தமிழகத்தில் வீசும் மலேசியப் பூங்காற்று!

இளையராஜாவின் இன்னொரு யுனிக் அறிமுகம் ‘மலேசியா வாசுதேவன்’ தமிழ்த் திரையுலகில் பெரிய நடிகராக வரவேண்டும் என்னும் ஆவலில் மலேசியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாய்ப்பு தேடியவர்.

முதலில் அவர் நடிப்புக்கு வாய்ப்பளிக்காத தமிழ்த்திரையுலகம் அவர் குரலுக்கு வாய்ப்பளித்தது!

ஆரம்ப காலத்தில் கமலுக்கு எஸ்பிபி.. ரஜினிக்கு மலேசியா என்பது ராஜா ஃபார்முலா.. அப்படியும் கமலுக்கும் அவர் நிறைய ஹிட் பாடல்களை பாடியிருப்பார்..

மலேசியாவின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட் 16 வயதினிலே படத்தில் வரும் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல் அந்தப்படம் வந்து 22 ஆண்டுகள் கழித்தும் கூட மேடை நிகழ்ச்சிகளில் அவரது ரசிகர்கள் விரும்பிக் கேட்ட பாடல் அது என ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார்.

மலேசியாவின் மானசீக குரு சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன். அவரது குரலில் மலேசியாவும் நன்கு பாடுவார்.

முதன் முதலில் மணிப்பூர் மாமியார் படத்தில் ‘ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே’ என்னும் பாடலும் அதன் பின் இன்று போய் நாளை வாவில் ‘மதனமோக ரூபசுந்தரி’

திறமை படத்தில் ‘இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்’ கன்னிராசியில் ஜனகராஜிற்காக ‘சுகராகமே’ புதுப்புது அர்த்தங்களில் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே (கல்யாண மாலை முழுப்பாடல் பாடியவர் எஸ்.பி.பி ஆனால் மலேசியா சி.எஸ்.ஜெ குரலில் பாடிய ஒரு சின்ன பிட் இப்போதும் யூடியூபில் இருக்கிறது)

இவையெல்லாம் அவர் சி.எஸ்.ஜெ குரலில் பாடிய ஹிட் பாடல்கள்! ஹிட்லர் உமாநாத் படத்தில் சுருளிராஜனுக்கு அப்படியே அவர் குரலில் பாடியிருப்பார்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் அவர் வித்யாசமான குரலில் வெத்தலை வெத்தலை வெத்தலையோ பாடலை பாடியிருப்பார்.

மலேசியாவிற்கு மெலடி வராது என்பவர்கள் அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா (நண்டு) & கோடை கால காற்றே (பன்னீர் புஷ்பங்கள்) பாடலைக் கேட்டால் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்வார்கள்.

கமலுக்கு எஸ்பிபியின் இளமை இதோ இதோ போல ரஜினிக்கு இவர் பாடிய பொதுவாக என் மனசுத் தங்கம் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்! இன்றும் எல்லா ஊர் ஜல்லிக்கட்டிலும் ஒலிக்கும் பாடல்!

‘ஆசை நூறு வகை’ என்னோட ராசி நல்ல ராசி’, மனிதன் மனிதன், நாட்டுக்குள்ள நம்மைப் பத்தி கேட்டுப்பாருங்க, வாங்கடா வாங்க என் வண்டிக்கு பின்னாலே, போன்றவை குறிப்பிட தகுந்தவை.!

கமலுக்கு ‘இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது’ கட்டவண்டி கட்டவண்டி’ நிலா காயுது’ பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லிவாசம்’ எல்லாம் க்ளாஸ்!

பொத்துகிட்டு ஊத்துதடி வானம் பாயும்புலி படத்தில் இடம் பெற்ற அட்டகாசமான மழைப் பாடல். மலேசியா வாசுதேவன் பி.சுசீலாவுடன் சேர்ந்து பாடிய பாடல்! இவர்கள் இருவரும் இணைந்து அதிகப் பாடல்கள் பாடவில்லை என்றாலும் இது குறிப்பிடத்தக்க ஒரு பாடல்.

தர்மயுத்தத்தில் ஆகாய கங்கை, ஒரு தங்கரதத்தில் பாடலும் புதுக்கவிதையில் வா வா வசந்தமே பாடலும் எங்கேயோ கேட்ட குரலில் பட்டுவண்ண சேலைக்காரி போன்றவை என்றும் இனியவை!

பாக்கியராஜிற்கு வான் மேகங்களே, பட்டு வண்ண ரோசாவாம் காதல் வைபோகமே, டாடி டாடி ஓ மை டாடி, எண்ணியிருந்தது ஈடேற, தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி, வா.. வா வாத்தியாரே வா என ஏராளமான ஹிட்ஸ் பாடியிருக்கிறார் வாசு, பாண்டியனுக்கு ஆண்பாவத்தில் குயிலே குயிலே பூங்குயிலே,

மண்வாசனையில் அரிசி குத்தும் அக்கா மகளே, ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்! அடடா.!

