மீண்டும் என் வழிகாட்டியுடன் இணைந்துள்ளேன்!

– நடிகர் ரஜினிகாந்த்

‘ஜெயிலர்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை ‘ஜெய்பீம்’ புகழ் ஞானவேல் இயக்குகிறார். தலைவர் 170’ வது என இந்த படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

‘அண்ணாத்த’ நீங்கலாக ரஜினி படத்துக்கு தொடர்ச்சியாக இசை அமைத்துவரும் அனிருத், இந்தப் படத்துக்கும் இசை அமைக்கிறார்.

திருவனந்தபுரம், திருநெல்வேலியைத் தொடர்ந்து இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது.

இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர். ரஜினிகாந்த் – அமிதாப் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் படத்திற்காக 33 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப்புடன் சேர்ந்து  நடித்துள்ளார் ரஜினிகாந்த். வரும் சனிக்கிழமை வரை அங்கு ஷூட்டிங் நடைபெறுகிறது, அமிதாப்புக்கு இந்த படத்தில் ‘கெஸ்ட் ரோல்’.

படப்பிடிப்பு தளத்தில் அமிதாப்பச்சனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை ரஜினி, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “33 ஆண்டுகளுக்குப் பிறகு, என்னுடைய வழிகாட்டியான அமிதாப் பச்சனுடன், லைகா தயாரிப்பில், த.செ. ஞானவேல் இயக்கும் என்னுடைய 170வது படத்தில் மீண்டும் பணிபுரிகிறேன்.

என்னுடைய இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது” என்று ரஜினி பதிவிட்டுள்ளார்.

இந்த போட்டோவும், ரஜினி தொடர்பான இன்னொரு போட்டோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த இன்னொரு போட்டோ என்ன?

போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு, அவரது மனைவி லதா கொலு வைப்பது வழக்கம். இந்த ஆண்டும் கொலு வைக்கப்பட்டது.

நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமி அன்று நடந்த பூஜையில் முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி செல்வி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா, நடிகை மீனா, லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரஜினி மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபலங்களுக்கு பரிசுப் பொருட்களும் பிரசாதமும் வழங்கினர்.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like