தமிழில் தடம் பதிக்கும் பிரபல மலையாள இயக்குநர்!

சௌந்தரராஜா மற்றும் தேவானந்தா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘சாயாவனம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம்பதிக்கிறார் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் அனில்.

நாற்பதுக்கும் அதிகமான மலையாள படங்களை இயக்கியுள்ள இயக்குநர் அனில், முன்னணி மலையாள ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ளார். அவரது சமீபத்திய படம் ‘மையா’ இந்தியில் ரிலீசுக்குத் தயாராக உள்ளது.

இயக்குநர் அனில் இயக்கிய ‘பகல்பூரம்’ படத்தின் மூலம் தாமோர் சினிமா தன் தயாரிப்பு பயணத்தைத் தொடங்கியது.

இந்த தயாரிப்பு நிறுவனம் இதுவரை ‘வாழ்கண்ணாடி’, ‘இவர்’, ‘சந்திரோற்சவம்’, ‘குருஷேத்ரா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது.

கடைக்குட்டி சிங்கம், தர்மதுரை, சுந்தரபாண்டியன் படப்புகழ் சௌந்தரராஜா ‘சாயாவனம்’ படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

சௌந்தரராஜா கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படம் இது.

இதற்கு முன் ‘ஒரு கனவு போல’, ‘காமெடி மன்னன்’ கவுண்டமணியுடன் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படங்களில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார்.

இயக்குநர் அனில், “படத்தின் தலைப்பு ‘அடர்ந்த காடு’ என்று பொருள்படும். படத்தில் வரும் கதாபாத்திரங்களின் குணத்தை இது குறிக்கும். தேவானந்தா நடிக்கும் சீதை கேரக்டரைச் சுற்றி கதை நகர்கிறது.

கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்துகொண்ட சௌந்தரராஜா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்” என்றார் இயக்குநர் அனில்.

“படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டன.

மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது என நான் நம்புகிறேன்.

கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக இயற்கை பயன்பட்டுள்ளது.

கதாபாத்திரங்கள் காடுகளைப்போல அடர்த்தியானவர்கள். அவர்களிடம் பல ரகசியங்கள் உள்ளன” என்கிறார் அனில்.

தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பா. மகிழ்மதி

You might also like