தமிழ் சினிமாவிலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்!

-ஜவான் பட விழாவில் ஷாருக்கான்

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் கலை அரங்கில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் ரசிகர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத், சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், ”என்னுடைய சகோதரர் இயக்குநர் அட்லீக்கும் நன்றி.

சென்னையிலிருந்து மும்பைக்கு இயக்குநர்கள் ரீமேக்கிற்காக சென்றிருக்கிறார்கள்.

ஆனால் சென்னையிலிருந்து புறப்பட்டு இந்தியாவின் நட்சத்திர நடிகரான ஷாருக் கானை சந்தித்து, கதை சொல்லி, அவரது தயாரிப்பில் படத்தை இயக்குவது என்பது சாதாரண விசயமல்ல. சவாலானது.

அவர் மட்டும் பணியாற்றாமல்.. அவரை நம்பி இருந்த எடிட்டர், கேமராமேன், டான்ஸ் மாஸ்டர், ஃபைட் மாஸ்டர், ஆர்ட் டைரக்டர் என எல்லோரையும் அழைத்துச் சென்று தன்னுடன் பணியாற்ற வைத்திருக்கிறார்.

அதிலும் பத்து ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகப் பணியாற்றி வரும் என்னை பாலிவுட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அனைவரும் கடினமாக உழைத்து ஜவானை உருவாக்கி இருக்கிறோம்.

ஷாருக்கான் வாழ்க்கையில் சில விசயங்கள் நடக்குமா என எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அதைவிட முதலில் இசையமைப்பாளராக வருவேனா என்பதே சந்தேகமாக இருந்தது.

தற்போது இசையமைப்பாளராகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் அதுவும் ஷாருக்கான் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அங்கு அறிமுகமாகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஷாருக்கான் மிகவும் அன்பானவர். குடும்பத்தில் ஒருவராக பழகக்கூடியவர்.

ஒரு முறை லண்டனுக்கு சென்றிருந்தபோது அங்கு அவர் எனக்காக ஷாப்பிங் சென்று, அங்கிருந்து எனக்கு போன் செய்து என் உடை அளவை தெரிந்துகொண்டு, எனக்காக பிரத்தியேகமாக ஆடையை வாங்கி பரிசாக அளித்தார். அந்த அன்பு ஈடு இணையற்றது.

இந்தப் படத்தை இந்தி திரைப்படமாக பார்க்காமல்  இந்திய சினிமாவாக கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

விஜய் சேதுபதி பேசுகையில், ” ஜவான் படத்தைப் பற்றி அட்லீ பற்றி நிறைய சொல்லலாம். இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளு முன் அட்லீயிடம் நிறைய விவாதிக்க வேண்டும் என சொன்னேன்.

‘வாங்கண்ணே. நாம பண்ணலாம். என்ன வேணும்னாலும் பண்ணுங்க’ என்றார். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. படத்தில் என் கதாபாத்திரத்தை நன்றாக வடிவமைத்திருக்கிறார்.

ஷாருக்கானை முதன்முதலாக சந்தித்தபோது அவர் என்னிடம் நீங்கள் நல்ல நடிகர். உங்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது என சொன்னார். அதனை நான் இயல்பாக எடுத்துக் கொண்டேன்.

ஆனால். மீண்டும் ஒரு முறை வேறு இடத்தில் சந்தித்த போதும் இதையே சொன்னார். அதற்காக இப்போது நான் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் அட்லீ, ” நான்காண்டிற்கு முன்னால் இதே இடத்தில் ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உங்கள் அனைவரையும் சந்தித்தேன். ஜவான் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சியை எங்கு நடத்துவது? என்ற விவாதம் நடைபெற்றது.

சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியதில் பங்காற்றிய வீரமுத்துவேல் நினைவுக்கு வந்தார். அவர் இந்த கல்லூரியில் படித்த மாணவர் என்பதால் இதே இடத்தை மீண்டும் பெருமிதத்துடன் தேர்வு செய்தோம்.

