புதிய நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கர் பெயர்!

தலைநகர் டெல்லியில் கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் புதிய நாடாளுமன்றத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார்.

கடந்த மாதம், அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை அவர் திறந்து வைத்தார்.

தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா மாநில சட்டசபையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு பி.ஆர்.அம்பேத்கர் பெயரை வைக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக அந்த தீர்மானத்தை முன் மொழிந்த மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்றார்.

இதேபோல் ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள மின்சார சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாநில எரிசக்தி துறை அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி, இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இந்த மசோதா விவசாயிகள், ஏழைப் பிரிவினர் மற்றும் மின்துறை ஊழியர்களின் நலன்களுக்கு எதிரானது என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.

You might also like