இயக்குநர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

சினிமா என்பது பல கலைத்துறைகளின் சங்கமம். தொடர்பில்லாத துறைகளில் இருந்து பல திறமையானவர்களை ஒன்றிணைத்து அடையாளம் காட்டும் தொடர்பு சாதனம்.

இப்படிப்பட்ட துறையில் பிரமாண்டத்தின் மூத்தப் பிள்ளையாக இருக்கும் இயக்குநர் ஷங்கருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்துள்ளது வேல்ஸ் பல்கலைக் கழகம்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குநர் ஷங்கரின் வாழ்க்கைக் குறிப்பில் தொடங்கி அவரது திரைப்படைப்புகளைப் பாராட்டியுள்ளார்கள்.

கும்பகோணத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தார். கல்லூரி நாட்களில் எழுதத் தொடங்கினார். கலை நிகழ்ச்சிகள் பலவற்றை நிகழ்த்தினார்.

இவரின் திறமை இவரை தனித்து அடையாளப்படுத்தி பல கைதட்டளையும் விருதுகளையும் கொண்டுவந்து குவித்தது. இது இவருக்கு நடிப்பு ஆர்வத்தைத் தூண்டியது. பின்னர், அவர் ஒரு அமெச்சூர் நாடகக் குழுவில் சேர்ந்தார்.

அங்கு அவர் ஐந்து ஆண்டுகள் நன்கு பயிற்சிப் பெற்றார். இவரின் திறமை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் கவனத்தை ஈர்த்தது. அவரை உதவியாளராக அழைத்துக் கொண்டார்.

1986 – 87 களுக்குப் பிறகு, சொந்த முயற்சியில் சிறு சிறு விளம்பரப் படங்களை எடுத்து இயக்குநரானார். 1993 இல் வெளியான ஜென்டில்மேன் என்ற திரைப்படம் இயக்குனர் ஷங்கர் என்ற ஜாம்பவானை தமிழ்த் திரையுலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டியது.

அதைத் தொடர்ந்து வெளிவந்த காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி, எந்திரன்… என இவர் எடுத்த பல திரைப்படங்கள் வணிகரீதியாக மாபெரும் வெற்றிபெற்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளையத் தளபதி விஜய் என இன்றைய திரையுலகின் சூப்பர் ஸ்டார்களைக் கொண்டு வெற்றிமேல் வெற்றி சூடியவர் இவர்.

அவரது படங்கள் பிலிம்பேர் விருதுகள், மாநில விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் என அனைத்துத் தரப்புகளிலும் விருதுகளை வென்றுள்ளன.

இன்றைய இளைய தலைமுறையினருக்கும் நாளைய படைப்பாளர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கிவரும் தமிழ் சினிமாவின் பிரம்மாண்டப் பெருமிதம் இயக்குநர் ஷங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி மகிழ்வதில் பெருமிதம் கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் வேல்ஸ் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

You might also like