முதல் டி-20: வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய இந்திய அணி!

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் முதல் 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி 64 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில், சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 19 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது.

இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி திணறியது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஷமார் புரூக்ஸ் 20 ரன்களும், நிகோலஸ் பூரன் 18 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி சார்பில் அஷ்வின், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

You might also like