‘சுருளிராஜன்’ – உச்சத்தில் அணைந்த நட்சத்திரம்!

பெரியகுளத்தில் 1938-இல் பிறந்த அவர் தன் இளம் வயதில் மதுரைக்கு இடம் பெயர்ந்தார். அங்கே மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்த்துக் கொண்டே, நாடகங்களிலும் நடித்து வந்தார்.

பின்னர் தான் சென்னைக்கு வந்தார். அந்த அனுபவமும், அங்கே அவர் சந்தித்த பல்வேறு மனிதர்களும் அவரின் பிற்கால வேடங்களுக்கு கச்சாப் பொருளாய் இருந்தனர்.

தற்போது வடிவேலுவின் முக்கிய பாணியாய் விளங்கும் உதார் விடும் சாமான்யன் வேடம், மதுரையில் அவர் பார்த்த பல உதார் பார்ட்டிகளிடம் இருந்து எடுக்கப்பட்டதே. மதுரையில் தெருவுக்கு நாலு பேர் அப்படி இருப்பார்கள்.

சுருளிராஜனின் குரலும் மிக வித்தியாசமான ஒன்று. அடித் தொண்டையில் உருவாகி கீச்சுக்குரல் போல ஒலிக்கும்.

எம் ஆர் ராதாவுக்கு பின்னால் வந்த குரல்களில் தனித்தன்மை வாய்ந்த குரல் அது. மிமிக்ரி கலைஞர்களால் அதிகம் உபயோகிக்கப்படும் குரலும் கூட. அவர் ஏற்று நடித்த பாத்திரங்களுக்கு மெருகேற்றியது அவர் குரலே.

முதன்முதலாக தற்கால சமூக அடித்தட்டு, விளிம்புநிலை மக்களை தமிழ்சினிமாவில் பிரதிபலித்தவர் சுருளிராஜன்.

கலைவானர் என் எஸ் கே உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் எடுக்கப்பட்ட பெரும்பாலான திரைப்படங்கள் புராண கதைகளையும், ராஜா ராணி கதைகளையுமே களமாகக் கொண்டிருந்தன. எனவே அவருடைய வேடங்கள் அக்களத்தையே சார்ந்து அமைந்திருந்தன.

அவருக்கு அடுத்து வந்த ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர் சந்திரபாபு. அவரும் இம்மாதிரி கேரக்டர்களில் அதிகம் நடித்ததில்லை.

சபாஷ் மீனா படத்தில் ஒரு நாடகத்தில் பார வண்டி இழுக்கும் கூலியாக நடித்து பிரமாதப் படுத்தியிருப்பார்.

நாகேஷும் பெரும்பாலும் மத்திய தரவர்க்க ஏழை கதாபாத்திரங்களிலேயே நடித்து அதிலேயே வித்தியாசம் காட்டி வந்தார்.

வி கே ராமசாமி, கே ஏ தங்கவேலு பெரும்பாலும் பணக்கார கேரக்டர்களிலேயே நடித்து வந்தார்கள். மேலும் அவர்கள் சரீரம் அம்மாதிரி கதாபாத்திரங்களுக்கே மிகப் பொருத்தமாய் இருந்தது.

ஆனால் இவர்கள் யாரையும் நாம் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் 1975 வரை எடுக்கப்பட்ட திரைப்படங்களில் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு மிகக் குறைவு.

சுருளிராஜன் 1965 ஆம் ஆண்டு இரவும் பகலும் படத்தில் (ஜெய்சங்கரும் இந்தப் படத்தில் தான் அறிமுகம்) சிறு வேடத்தில் அறிமுகமாகியிருந்தாலும் 75 வரை அவரும் மற்ற நகைச்சுவை நடிகர்களைப் போன்றே நடித்துக் கொண்டிருந்தார்.

70 களின் மத்தியில் துரை, மகேந்திரன், ருத்ரய்யா, பாரதிராஜா போன்றோர் சமகால சமூகத்தை சித்தரிக்கும் படங்களை இயக்கத் தொடங்கினர்.

1977-இல் பெட்டிக்கடை குருவம்மா, அவரது வேலையாள் என அடித்தட்டு மக்களை சித்தரித்த பதினாறு வயதினிலேவின் வெற்றி எல்லாரையும் சமூக படங்களை இயக்க ஊக்கமளித்தது.

அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு அந்தப் போக்கு தொடர்ந்தது.இந்தப் போக்கு அதுவரை முதலிடத்துக்கு வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த சுருளிராஜனுக்கு வரப்பிரசாதமாய் அமைந்தது.

1980 ஆம் ஆண்டில் மட்டும் அவர் கிட்டத்தட்ட 50 படங்களில் குணச்சித்திர/நகைச்சுவை நடிகராக நடித்தார். இதில் பெரும்பாலான வேடங்கள் அடித்தட்டு, விளிம்புநிலை கதாபாத்திரங்களே.

