குஜராத் முதல்வராக 12-ம் தேதி பதவியேற்கிறார் பூபேந்திர படேல்!

குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குஜராத் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

பாரதிய ஜனதா கட்சிக்கு 150-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று முன்னிலை நிலவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் மூலம் குஜராத் அரசியலில் பா.ஜ.க 7-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி அதிரடியை நிகழ்த்தி உள்ளதோடு குஜராத் அரசியல் களத்தில் புதிய சாதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்ற மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனையை சமன் செய்தது குஜராத் பாஜக. குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

அதேசமயம் இமாச்சல பிரதேசத்தில் பிற்பகல் நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 39 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.

பாஜக 26 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெறும் நிலை உள்ளதால், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் கூறினார்.

தேர்தல் வெற்றி குறித்து பேசிய குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், “குஜராத் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் மிகவும் தெளிவாக உள்ளன. குஜராத்தில் வளர்ச்சிப் பயணத்தை மேலும் தொடர மக்கள் முடிவு செய்துள்ளனர்.

மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் பொது சேவையில் உறுதியாக உள்ளார்” எனக் கூறினார்.

You might also like