ராமராஜனுக்கு இவர் நிறைய பாடி இருந்தாலும் கரகாட்டக்காரனில் வரும் மாரியம்மா மாரியம்மா அந்த ஒரு பாடலே இன்றைக்கும் ஊர்த்திருவிழாக்களின் தேசிய கீதம்!

மோகன், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, அர்ஜுன் என எல்லா 80-களின் ஹீரோக்களுக்கும் ஹிட் பாடல்கள் பாடியவர் வாசுதேவன். கோழி கூவுது படத்தில் வரும் பூவே இளைய பூவே ஒரு க்ளாசிக் ரகம்!

ஆத்து மேட்டுல, பட்டு வண்ண ரோசாவாம், ஏ கிளியிருக்கு பழமிருக்கு, வெட்டி வேரு வாசம், இதெல்லாம் நம்மை கிராமங்களுக்கே அழைத்து செல்லும் பாடல்கள்!

அந்த மாயாஜாலம் அவர் குரலில் இருந்தது! கடல் மீன்களில் வரும் என்றென்றும் ஆனந்தமே ஒரு தனி ஸ்டைல்!

திரை உலகில் பிற்காலத்து சிவாஜிக்கு மலேசியா குரல் செட்டானது ஒரு ஆச்சர்யம்! முதல் மரியாதை பாடல்கள் எல்லாம் க்ளாசிக்.! நல்லா பாடியிருக்கேடா வாசு என்ற சிவாஜியின் பாராட்டு தனக்கு கிடைத்த தேசியவிருது என்பார்.

ரஜினிக்கு ஓபனிங் சாங் என்னும் சூப்பர் ஸ்டார் இமேஜிற்கு கதைகள் வந்ததும் பாடல்கள் எல்லாம் எஸ்.பி.பிக்கே சென்றது.

நீண்ட நாளைக்கு பிறகு ரஜினியை சந்தித்த வாசுதேவன் என்ன சார் சிவாஜிக்கு பாடுறேன் சிவாஜிராவுக்கு பாடி வெகுநாட்களாகி விட்டது என வேடிக்கையாக சொல்ல..

ரஜினி அவருக்கு தந்த வாய்ப்பு தான் அதிசயப்பிறவி படம்! படத்தின் அனைத்து பாடல்களும் மலேசியா தான்.

ஏற்கனவே தன் சொந்தப் படமான மாவீரனிலும் மலேசியாவிற்கு தான் வாய்ப்பளித்தார் ரஜினி.

பின்னாளில் இளம் நடிகரான கார்த்திக்கிற்கு ‘இளம் வயசு பொண்ணை வசியம் பண்ணும்’ கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை’ பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி, ‘எடுத்துவிட்டேன் தொடுத்துவிட்டேன் எங்க ஊரு தெம்மாங்கு போன்ற பல ஹிட் பாடல்களை பாடியிருப்பது ஓர் ஆச்சரியம்!

சிவாஜிக்கு தனியாக பாடுவதற்கு முன்பே பாரதவிலாஸ் படத்தில் வரும் இந்திய நாடு என்வீடு பாடலின் அந்த பஞ்சாபி பாடும் பாடல் வரிகளை பாடியவர் மலேசியா. இவர் சில படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார்.!

பகல் நிலவு படத்தில் வரும் ‘எப்போது பார்த்த புள்ள இப்ப அடையாளம் தெரியவில்ல’ பாடலிலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கருத்தம்மாவில் காடு பொட்டக்காடு’ இந்த இரண்டு பாடலிலும் மலேசியா உச்சஸ்தாயியில் தன் குரலை எடுக்கும் அழகே அவ்வளவு இனிமையாக இருக்கும். மிக அற்புதமான கலைஞர் எனக்குப் பிடித்த பாடகர்!

மலேசியா வாசுதேவனுக்கு தேசிய விருது கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்த பாடல் ராஜரிஷி படத்தில் அவர் நடிகர் திலகம் சிவாஜிக்கு பாடிய “சங்கரா சிவசங்கரா” என்னும் பாடல்! ஆனால் வாசுவுக்கு விருது கிட்டவில்லை!

அதற்கு அந்த தேசிய விருதே வருத்தப்பட்டிருக்கும். பாடுவதற்கு மிகவும் கடினமான பாடல் இது! வாசுதேவன் இப்பாடலை மிகவும் அற்புதமாக தெளிவான தமிழ் உச்சரிப்பில் கணீரெனப் பாடியிருப்பார்! 

You might also like