அரவாணி, கழிவு அகற்றும் தொழிலாளி, பிண ஊர்தி ஓட்டுபவர் போன்ற பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தார்.

அவரின் மறைவுக்குப் பின்னால் உச்சத்துக்கு வந்த கவுண்டமணி, பின்னர் வடிவேலு ஆகியோரும் இம்மாதிரி கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினர்.

1965 -இல் சுருளிராஜன் நடிக்க வந்த போது அவரது வயது 27. ஆனால் அவருக்கு கிடைத்த வேடங்கள் பெரும்பாலும் வயதான வேடங்களே.

நான், மூன்றெழுத்து போன்ற படங்களில் அவர் தன் வயதுக்கு மீறிய வேடங்களிலேயே நடித்தார்.

இந்த காலத்தில் அவருக்கு ஆதரவாய் இருந்தவர் இயக்குனர் டி என் பாலு. அவர் வேலை செய்த எல்லாப் படங்களிலும் இவருக்கு வாய்ப்பளித்தார்.

சுருளிராஜன் பிரமாதப்படுத்திய சில படங்கள். மாந்தோப்பு கிளியே இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த கஞ்சப் பிரபு வேடத்தை அவரின் மாஸ்டர் பீஸ் எனலாம்.

ஜோடியாக காந்திமதி. பனையோலை விசிறி பிய்ந்துவிடும் என அதை நிலையாக வைத்து உடலை விசிறிக்கொள்வதும், விளக்கு இல்லாத நேரத்தில் உடை அழுக்காகிவிடும் என அவிழ்த்து வைப்பதுமாய் அதகளப் படுத்தியிருப்பார்.

உச்சமாக ஐந்து கிலோ அரிசிக்காகவும், பணத்துக்காகவும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வார்.

எம் ஏ காஜா இயக்கிய இந்தப் படத்தில் தான் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய வசனங்கள் தமிழ்சினிமாவில் முதல் முறையாக பேசப்பட்டன.

ஒளி பிறந்தது

அரசாங்க மருத்துவ மனையையும், அங்கு பணி புரிவோர், அதைச் சுற்றி கடை வைத்துள்ளோர், மார்ச்சுவரி, பிண ஊர்தி ஓட்டுனர்கள் ஆகியோரை களமாகக் கொண்டு துரை இயக்கிய படம்.

மறைந்த நடிகர் உதிரிப்பூக்கள் விஜயன், இதில் பிண ஊர்தி ஓட்டுநராக நடித்திருப்பார்.

சுருளிராஜனுக்கு குதிரை (ஜட்கா) வண்டி ஓட்டும் வேடம். தொடர்ந்து பிணத்தையே ஏற்றிச் சென்றதால் அந்த குதிரை வெள்ளைத்துணி போர்த்திய பிணத்தைப் பார்த்தாலே நின்றுவிடும். பயணிகளை ஏற்றிச் செல்லும் சுருளிராஜன் இதனால் பாதிக்கப்படுவார்.

இதை அறிந்த ஒரு கூட்டம் அவரை, குதிரையின் வீக்னெஸ்ஸை வைத்து பிளாக்மெயில் செய்யும். ஒருவழியாக குதிரையை மாற்றி தப்பிப்பார்.
மனிதரில் இத்தனை நிறங்களா?கழிவறை சுத்தப் படுத்தும் தொழிலாளி வேடம் சுருளி ராஜனுக்கு.

அந்த ஊர் உயர்ஜாதியினர் தாழ்த்தப் பட்ட மக்களை இழிவாக நடத்துவார்கள். அதனால் பொங்கியெழும் தாழ்த்தப் பட்டவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். துணி துவைப்பவரின் தங்கையை சுருளிராஜன் காதலிப்பார்.

ஆனால் பெண்ணின் அண்ணனோ இவர் நம்மை விட தாழ்ந்த ஜாதி. அதனால் பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்பார்.

உடனே சுருளிராஜன் மத்த ஜாதிக்காரங்கள்ளாம் சேர்ந்து நம்மை தள்ளி வச்சாங்க. இப்போ நமக்குள்ளேயே என்னை தாழ்ந்தவன்கிறீங்க என்பார்.

முரட்டுக்காளை

தன் தந்தையைக் கொன்றதற்காக பண்ணையார் வம்சத்தையே அழிக்க சபதம் எடுக்கும் கண்க்குப்பிள்ளை வேடம். படத்தை நகர்த்திச் செல்லும் மையப் புள்ளியே கணக்குப்பிள்ளை சுருளிராஜன் தான்.

ஜெய்சங்கரிடமும், ரஜினியிடமும் நயவஞ்சகமாகப் பேசி இருவரையும் மோதவிட்டு தன் காரியத்தை சாத்தித்துக் கொள்வார்.

