டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சினேகா!

தெலுங்கை தாய்மொழியாக கொண்ட நடிகை சினேகா, துபாயில் பிறந்து வளர்ந்தவர்.

தமிழகத்துக்கு அவர்கள் குடும்பம் குடிபெயர்ந்த பிறகு ‘இங்கணே ஒரு நிலாபக்‌ஷி’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் 2001ம் ஆண்டு வெளியான ‘என்னவளே’ படம் தான் முதலில் வெளியானது. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார் சினேகா.

ஆனந்தம் படத்தில் குடும்ப பெண்ணாக அழகால் ரசிகர்களை கவர்ந்த சினேகாவின் ‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ என்ற பாடல் அந்த ஆண்டில் வெளியான வெற்றிப் பாடல்களில் ஒன்றாகவும். அப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய அடையாளமாக அமைந்ததை அடுத்து, அவருக்கு பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.

இயக்குநர் சிகரத்தின் பார்த்தாலே பரவசம், கமல் ஜோடியாக வசூல்ராஜா எம்பிபிஎஸ், பம்மல்.கே.சம்பந்தம், சூர்யாவின் ஜோடியாக உன்னை நினைத்து, விஜய் ஜோடியாக வசீகரா, ஷ்யாம் ஜோடியாக ஏய் நீ ரொம்ப அழகா இருக்க,

ஸ்ரீகாந்த் ஜோடியாக ‘ஏப்ரல் மாதத்தில்’, சேரனின் ஆட்டோகிராப், பிரிவோம் சந்திப்போம் என பல ஹிட் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

பார்த்திபன் கனவு திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

 அது மட்டுமின்றி அஜித், தனுஷ், அர்ஜுன், ஜீவன், சிம்பு, லாரன்ஸ் உள்ளிட்ட நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தங்கர்பச்சனின் பள்ளிக்கூடம் திரைப்படம், சினேகாவின் நடிப்பு முதிர்ச்சியை காட்டியது.

தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் மட்டுமின்றி கன்னடம், மலையாள படங்களிலும் அவர் தொடர்ந்து நடித்தார்.

புதுப்பேட்டை, அச்சமுண்டு அச்சமுண்டு உள்ளிட்ட படங்களில் துணிச்சலான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை சினேகா சரியாக பயன்படுத்திக்கொண்டார். நன்றாக தமிழ் பேச தெரிந்த நடிகை என்பதாலும் அவருக்கு கோலிவுட் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்பு கொடுத்தது.

தமிழில் எப்படி தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டாரோ அதேபோல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடிக்க செய்திருக்கிறார்.

சினேகாவின் ப்ளஸ் பாயிண்ட்டாக ரசிகர்கள் பார்த்தது அவரது சிரிப்பை. அதன் காரணமாக அவரை புன்னகை அரசி என்றே ரசிகர்கள் அழைத்து வந்தனர்.

சினிமாவில் எப்படி பிஸியாக இருந்தாரோ அதேபோன்று விளம்பர படங்களிலும் பிஸியாகவே இருந்தார் சினேகா. அதன் காரணமாக சீரியல்களுக்கு இடையே வரும் விளம்பர இடைவேளைகளிலும் சினேகா அனைத்து வீடுகளுக்குள்ளும் சேர்ந்தார்.

இதனிடையே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகும் நடிகை சினேகா படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சினேகா தற்போது சேலையில் அழகான வீடியோ வெளியிட்டு எவர்க்ரீன் அழகி என்பதை நிரூபித்துள்ளார்.

சினேகாவின் கணவர் பிரசன்னா இதற்கு முன்னதாக பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அதைத் தொடர்ந்து ஜோடியாக எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தையும் பகிர்ந்து தனது மனைவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சினேகா அளித்த ஒரு பேட்டியில், “எங்க குடும்பம் சினிமா சம்பந்தம் கொஞ்சமும் இல்லாதது.

சினிமா பார்த்து ஒரு ரசிகைக்குரிய ரசனையோடு அவங்க நல்லா நடிச்சிருக்காங்க.

இவங்களும் கொஞ்சம் பரவாயில்லை. இப்படி சினிமாவைக் குறித்தும் அதில் பங்காற்றியவர்களைக் குறித்தும் பேசிக்கொண்டிருந்த பேமிலியிலிருந்து சினிமா நடிகையாக நான் வந்திருக்கின்றேன்.

நான் பிறந்தது பம்பாயில் என்றாலும் வளர்ந்தது, படித்தது எல்லாம் எண்ணெய் வளம் மிக்க துபாய் நாட்டில்தான்.

அங்கேயும் எனது பழக்க, வழக்கம் எல்லாம் ஒரு தமிழ் குடும்பம் மாதிரிதான் இருக்கும். அப்போது நான் மினி ஸ்கர்ட் கூட போட்டதில்லை.

நடிக்க வந்தது ஒரு கனவு மாதிரி நிகழ்ந்துவிட்டது. மலையாள ஸ்டார் நைட் நிகழ்ச்சியைப் பார்க்கப் போனேன். என்னைப் புடிச்சு நடிகையாப் போட்டுட்டாங்க.

