தேசிய அங்கீகாரம் இழந்த கட்சிகளும், அங்கீகாரம் பெற்ற ஆம் ஆத்மியும்!

ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்து அளித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணயம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தேசிய கட்சியாகவும், மாநில அளவில் போட்டியிடும் கட்சிகள் மாநில கட்சிகளாகவும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வருகிறது.

அதன்படி ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட, மொத்த மக்களவை இடங்களில் 11 இடங்களும், குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும்.

அல்லது மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 விழுக்காடு வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இதே போல் மாநில கட்சி அந்தஸ்து பெற வேண்டும் என்றால் அந்த மாநிலத்தில் அதன் தொகுதிகளில் 3 சதவீதம் வெற்றி பெற வேண்டும். அல்லது 6 சதவீத வாக்குகள் மற்றும் 2 தொகுதிகள் பெற்றாலும் மாநில கட்சி அந்தஸ்து கிடைக்கும்.

இந்த அந்தஸ்து வழங்குவது பற்றி மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து முடிவுகளை அறிவிக்கும். தற்போது குஜராத் தேர்தல் முடிந்த பிறகு இதுகுறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவித்துள்ளது.

அதன்படி டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத் மாநிலங்களில் மாநில கட்சி அந்தஸ்து பெற்றுள்ள ஆம்ஆத்மி கட்சி தற்போது தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதே போல் தேசிய அளவில் ஆம்ஆத்மி கட்சி சின்னமாக துடைப்பம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது.

அதேநேரத்தில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு வழங்கப்பட்டு இருந்த தேசிய கட்சி அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது.  

   

You might also like