முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்!

– லக்‌ஷிதாவின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்

தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் கல்யாணம்.

ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை, அவர் இருக்கும் இடங்கள் மாற்றம் அடைந்தாலும், அவர் பிறரிடம் காட்டும் அன்பும், அக்கறையும் என்றுமே மாறாதது.

சினிமா மற்றும் பத்திரிகை வட்டாரத்தில் தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை கொண்டிருக்கும் கல்யாணம் அவர்களின் மகள் வழி பேத்தி செல்வி.லக்‌ஷிதா மதனின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி ஜூன் 25 அன்று சென்னை தியாகராயா நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது.

நடிகர் சிவக்குமார், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, ரஞ்சனி கார்த்தி, பிருந்தா சிவக்குமார், ஐ.ஏ.எஸ் பிரபாகர், வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் ரத்தினசாமி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் நாசர், சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

நடிகர் சிவக்குமார் பேசும்போது, ”என் நண்பன் கல்யாணத்தின் பேத்தியாகத்தான் லக்‌ஷிதா இருந்தாள். ஆனால், இன்று முதல் லக்‌ஷிதாவின் தாத்தா கல்யாணம் என்று மாறிவிட்டது.

உலம் முழுவதும் லக்‌ஷிதா பேர் வாங்குவார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி இனி லக்‌ஷிதாவின் தாத்தாதான் கல்யாணம் என்று சொல்லும் அளவுக்கு அவள் பின்னிட்டாள்.

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடனம் ஆடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. லக்‌ஷிதா நடனம் ஆடவில்லை, மேடையில் பறந்துகொண்டிருந்தாள்.

பானை மீது ஏறி ஆடியபோது நான் சீட் நுணிக்கே வந்துவிட்டேன். என்ன மாதிரி நடனம். பத்து வருடமாக பரதநாட்டியம் ஆடி வருவதாக சொல்கிறார்கள்.

நடனக் கலைஞர்களுக்கு கண் மிகவும் முக்கியம், நான் ஒரு ஓவியன் என்பதால் கண்ணை பற்றி நன்றாக தெரியும். அந்த வகையில் லக்‌ஷிதாவின் கண்கள் மீனை விட அழகாக இருக்கிறது.

அந்த கண்கள் மூலம் அபிநயங்களையும், பாவங்களையும் லக்‌ஷிதா வெளிப்படுத்திய விதம் மிக சிறப்பாக இருந்தது. பாடல்களில் வருவதை விட லக்‌ஷிதா நடனத்தில் காட்டிய நலினம் மிக அழகாக இருந்தது” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, “உச்சியில் இருந்து கழுத்து வரை ஆடுவதை கதகளி என்பார்கள்.

கழுத்தில் இருந்து இடுப்பு வரை ஆடுவதை மணிப்புரி என்பார்கள். இடிப்பில் இருந்து பாதம் வரை ஆடுவதை கதக் என்பார்கள்.

இது முகலாயர்கள் காலத்தில் இருந்து வந்தது. ஆனால், உச்சியில் இருந்து பாதம் வரை ஆடுவதுதான் பரதநாட்டியம்.

இந்த பரதநாட்டியம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. இதை முதலில் கூத்தர் என்றும், விரலியர் என்றும் கூறுவார்கள்.

பரத முனிவர் தான் பரதநாட்டியத்தை கண்டுபிடித்ததாக வட நாட்டவர் சொல்வார்கள். ஆனால் அது செவி வழி வந்த செய்தி, அதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

அபாரமான நடன திறன் கொண்ட லக்‌ஷிதாவின் ஆசிரியருக்கு என் வாழ்த்துகள். சங்ககால இலக்கியத்தில் ஒருதலை காதலை கைக்கிளை என்று சொல்வார்கள். அந்த கைக்கிளையில் அவர் பிடித்த அபிநயம் அற்புதம்.

ஒரு மடல் எழுதுகிறார், புறாவை அழைக்கிறார், புறா காலில் மடலை கட்டி பறக்க விடுகிறார், இப்படி ஒரு காட்சியை தனது நடனத்தில் மிக அழகாக உணர்த்தினார்கள்.

உண்மையிலேயே உலகத் தமிழர்கள் பாராட்டாக்கூடிய விதத்தில் நடனமும், பாடல்களும் அமைந்திருந்தது.

என் உடன்பிறவா சகோதரர் கல்யாணம் அவர்களுக்கு இப்படி ஒரு பேத்தி இருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் என்றே சொல்ல வேண்டும்.

நாட்டிய பேரொளியை கண்டு நாம் மகிழ்ந்திருக்கிறோம், வைஜெயந்தி மாலாவை கண்டு மகிழ்ந்திருக்கிறோம்.

ஆனால், குழந்தை லக்‌ஷிதா தனது நடன திறமையால் உலக அளவில் பேரும், புகழும் பெறுவார் என்று கூறி வாழ்த்துகிறேன்” என்றார்.

டாக்டர். ஸ்ரீநிதி சிதம்பரம், “நான் நடனக் கலைஞர் என்பதால் சொல்கிறேன், லக்‌ஷிதாவின் நடனம் தனித்துவமாக இருந்தது.

தன்னம்பிக்கை, புத்துணர்ச்சி, அழகு என அனைத்தையும் சேர்த்த ஒரு அழகான மற்றும் தனித்தன்மையுடன் கூடிய ஒரு நடனத்தை லக்‌ஷிதா இன்று அரங்கேற்றியிருக்கிறார்.

இந்த கலையை பயின்று வரும் இளைஞர்களுக்கு கடவுளின் ஆசி எப்போதும் உண்டு.

இன்று ஒரு சிறப்பான அரங்கேற்ற நிகழ்ச்சியை நடத்திய லக்‌ஷிதாவுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.

அவர் வாழ்வில் அனைவருடைய ஆசீர்வாதங்களை பெற்று மேலும் பல உயரங்களை தொடுவார் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

திருக்குறளுக்கு மெட்டு அமைத்து, அதற்கு ஏற்ப லக்‌ஷிதா நடனம் ஆடியது பரதநாட்டிய கலையில் இதுவரை யாரும் செய்திராத ஒன்றாகும்.

முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியின் மூலம் லக்‌ஷிதாவின் இந்த அரங்கேற்றம் பரதநாட்டிய கலையின் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்பட்டது.

You might also like