நான் நடிச்ச முதல் மலையாளப் படம் நல்லா போகவில்லை. ஆனால் அந்தப் படத்தில் நடித்ததால் எனக்குள் இருந்த கேமிரா பயம் போயே போயிடுச்சு.

மணிரத்னத்தின் அசிஸ்டெண்ட் சுசிகணேசன் இயக்கத்தில் ‘விரும்புகிறேன்’ படத்தில் நடிக்கும்போதுதான் நான் சிரிக்கவும் அழவும் கத்துக்கிட்டேன். அந்தப் படம் எனக்கு ஒரு பயிற்சிக்கழமாக அமைந்தது.

அந்தப் படத்தின் நடனக்காட்சியில் சுழன்று சுழன்று ஆடும்போது டமால் என்று கால் வழுக்கி விழுந்துவிட்டேன். பக்கத்தில் இருக்கிறவர்களை இடித்துக் கொள்ளாமல் ஆடணும் என்று பிரசாந்த் சொன்னார்.

இப்படிக்கூட நடித்த எல்லோரும் எனக்கு டிப்ஸ் கொடுத்தாங்க. அதனாலே எல்லோருக்கும் என் மீது ஒரு ஈரமான பார்வை படர்ந்தது. எனக்குள் சொல்லிக் கிட்டேன்.

இன்னும் முயற்சி செய்யணும். ஏதாவது ஒரு வழியில் சாதிக்கணும், சினேகான்னு யார்னு ஒரு பத்து பேருக்குத் தெரியணும்னு ஆசை இருந்தது.

ஏதாவது ஒரு துறையில் நான் நல்ல பேர் எடுக்கணும்னு ஆசைப்பட்டதைவிட சினிமா அதிகமான புகழும், பேரும் கொடுத்திருக்கு. ஆனாலும் கோடிகள் குவிந்தாலும் சில விஷயங்களில் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக இருக்கிறேன்.

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்னு சொல்லிதான் சினிமாவுக்கு வந்தேன். முடிந்த வரை அதிலிருந்து நழுவவில்லை.

என்கிட்டே எனக்குப் பிடிச்சதும் மத்தவங்களுக்கு என்கிட்டே பிடிச்சதும் என்னோட சிரிப்புதான்.

நான் பிறக்கும் போதே என்னோட பேரன்ஸ் நீ என்னைக்கும் சிரிச்சிக்கிட்டே இருக்கணும்னு ஆசீர்வதிக்கப்பட்டேனா என்னன்னு தெரியலே… எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கிறதுதான் எனக்குப் பிடிக்கும்.

உனக்கு வாய் வலிக்காதா… எப்பப்பார்த்தாலும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன்னு என் ஃப்ரண்ட்ஸ் கூட கேட்பாங்க. ஸ்கூலில்கூட டாம் அண்டு ஜெர்ரின்னு கூப்பிடுவாங்க அங்கேயும் இங்கேயும் பறந்திட்டிருப்பேன்.

சிரிக்கிறது எனக்கு ரொம்ப பிடித்த வேலை. சிரித்தால் கவலை, வலி, நோய் எல்லாம் போயிடும் என்பார்கள். சிரிப்பு ஆண்டவன் கொடுத்த ஆரோக்கிய வரம். எனக்குச் சிரிப்பு ஒரு டானிக் மாதிரி.

பல பேர் அந்த ஆரோக்கியத்தின் ரகசியம் உணராமல் ஆண்டவன் கொடுத்திருக்கிற அந்த வரத்தைப் பயன்படுத்தாமல் உம்முனு இருப்பாங்க. அந்த மாதிரி உம்மன்னா மூஞ்சிகளை பார்க்கவே எனக்குப் பயமாக இருக்கும்.

சினிமா மிக அற்புதமான மீடியா. இதில் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. எல்லோராலும் கவனிக்கப்படும் மீடியாவாக இருப்பதால் இங்கிருப்பவர்களின் சின்ன சின்ன செயல்களும் விமர்சனத்துக்குள்ளாவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

என்னைப் பற்றியும் கிசுகிசு வந்ததைப் படிச்சுட்டு அழுதிருக்கிறேன். ஏண்டா நடிக்க வந்தோம்னு கூட தோணிச்சு.

அந்த வலியும், வேதனையும் கொஞ்சம் இருந்துச்சு. இப்ப கிசுகிசுகளைக் கண்டுக்கறதில்லை. மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயப்படணும்.

பட்டாம்பூச்சி மாதிரி பறந்துக்கிட்டிருந்தேன். என்ன பீச்சுல போய் மொளகா பஜ்ஜி சாப்பிட முடியாது. சின்ன பொண்ணு மாதிரி அலையைத் துரத்தி ஓட முடியாது.

சினிமாவினால் இழந்தது பிரைவசி மட்டும்தான். மற்றபடி சினிமா எனக்கு நிறைய சந்தோஷங்களைக் கொடுத்திருக்கு. வாழ்க்கையே ஒரு பள்ளிக்கூடம்தானே” என்று புன்னகையோடு தெரிவித்துள்ளார்.

You might also like