பின்பற்றுவதைக் கண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜிம்மர்மேன் உலக விலங்கு நாளை மேம்படுத்துவதில் அயராது உழைத்தார்.

கடைசியாக, 1931 ஆம் ஆண்டில் மே மாதத்தில் புளோரன்ஸ் இத்தாலியில் நடந்த பன்னாட்டு விலங்கு பாதுகாப்பு காங்கிரஸின் மாநாட்டில்,

அக்டோபர் 4 ஆம் நாளில் உலக விலங்கு நாளை உலகளாவியதாக மாற்றுவதற்கான அவரது முன்மொழிவு ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரு தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆபத்தான உயிரினங்களின் அவல நிலையை முன்னிலைப்படுத்த விரும்பிய இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் சூழலியல் நிபுணர்களின் மாநாட்டில் 1931 ஆம் ஆண்டில் உலக விலங்கு நாள் தொடங்கியது என்று சில நேரங்களில் தவறாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில், உலக விலங்கு நாள் விழா கொண்டாட்டங்கள் முன்பு ஆர்.எஸ்.பி.சி.ஏ (RSPCA) என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டன.

2002 ஆம் ஆண்டு முதல் பின்லாந்தில், ஃபின்னிஷ் விலங்கு பாதுகாப்பு சங்கங்கள் (SEY) விலங்கு நாளான அக்டோபர் 4 வருகின்ற அம்மாதத்தின் முதல் வாரத்தில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து,

விலங்குகளின் நலன் குறித்து குழந்தைகள் தெரிந்து கொள்வதற்காக, பள்ளிகளுக்குப் பல்வேறு பொருட்களை வழங்குகின்றன.

2003 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட விலங்கு நலத் தொண்டு நிறுவனமான நேச்சர் வாட்ச் அறக்கட்டளையின் தலைமையில் மற்றும் நிதியுதவி அளிக்கும் விலங்கு பாதுகாப்பு இயக்கத்தை ஒன்றிணைக்கும் உலகளாவிய நிகழ்வாக வளர்ந்து வருகிறது.

2006 ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று போலந்து பாராளுமன்றம் அக்டோபர் 4 ஆம் நாளை விலங்கு நாளாக நிறுவுவது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது.

அர்ஜென்டினாவில், விலங்கியல் நாள் 1908 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இது விலங்குப் பண்ணையின் இயக்குநரும் புவெனஸ் அயர்ஸின் விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் தலைவருமான இக்னாசியோ லூகாஸ் அல்பராசின் தலைமையில் இருந்தது.

தொடக்கத்தில் இந்த நாள் ஏப்ரல் 2 ஆம் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. அதன் பின்னர், 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாளில் அல்பாரிகான் இறந்த பிறகு, அவரின் நினைவாக அன்றைய நாளே விலங்கியல் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

விலங்குரிமை (Animal rights) என்பது அனைத்து வலியுணர் விலங்குகளும், மனிதப் பயன்பாட்டுக்கு உட்படாமலிருக்கும் தார்மீக சுயமதிப்பையும் சுதந்திரத்தையும் கொண்டவை என்றும்,

துன்பத்திலிருந்து விடுபட்டிருக்க வேண்டிய அடிப்படை உரிமையைக் கொண்டவை என்றும், மனிதர்களுக்கிணையாக வாழ்வின் அடிப்படை நலத் தேவைகளைப் பெறும் உரிமையைக் கொண்டவை என்றும் கூறும் மெய்யியல் ஆகும்.

பொதுவாகக் கூறின், உலக வழக்கில் ‘விலங்குரிமை’ என்னும் சொல் ‘விலங்கினப் பாதுகாப்பு’ என்றும், ‘விலங்கின விடுதலை’ என்றும் கொள்ளப்படுகிறது.

சுருங்கக் கூறின், தனிமனிதனுக்குத் தரப்படும் வாழத் தேவையான அடிப்படை உரிமைகளும் பாதுகாப்பும் விலங்குகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

அதாவது, எக்காரணத்தைக் கொண்டும் விலக்கில்லாத வாழுரிமை, சுதந்திரம், வலியிலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை முதலியன, அனைத்து உணர்வுள்ள விலங்குகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.

  • தேனி மு.சுப்பிரமணி

நன்றி: கல்கி இதழ்

You might also like