திண்டுக்கல் லியோனி மகன் அறிமுகமாகும் அழகிய கண்ணே!

அறிமுக இயக்குநர் R விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் அழகான காதல் டிராமாவாக உருவாகியுள்ள படைப்பு “அழகிய கண்ணே”.

இயக்குநர் சீனுராமசாமியின் உதவியாளர், அவரின் சகோதரர் விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல மேடைப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார்.

விரைவில் திரைக்கு வரவுள்ள படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய நடிகர் அமுதவாணன், கதாநாயகன் லியோ சிவக்குமார் படத்தில் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார்.  

ஷுட்டிங் ஸ்பாட் எப்போதும் கலகலப்பாக இருக்கும். எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை சஞ்சிதா ஷெட்டி, “நாயகன் சிவா ஃபேமிலி எப்போதும் செட்டில் இருப்பார்கள். என் அம்மாவிடம் என்னை ஏஞ்சல் போலப் பார்த்துக்கொள்கிறார்கள் என்றேன். ஷூட்டிங் அனுபவம் அப்படித்தான் இருந்தது.

லியோனி சார் பழக மிக இனிமையானவர். எனக்கு மிக முக்கியமான பாத்திரம்.  ஐடியில் வேலை பார்க்கும் சென்னைப் பெண். என் திரை வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், “லியோனி சார் ரசிகன் நான், அவரது மேடைப்பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். லியோனி சார் பற்றிப் பேச நிறைய இருக்கிறது.

இன்று மேடையில், அவர் மகன் பேசும்போது ஆனந்தத்தோடு அவர் பார்த்துக் கொண்டிருந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லா தந்தைக்கும் இந்த அன்பு இருக்கும்.

இயக்குநர் விஜயகுமார் பேச்சிலேயே அவர் சிறந்த படைப்பைத் தந்திருப்பார் என்பது தெரிகிறது.

மிகக் கூர்மையாக, நகைச்சுவையுடன் பேசினார் படமும் அப்படி இருக்கும் என நம்புகிறேன்” என்று வாழ்த்தினார்.

இயக்குநர் R விஜயகுமார், “இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளர். அவரின் உடன் பிறந்த தம்பி நான், அவருடன் 4 படங்களில் வேலை பார்த்துள்ளேன்.

அந்த அனுபவத்தில் ஒரு நல்ல படைப்பை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில், இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்.

இப்படம் மதுரையில் ஆரம்பித்து சென்னை நோக்கி நகரும் கதை.  உதவி இயக்குநரின் வாழ்வைச் சொல்லும் கதை.

நட்புக்காக முதல் முறையாக விஜய் சேதுபதி, விஜய் சேதுபதியாகவே நடித்துள்ளார்.

சமூக நீதி பேசும் அழகான படம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி” என்றார்.

கதாநாயகன் லியோ சிவக்குமார், “சினிமாவை நம்பி பல ஆண்டுகள் நான் பயணம் செய்துள்ளேன். சினிமாவை சுற்றித்தான் என் வாழ்க்கை பயணம் இருந்தது.

என்னை இந்த கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்த இயக்குநர் விஜயகுமார் அண்ணனுக்கு நன்றி.

இந்த படம் எனக்கு முதல் படி” என்று உற்சாகம் பொங்கப் பேசினார்.

திண்டுக்கல் லியோனி, “என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை. கொஞ்சம் சிரமப்பட்டுதான் நடித்தான். பல முயற்சிகள் செய்தான்.

அவன் உழைப்பிற்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றிபெறும். படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று வாழ்த்தினார்.

You might also like