தமிழ் சினிமாவில் தனி அடையாளம் பதித்த சாண்டோ சின்னப்பா!

சின்னப்பா தேவருக்கு பூர்வீகம் இராமநாதபுரம் என்றாலும் வளர்த்தெடுத்தது கோவைதான். அடிப்படையிலேயே கட்டுமஸ்தான உடல்வாகுக் கொண்ட தேவருக்கு சினிமாவில் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பு அவருக்கு சினிமாவில் முழுவதும் இயங்குதவற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியது.

களத்தில் இறங்கிய அவருக்கு எம்.ஜி.ஆருடன் பழக்கம் ஏற்பட, நாளடைவில் இருவரும் இணை பிரியா நண்பர்களாக மாறினர்.

படத்தயாரிப்பில் ஈடுபட ஆசைப்பட்ட சின்னப்பா தேவருக்கு நண்பர்கள் தங்கள் கைகளில் இருந்த பணத்தைக் கொடுத்து உதவ அவர் தேவர் ஃபிலிம்ஸை உருவாக்கினார்.

‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தை தயாரிக்க அதில் எம்.ஜி.ஆரே கதாநாயகனாக நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றத் தொடங்கினர். இவர்கள் இணைந்த படங்கள் ஹிட்டடித்தன.

தன் படங்களுக்கென தனி கதை இலாகாவை உருவாக்கி வைத்திருந்தார் சின்னாப்பா தேவர். குழுவை அழைத்து கதையை உருவாக்கச் சொல்வார். கதை ரெடியானதும் தேவர் கேட்பார்.

அவருக்கு கதைப்பிடித்திருந்தால் அது அடுத்தக்கட்டத்திற்குச் செல்லும். கதை பிடிக்கவில்லை என்றால் மீண்டும் கதையை உருவாக்கும் பணி தொடரும்.

அது ஜனரஞ்சகமான கதையாக இருக்கும்; ஆக்சன் காட்சிகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

எம்.ஜி.ஆருக்கு தேவையான விஷயங்கள் சொல்லாமலேயே அதில் இடம்பெற்றிருக்கும்.

பூஜை தேதியோடு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும்.

அதே போல கமிட் செய்யும் நடிகர்களுக்கு ஒரே பேமண்டாக சம்பளம் கொடுப்பது சின்னப்பா தேவரின் ஸ்டைல்.

எம்.ஜி.ரை வைத்து 26 படங்கள் தயாரித்த இவர் சிவாஜியை வைத்து ஒரு படத்தை கூட தயாரிக்கவில்லை.

உடம்பு முழுக்க சந்தனம்.. நெற்றி நிறைய விபூதி பூசிக் கொண்டிருக்கும் தேவர் முருகரின் பரம பக்தர்.

குறிப்பாக மருதமலை முருகன் மீது அப்படியொரு அன்பு. அந்தக்கோயிலுக்கு ஏகப்பட்ட திருப்பணிகள் செய்திருக்கிறார்.

எம்.ஜி.ஆரை தேவர் ஆண்டவர் என்றுதான் கூப்பிடுவார். பதிலுக்கு எம்.ஜி.ஆர். முதலாளி என்று அழைப்பார்.

இறுதி வரை நன்றி மறக்காத தேவர் ஒவ்வொரு படத்தில் கிடைக்கும் லாபத்தில் தனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையையும் நண்பர்களுக்கு ஒரு குறிப்பிடட்ட தொகையையும், கோயிலுக்கு ஒரு தொகையை கொடுத்து விடுவாராம்.

– நன்றி: இந்து தமிழ் திசை

You might also like