மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகம்?

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இரு மாநிலங்களிலும் பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகளும், மாநிலத்தை சேர்ந்த சிறிய கட்சிகளும் கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டன.

மேகாலயாவில் 21.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

இங்கு ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம். மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 375 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டன.

நாகாலாந்தில் 13.17 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 184 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இதில் பா.ஜ.க. ஒரு இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றது. இதனால் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி-பா.ஜ.க. கூட்டணி இணைந்து போட்டியிட்டன.

இதேபோல் காங்கிரஸ் 23 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 22 தொகுதியிலும், ராம்விலாஸ் பாஸ்வானின் ஜன்சக்தி கட்சி 15 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

இந்நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

இறுதியில் மேகாலயாவில் 82.42 சதவீத வாக்குகளும், நாகாலாந்தில் 74.32 சதவீத வாக்குகளும் பதிவானது.

திரிபுராவில் கடந்த 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இதையடுத்து திரிபுராவுடன், மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே 3 மாநிலங்களிலும் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. திரிபுராவில் பா.ஜ.க. 36 லிருந்து 45 இடங்களிலும் இடது சாரிகள் 6 – லிருந்து 11 இடங்களிலும், டி.எம்.பி. 9- லிருந்து 16 இடங்களிலும்வெற்றி பெறும் என இந்தியா டுடே சேனல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

திரிபுராவில் பா.ஜ.க. 36- லிருந்து 45 இடங்களிலும், இடதுசாரிகள் 6- லிருந்து 11 இடங்களில் வெற்றிபெறும் என என்.டி.டிவி கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

நாகாலாந்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும், மேகாலயாவில் என்.பி.பி. ஆட்சியை தக்கவைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேகாலயாவில் பா.ஜ.க. 5 இடங்களிலும் , காங்கிரஸ் 3 இடங்களிலும், என்பிபி -20 இடங்களிலும், பிற கட்சிகள் 30 இடங்களில் வெற்றிபெறும் என டைம்ஸ் நவ் சேனல் கணித்துள்ளது.

நாகாலாந்து என்.டி.டி.பி 38- லிருந்து 48 இடங்களிலும், என்.பி.எப் 3- லிருந்து 8 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், பிறகட்சிகள் 5- லிருந்து 15 இடங்களைப் பெறும் என இந்தியா டுடே சேனல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

You might also like