மீண்டு வரும் தமிழ் சினிமா: முடக்க நினைக்கும் தடைகள்!

தமிழ் சினிமா உலகம், மீண்டும் ஒரு வேலை நிறுத்தத்தை சந்திக்க உள்ளது.

நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு, சிலருக்கு கால்ஷீட் கொடுக்காமல், வேறு படங்களில் நடித்து வருகிறார் என்பதால், அவருக்கு ‘ரெட் கார்டு’ விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டுக் கூட்டமும் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம்:

* முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே OTT தளங்களில் வெளியிட வேண்டும்.

*இப்போது ஒருசில நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஏற்கனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பாளரின் படங்களுக்கு பணிபுரியாமல் புதிதாக வரும் திரைப்பட நிறுவனங்களுக்குச் சென்று விடுகிறார்கள்.

இதனால் ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பொருளாதார இழப்பை சந்திக்கின்றனர்.

ஆகையால், இனிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றிருந்தால் அந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த படத்திற்குச் செல்ல வேண்டும்.

தனுஷுக்கு செக்:

* நடிகர் தனுஷ், பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும்.

*இன்றைய தேதியில், பல திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி நிற்கின்றன – அந்த நிலையை மாற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது.

* அந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு படப்பிடிப்புகள் ஆரம்பிக்கலாம் என்பதால் அடுத்த மாதம் 16 ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் துவங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

*தற்போது படப்பிடிப்பில் உள்ள திரைப்படங்களின் விவரங்களை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புகளை வருகிற அக்டோபர் 30-ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

* நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரின் சம்பளம் போன்ற செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால் அதை முறைப்படுத்த பல்வேறு முயற்சி செய்து தமிழ்த் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டி உள்ளது.

அதனால் வருகிற 01.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளையும் நிறுத்துவது என கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவை, தமிழ் சினிமாவின் பிரதான சங்கங்கள் எடுத்த கூட்டு முடிவாகும்.

கார்த்தி கடும் கண்டனம்:

இந்த தீர்மானங்களுக்கு நடிகர் கார்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, “திரைத்துறையில் தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் நல்ல உடன்பாட்டுடன் தொடர்ந்து நல்ல முறையில் பணியாற்றி வருகிறோம்.

நடிகர்கள் சார்ந்த பிரச்சினைகளும், தயாரிப்பாளர்கள் சார்ந்த பிரச்சினைகளும் இருதரப்பும் கலந்து பேசி குழுக்கள் அமைத்துதான் நிர்வாக முடிவுகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன” என தெரிவித்தார்.

“ஆனால் தயாரிப்பாளர் சங்கம் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் – வேலைநிறுத்தம் தொடர்பாக அவர்களாகவே ஒரு முடிவை எடுத்துள்ளனர் – இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

தனுஷ் தொடர்பாக இதுவரை எங்களுக்கு எழுத்துபூர்வமாக எந்தவொரு புகாரும் வராத நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

அதேபோல படப்பிடிப்பை நிறுத்தப் போவதாக அவர்கள் கூறியிருப்பது என்பது பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய விஷயம் – அதை எப்படி அவர்களே முடிவெடுக்க முடியும் என்று தெரியவில்லை” என நடிகர் கார்த்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

கொரோனாவால் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமா ஓரளவு மீண்டு வந்துள்ள நிலையில், தமிழ் சினிமாவில் நடைபெற உள்ள வேலைநிறுத்தம் கோடம்பாக்கத்தில் பல்வேறு தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like