ரசாயனத்தால் பழுக்க வைத்த பழத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

கோடைக்கால சீசன் பழங்களான மாம்பழம், தர்பூசணி பழங்களின் விற்பனையை அதிகரிக்கவும், பழங்களை விரைவில் பழுக்க வைக்கவும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மாம்பழங்களைப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு (Calcium Carbide) ரசாயனத்தைப் பெரும்பாலும் பயன்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரசாயனங்கள் கலந்த இந்தப் பழங்களை உண்ணும்போது ஒவ்வாமை, நரம்பு மண்டல பிரச்னை, புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இதனால், ரசாயனங்கள் கலந்த பழங்கள் விற்கபடுகிறதா என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்தவகையில், சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஆய்வு செய்த அதிகாரி ஒருவர், ரசாயனங்கள் கலந்த மாம்பழத்தை மக்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம் என விளக்கினார்.

நிறம்:

எல்லா மாம்பழங்களும் ஒரே நிறத்தில் பழுத்திருக்கும், அதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். சில ஆங்காங்கே கறுப்பாக வெந்தது போன்று இருக்கும், அதை வைத்தும் கண்டுபிடிக்கலாம்.

வாசனை:

ரசாயனங்கள் கலந்த பழங்களில் வாசனையே இருக்காது. அவற்றை நுகர்ந்து பார்த்தாலே தெரியும்.

சுவை:

மாம்பழங்கள் இயற்கையிலேயே சுவை மிகுந்தவை. ஆனால், இதில் மாம்பழத்திற்கான சுவையே இருக்காது.

மாம்பழம் நன்றாகப் பழுத்தது போன்று இருக்கும். ஆனால், அதை வெட்டும் போது காயை வெட்டுவது போலக் கரகரவென இருக்கும். இதை வைத்தும் கண்டுபிடிக்கலாம்.

சிம்பிள் செய்முறை:

நீங்கள் வீட்டிற்கு மாம்பழங்களை வாங்கி வந்தால், அதை சிறிது நேரம் தண்ணீரில் போடுங்கள்.

ரசாயன மாம்பழங்கள் மிதக்கும், ராசாயனம் இல்லாத மாம்பழங்கள் நீரில் மூழ்கும். இதனை வைத்தும் கண்டுபிடிக்கலாம்.

– நன்றி: விகடன்

You might also like