வாஜ்பாய் அனுப்பிய வாழ்த்துத் தந்தி!

இந்தப் படம் 1986, மே 3ம் தேதி டெசோ மாநாட்டிற்கு  வாஜ்பாய் வந்தபோது எடுக்கப்பட்டது.

1986-ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் (Race Course) டெசோ மாநாடு தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் என்.டி. ராமராவ், வாஜ்பாய் என பல அகில இந்தியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது வாஜ்பாயையும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த எச்.என். பஹு குணாவையும் மறுநாள் விடியற்காலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது பா.ஜ.கவின் மூத்தத் தலைவரான ஜனா கிருஷ்ணமூர்த்தியும் உடனிருந்தார்.

அவர்கள் தங்கியிருந்த பாண்டியன் ஓட்டலிலிருந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, சித்திரை வீதிகளையும் சுற்றிக் காண்பித்தேன்.

அங்கிருந்து புறப்படும்போது, வாஜ்பாய் “இட்லி, தோசை சாப்பிடலாம்” என்றார். உடன் வந்திருந்த பஹுகுணாவும் இந்தியில் “சாப்பிடலாமே” என்று சொல்ல, காலேஜ் ஹவுஸ் உணவு விடுதிக்கு இருவரையும் அழைத்துச் சென்றேன்.

காலை 9.00 மணியளவில் ஓட்டலுக்கு வெளியே வந்ததும், “எங்களை யாருக்கும் அடையாளம் தெரியாதவாறு அமைதியாக கோவிலைச் சுற்றிக் காண்பித்து, நல்ல உணவையும் சாப்பிட வைத்ததற்கு நன்றி” என்றார் வாஜ்பாய்.

மீண்டும் பாண்டியன் ஓட்டலுக்குத் திரும்பியபோது வாஜ்பேயிடமும், பஹுகுணாவிடமும் அடுத்த வாரம் நடைபெற இருந்த என்னுடைய திருமண அழைப்பிதழைக் கொடுத்தேன்.

வாஜ்பேயி அவர்கள் டெல்லிக்குச் சென்ற பின், திருமண நாளான 12-05-1986 அன்று, அதனை நினைவில் வைத்து எனக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தார்.

-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

You might also like