மறுபிறவியில் கண்ணதாசனாகப் பிறக்க ஆசை!

நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்த விசு

கவிஞர் கண்ணதாசனின் மகனான அண்ணாதுரையிடம், இயக்குநர் விசு பகிர்ந்து கொண்ட சம்பவம்.

**

விசுவின் எழுத்தில், எஸ்.பி.முத்துராமனின் இயக்கத்தில் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்த காலக்கட்டம்.

ஒரு பாடலை வாங்கி வருவதற்காக விசுவை கண்ணதாசனிடம் அனுப்புகிறார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். விசுவிற்கு மிகுந்த தயக்கம். இருந்தாலும் ‘நாடக உலகப்’ புகழ் தந்த துணிச்சலில் சென்று விடுகிறார்.

வழக்கம் போல் தாமதமாக வந்த கண்ணதாசனிடம், விசு உணர்ச்சிபூர்வமாக கதை சொல்லத் துவங்குகிறார்.

ஆனால், அதை சரியாக கவனிக்காமல், தன் வழக்கமான பாணியின்படி இசையமைப்பாளர் விஸ்வநாதனின் இடுப்பைக் கிள்ளியும் செல்லமாக அடித்தும் விளையாடிக் கொண்டிருக்கிறார் கண்ணதாசன்.

விசுவிற்கு சங்கடமும் சற்று எரிச்சலும் கூட. “என்னய்யா.. இந்த ஆள் கதையை ஒழுங்கா கேட்க மாட்டேங்கறாரே.. என்னத்த எழுதப் போறார்?” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

ஆனால், விசு சொல்வதை நிறுத்தும்போது ‘தொடர்ந்து சொல்’ என்பது போல் கைகாட்டிக் கொண்டே இருக்கிறார் கண்ணதாசன்.

விசு சொல்லி முடித்ததும் கண்ணதாசன் தன் உதவியாளரை அழைத்து “எழுதிக்கப்பா” என்று தன் வழக்கமான பாணியில் வசனம் போல சொல்லத் துவங்கி விடுகிறார்.

“குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம்
தேவன் ஒரு பாதை
தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை
காலம் செய்யும் பெரும் லீலை…”

**

விசுவிற்கு ஒரே ஆச்சரியம். படத்தின் மையத்தை ஒரு சில வரிகளில் இத்தனை கச்சிதமாகக் கொண்டு வந்து விட்டாரே என்று. ஆனால் தான் சொல்லும்போது கவனிக்காதது போல் இருந்தாரே என்றும் ஆச்சரியம்.

விஷயம் இங்கு முடியவில்லை. இந்தப் பாடலின் ஒரு வரியில் விசுவிற்கு ஒரு மறுப்பு தோன்றுகிறது. தைரியமாகக் கேட்டு விடுகிறார்.

கண்ணதாசன் அதற்கு விளக்கம் சொல்கிறார். விசு சொல்லி வந்த கதையின் பகுதிகளை ஒவ்வொன்றாக பிய்த்துப் பொருத்தமாக மேற்கோள் காட்டி அந்த வரி எப்படிப் பொருந்துகிறது என்று விளக்கியவுடன் விசு அப்படியே காலில் விழுந்து விடுகிறார்.

**

இறந்து போனவர்களில் இருவரைக் காணும் வரம் கிடைத்தால் யாரைக் கேட்பீர்கள்? என்று விசுவிடம் பிறிதொரு சந்தர்ப்பத்தில் கேட்கிறார்கள்.

ஒருவர் ‘என் அப்பா. இன்னொருவர் கண்ணதாசன்’ என்றாராம் விசு.

**

கண்ணதாசனைப் பற்றி எத்தனை வாசித்தாலும் இன்னமும் ஏதோ மீதியிருக்கிறது. அது அவர் மீதான பிரமிப்பை இன்னமும் உயர்த்துகிறது.

 – நன்றி : முகநூல் பதிவு

You might also like