தேசத் துரோகச் சட்டம் தொடர வேண்டும்!

சட்ட ஆணையம் பரிந்துரை

இந்திய தண்டனைச் சட்டத்தில், தேசத் துரோக சட்டம் தொடர வேண்டும் என ஒன்றிய சட்டத் துறை அமைச்சக்கத்திற்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தேச விரோத சட்டம் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த சட்டத்தால் கருத்தியல் துறையில் இருக்கும் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பாதிப்படைவதாகக் கூறி, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 124A என்ற தேசத் துரோக சட்டப் பிரிவை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு 2021, ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த வழக்குத் தொடர்பாக ஒன்றிய அரசு பரிசீலனை மேற்கொள்ளும் வரை, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 124 A என்ற தேசத் துரோக சட்டப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கனவே, தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் பிணை கோரலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, தேசத்துரோக சட்டப் பிரிவுக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 124A சட்டப் பிரிவை மறுபரிசீலனை செய்வதற்கான செயல்முறையை ஒன்றிய அரசு துவக்கி உள்ளதாகவும் தேசத் துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்வது தொடர்பான ஆலோசனை செயல்முறை அடுத்தகட்ட நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய தண்டனைச் சட்டத்தில், தேசத் துரோக சட்டப் பிரிவு தொடர வேண்டும் என மத்திய சட்ட அமைச்சகத்திற்கு, இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பாக இந்திய சட்ட ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், “இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 124A என்ற தேசத் துரோக சட்டப் பிரிவில் சில திருத்தங்களை கொண்டு வந்தும், அந்த சட்டத்தின் மீதான பயன்பாடுகளை தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தேசத் துரோக சட்டத்தை தவறான முறையில் பின்பற்றப்படுவதை தவிர்க்க மாதிரி வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like