இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போடியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஜேசன் ராய் 41 ரன்கள் எடுத்தார். பென் ஸ்டோக்ஸ் 27 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஜோஸ் பட்லர் 60 ரன்கள் குவித்தார். இதனால் இங்கிலாந்து அணி 45.5 ஓவர்கள் முடிவில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களும், சாஹல் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 260 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது.

தொடக்க வீரரும் கேப்டனுமான ரோகித் சர்மா 17 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தவான் ஒரு ரன்னுடன் வெளியேற, கோலி 17 ரன் அடித்தார். சூரியகுமார் யாதவ் 16 ரன்னுக்கு அவுட்டானார். எனினும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டதுடன், இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தியது.

பாண்ட்யா 55 பந்துகளில் 71 ரன்களை குவித்தார். சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் சதம் அடித்தார். இதனால் இந்திய அணி 42.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதோடு, 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.

You might also like