ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகத்தைப் பாராட்டிய கமல்!

ஒய்ஜிபி தொடங்கிய யுஏஏ குழுவின் எழுபதாம் ஆண்டு, நாடக உலகில் ஒய் ஜி மகேந்திரனின் 61 ஆம் ஆண்டு போன்ற பல சிறப்பம்சங்களுடன் அவரது புதிய நாடகமான சாருகேசி பலரின் பாராட்டை பெற்றுவருகிறது.

இதற்கு மேலும் சிறப்புசேர்க்கும் விதமாக கமல்ஹாசன் சாருகேசி நாடகத்தை நேரில் சென்று கண்டு மகிழ்ந்தார். நாடகம் முடிந்த உடன் குழுவினருடன் கலந்துரையாடினார்.

இதுபற்றிப் பேசிய ஒய் ஜி மகேந்திரன், “நாடகத்தைப் பார்த்த கமல்ஹாசன் வெகுவாக பாராட்டினார்.

இதுபோன்ற நாடகங்கள் தனக்கு மிகவும் புடிக்கும் என்று தெரிவித்தார்.

எங்கள் இருவருக்கும் 50 வருட கால நட்பு. மேலும் 20 படங்கள் மேல் ஒன்றாக நடித்திருக்கிறோம். எங்களுக்கிடையே உள்ள நட்பை பற்றியும் அவர் நினைவுகூர்ந்தார்” என்றார்.

தொடர்ந்து பேசிய மகேந்திரன், “சாருகேசி நாடகத்தை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்று தன் எண்ணத்தை கமல் அவர்கள் வெளிப்படுத்தினார்.

அவ்வாறு படமாக எடுக்கப்பட்டால், அவரது ஒத்துழைப்பு வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன்.

அதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டார்.

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன் குடும்பத்தினருடன் சென்று சாருகேசி நாடகத்தை பார்த்து, நாடகக் குழுவினரை தனது வீட்டிற்கே அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.

பா. மகிழ்மதி

You might also like