கேரளாவில் 3,678 பேருக்கு டெங்கு உறுதி!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒருவாரம் தாமதமாக கடந்த 8-ம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதுமே மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து மாநில சுகாதாரத் துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதோடு மாநிலம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவலும் சேகரிக்கப்பட்டது. அதில், கேரளா முழுவதும் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 377 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்கள் அனைவருக்கும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் பாதிக்கப்பட்டோரில் பலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் 3678 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க மாநில சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆண்டு கேரளாவில் 66 பேர் எலி காய்ச்சல் அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளனர். இதில் 22 பேர் எலி காய்ச்சலால் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சிக் குடிக்கவும், சுகாதாரமான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும் எனவும் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

You might also like