3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் சென்ற லக்னோ!

பெங்களூரு அணிக்கு எதிராக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணி கடைசிப் பந்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.

 ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.

டூ பிளெசிஸ் 79 ரன்களுடன் களத்தில் இருந்தார். விராட் கோலி 61 ரன்களும், மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 59 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் டக் அவுட்டானார். தீபக் ஹூடா 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கே.எல்.ராகுல் 18 ரன்களில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிறப்பாக ஆடினார்.

அவர் 30 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய பூரன், பதோனி ஜோடி பெங்களூரு பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.

பூரன் 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். ஆயுஷ் பதோனி கடைசி கட்டத்தில் 30 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், லக்னோ அணி 9 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ 3வது வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.

You might also like