இந்த திரைப்படத்தை நான் இயக்குவதற்கு முக்கிய காரணம் தளபதி விஜய் கொடுத்த ஊக்கம் தான். ’ராஜா ராணி’யில் தொடங்கிய வாழ்க்கையை ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்: என சௌகரியமான நிலையில் வாழ வைத்தது விஜய் சார்தான்.

மும்பையிலிருந்து ஆலிஃப் என்ற நண்பர் ஷாருக்கான் உங்களை சந்திக்கவேண்டும் என தெரிவித்தார். நான் முதலில் நம்பவில்லை. பிறகு உண்மைதான் என்று தெரிந்தவுடன் ஷாருக்கானை சந்திக்க மும்பைக்குச் சென்றேன்.

பத்து வருடத்திற்கு முன் இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக எந்திரன் படத்தில் பணியாற்றியபோது மற்றொரு உதவி இயக்குநரான ஆடம் தாஸ் படப்பிடிப்பு நடக்கும் வீதியில் உள்ள ஒரு வீட்டில் கேட்டின் முன் நிற்கவைத்து புகைப்படம் எடுத்தார்.

அந்த வீடு ஷாருக்கானுடையது. எனக்கு அது அப்போது தெரியாது. பத்தாண்டுகளுக்குப் பிறகு அதே கேட் எனக்காக திறந்தது. உள்ளே சென்று ஷாருக்கானை சந்தித்தேன்.

ஷாருக்கானை சந்தித்த நிமிடம் முதல் இந்த நிமிடம் வரை அவர் என்னை கேட்காமல் எதுவும் பேசமாட்டார். ஒருவர் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்றால், அவருக்கு அருகில் இருக்கிறவர்கள் நேர்மையாகவும் திறமையுடனும் இயங்குவார்கள். அந்த வகையில் ஷாருக்கானுக்கு பூஜா தட்லானி பணியாற்றி வருகிறார். இவர் தான் இந்த படத்தின் பணிகள் சிறப்பாக நடப்பதற்கு அச்சாணியாக இருந்தவர்.

இந்த படத்தில் வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடந்த போது நான் விஜய் சேதுபதியை சொன்னேன். இந்த படத்தில் அவரும் ஒரு ஹீரோதான். அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வருகிறார்.

உங்களை சுற்றி ஆயிரம் எதிர்நிலை ஆற்றல்கள் இருந்தாலும் உங்களுடைய கவனம் உங்கள் பணியின் மீது இருந்தால் போதும். வெற்றி நிச்சயம்.

என் வெற்றியின் ரகசியம் என் மனைவி தான். அவர் கொடுக்கும் ஒத்துழைப்பு எதனோடும் ஒப்பிட இயலாது. ” என்றார்.

ஷாருக்கான் , ” தமிழ் திரையுலகில் இதற்கு முன் மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகிய இருவரை மட்டுமே எனக்கு தெரியும்.

ஜவான் படத்தின் மூலம் ஏராளமான தென்னிந்திய திரையுலக கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் அறிமுகமும், நட்பும் கிடைத்திருக்கிறது. நான் தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகத்திலிருந்து நிறைய விசயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன்.

விஜய் சேதுபதி. என் ரசிகையை பழிவாங்கிவிட்டதாக சொன்னார். அது நிச்சயம் நடக்காது. ஏனென்றால் அவர் என் ரசிகை. நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டேன்.

எங்கள் பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே இயக்குநர் அட்லீ சொந்தமாக ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துகள். பெற்றோர்களாகியிருக்கும் அட்லீக்கும் பிரியாவிற்கும் வாழ்த்துகள்.

இயக்குநர் அட்லீ ‘ஜவான்’ படத்தில் வித்தியாசமான கோணத்தில் என்னை காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் நீங்கள் திரையில் பார்க்கும்போது தான் புரியும்.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் பிரியாமணி இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் அனைத்து ரசிகர்களையும் கவரும். இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது” என்றார்.

You might also like