ஒரு காட்சியில் ரஜினியின் தம்பிகளின் மேல் திருட்டுக் குற்றம் சாட்டி கட்டி வைப்பார்கள். இதனால் ரஜினி சண்டைக்கு வருவார். அவர் கைகாலை எடுத்து விட வேண்டும் என பேசிக் கொள்வார்கள்.

சுருளிராஜன் வெளியே வந்து சொல்வார். உடையப் போவது யாருடையது என்பதை நானல்லவா முடிவு செய்யவேண்டும் என்று. கடைசியில் ஜெய்சங்கரை சிறைக்கு அனுப்பிவிட்டுத் தான் ஓய்வார்.

ஹிட்லர் உமாநாத் தன் சுய உழைப்பால் முன்னேறிய வேடம் சிவாஜி கணேசனுக்கு. அதனால் அலுவலகத்தில் கடுமையாக ஹிட்லர் போல நடந்து கொள்வார்.

அவரைக் குளிர்விக்க அவரைப் புகழ்ந்து சுருளிராஜன் பாடும் வில்லுப் பாட்டு மிக பிரபலமான ஒன்று.

பாலாபிஷேகம்

ஜெய்ஷங்கர் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் அரவாணி வேடம் சுருளிராஜனுக்கு. ரஜினிகாந்துடன் பல படங்களில் தோழனாக, தொழிலாளியாக பல படங்களில் சுருளிராஜன் நடித்துள்ளார்.

ஆறிலிருந்து அறுபது வரை, தாய் மீது சத்தியம், பொல்லாதவன், நான் போட்ட சவால் போன்றவற்றில் நல்ல வேடங்கள்.

”இப்படி சாப்பிட்டா நல்லா இருக்கும்னு சொல்றான் கந்தசாமி” என நான் போட்ட சவால் படத்தில் அவர் ரஜினியிடம் பேசும் வசனம் பலரால் மிமிக்ரி செய்யப்பட்ட ஒன்று.

அவர் ஏற்று நடித்த வேடங்களுக்கு ஏற்பவே அவரது வசனங்களும் இருக்கும். ஒரு படத்தில் தண்டனையாக அவரை வடைக்கு ஆட்டச் சொல்லும் போது உளுந்த வடைக்கா? மசால் வடைக்கா? என்று கேட்பார்.

அவருடன் வருபவர் எதற்கா இருந்தா என்ன? என்பார். உடனே இவர் சொல்வார். மசால் வடைக்கின்னா ஒன்னு ரெண்டா ஆட்டினா போதும்.

உளுந்த வடைன்னா மையா ஆட்டனும்ல என்பார். சமையல் தொழிலாளியாக, மெக்கானிக்காக எந்த வேடத்தில் நடித்தாலும் அதற்கேற்றார்போல தன் வசனங்களை அமைத்துக் கொள்ளும் திறமை அவருக்கு இருந்தது. இதற்கு முக்கிய காரணம், அவரின் கூர்ந்த கவனிப்பே.

1980 -இல் அவர் இறந்தார். 82 ஆம் ஆண்டுவரை அவர் நடித்த படங்கள் வெளிவந்தன. 79 மற்றும் 80 ஆண்டுகளில் மட்டும் அவர் 80 படங்களுக்கும் மேல் நடித்திருந்தார்.

இடைவிடா படப்பிடிப்பும், அவரது குடிப்பழக்கமும் அவர் 42 வயதிலேயே மறையக் காரணமாய் இருந்தன.

10 ஆண்டுகள் போராடி முதல் இடத்துக்கு வந்தார். தன் கேரியரின் உச்சத்தில் இருக்கும் போதே நம்மிடம் இருந்து விடை பெற்றுவிட்டார்

சுருளிராஜன் நடித்த படங்களுள் சில:-

மனிதருள் மாணிக்கம், நான், கியாஸ்லைட் மங்கம்மா, உயிர் மேல் ஆசை, ராஜ நாகம், ஹிட்லர் உமாநாத் , மனிதரில் இத்தனை நிறங்களா, மனசாட்சி, நான்கு கில்லாடிகள், கண்ணே பாப்பா, கல்யாண ஊர்வலம், மீண்டும் கோகிலா, உல்லாச பறவைகள்,

ஆறிலிருந்து அறுபது வரை, கண்ணாமூச்சி, புதுவெள்ளம், சொந்தங்கள் வாழ்க, சத்திய சுந்தரம், காசேதான் கடவுளடா, தாய் பீது சத்தியம், வாலிப விருந்து, முயலுக்கு மூணுகால், ராம் லட்சுமணன், சொந்தம், சிட்டுக்குருவி, எதிர் வீட்டு ஜன்னல், அத்தை மகள், வழிகாட்டி,

மூன்றெழுத்து, பசி, ஒளி பிறந்தது, பாலாபிஷேகம், பொல்லாதவன், நான் போட்ட சவால், முரட்டுக்காளை, ஆதி பராசக்தி, காரைக்கால் அம்மையார், வா ராஜா வா.

நன்றி: முகநூல் பதிவு

You might also like