பாரதிராஜா வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் ‘ஆகோள்’!

பாடலாசிரியர், எழுத்தாளர் கபிலன் வைரமுத்து எழுதிய ‘ஆகோள்’ என்ற புதினத்தை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார். இந்த நாவல் ஆங்கிலேயரின் குற்றப்பரம்பரை சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவாக உருவாகியுள்ளது. 

ஆகோள் என்று பெயரிடப்பட்ட இந்த நாவல், பிரிட்டிஷ் அரசின் குற்றப்பரம்பரைச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன்வைக்கிறது. நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

1920-ஆம் ஆண்டு கை ரேகை சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் நாவலின் ஒரு முக்கிய பகுதியாக இடம்பெற்றிருக்கிறது.

ஆகோள் நாவல் பற்றிப் பேசிய கபிலன் வைரமுத்து, “சங்க காலத்தில் சிற்றரசுகளுக்கு இடையே நிகழ்ந்த போர்களில் எதிராளிகளின் ஆடு மாடுகளை களவாடி வரும் செயலுக்கு ஆகோள் என்று பெயர். இது களவுச் செயலாகவும் வீரச் செயலாகவும் பார்க்கப்பட்டது.

எதிராளியின் வளங்களில் ஒன்றைக் களவாடும் செயல் என்ற பொருளில் என் நாவலுக்கு ஆகோள் என்று தலைப்பட்டிருக்கிறேன்.

இந்த நாவலில் இடம்பெறும் நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு போராட்டம் குறித்து இரண்டு ஆண்டுகளாக கள ஆய்வு செய்து எழுதியிருக்கிறேன்” என்றார்.

You might also like