பிச்சைக்காரன் படம் இயக்குநர் சசி போட்ட பிச்சை!

நடிகர் விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி

‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். டிரெய்லர் அமோக வரவேற்பைப் பெற்றதை அடுத்து மே 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி சென்னையில் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.

அப்போது பேசிய இயக்குநர் சசி, “பிச்சைக்காரன்-2’ படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குநராக அவதாரம் எடுத்திருப்பது வரவேற்கவேண்டிய முடிவு.

ஏனென்றால், ‘பிச்சைக்காரன்’ கதையை விஜய் ஆண்டனிக்கு முன்பு நான்கைந்து ஹீரோக்களிடம் சொல்லியிருந்தேன்.

அவர்கள் எல்லாரும் இதை பிச்சைக்காரனின் கதையாகதான் பார்த்தார்கள்.

விஜய் ஆண்டனி மட்டும்தான் இதை பணக்காரனின் கதையாகப் பார்த்தார். இந்தப் படத்திற்காக சென்னை, பாண்டிச்சேரி என பல இடங்களில் இவர் பிச்சை எடுத்துள்ளார்.

பிச்சை எடுக்கும்போது என்ன மாதிரியான இசை வேண்டும் என அவர் கேட்டபோது எனக்கே குழம்பியது. அந்த இடத்தில் அவர் கேட்ட ஒரு கேள்விதான் முதல் 20 நிமிடத்திற்கான கதையை மாற்றியது” என்றார்.

நடிகர் மன்சூர் அலிகான் மேடை ஏறியதுமே விஜய் ஆண்டனியை பார்த்து, ‘நீ செத்து பொழச்சவன்டா, எமன பார்த்து சிரிச்சவன்டா’ என்ற பாடலைப் பாடினார்.

பின்பு பேசிய அவர், “விஜய் ஆண்டனியின் அர்ப்பணிப்புதான் இன்று அவரை நம் கண் முன்னே நல்லபடியாக நிறுத்தி இருக்கிறது” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா, “கடவுள் விஜய் ஆண்டனிக்கு இரண்டாவது வாழ்க்கை கொடுத்திருப்பது ஃபாத்திமாவுக்காகவும் ரசிகர்களுக்குக்காவும்தான். இன்னும் நீ இருந்து செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.

இயக்குநர்களுக்கு ரைட்டர்ஸ் மிக முக்கியம். என்னுடைய பல படங்கள் வெற்றி பெற ரைட்டர்கள்தான் காரணம்.

அதுபோல விஜய் ஆண்டனிக்கு சசி என்னும் ரைட்டர் இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறார். நீ கண்டிப்பாக ஜெயித்துவிடுவாய்” என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது, “படத்தின் கதாநாயகிக்கு என்னுடைய முதல் வணக்கம்.

என்னுடைய குருநாதர் பாரதிராஜா இருக்கும்போது ஏன் அவருக்கு முதல் வணக்கம் என்றால், விஜய் ஆண்டனி கடலில் விழுந்தபோது முதலில் குதித்து காப்பாற்றியவர் அவர்தான்.

அர்ஜூன் என்ற அசிஸ்டெண்ட் கேமரா பர்சனும் காப்பாற்றி இருக்கிறார். நான் முதலில் விஜய் ஆண்டனியை பார்த்தபோது அமைதியாக இருந்தார்.

பிறகு இசையமைப்பாளர், நடிகர், பாடலாசிரியர், இயக்குநர் என அவர் வளர்ந்து நிற்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று நெகிழ்ந்து பாராட்டினார்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, “நான் முன்பே சொன்னதுபோல, ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் சசி சார் எனக்கு போட்ட பிச்சை.

முதல் பாகத்தில் எப்படி அம்மா – மகன் செண்டிமெண்ட் இருந்ததோ அதுபோல, இரண்டாவது பாகத்தில் அண்ணன் – தங்கை செண்டிமெண்ட்டை மையப்படுத்தி இருக்கும்” என்றார்.

You might also like